சனி, 25 செப்டம்பர், 2010

இறப்பின் சோகம் இதயத்தில் இருந்தாலும்; இறைத்தூதர் சொல்லிவிட்டால்...

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்கள்;
தம் தந்தை (அபூ சுஃப்யான்(ரலி) அவர்களின் இறப்புச் செய்தி வந்தபோது (அன்னை) உம்மு ஹபீபா(ரலி) நறுமணத்தைக் கொண்டுவரச் சொல்லி அதனைத் தம் இரண்டு கைகளிலும் தடவினார்கள். மேலும், (பின்வருமாறு) கூறினார்கள்: எனக்கு இந்த நறுமணம் தேவையே இலை. ஆயினும், நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்த ஒருவருக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர' என்று சொல்லக் கேட்டுள்ளேன்.

ஆதாரம்; நூல் புஹாரி எண் 5345


ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்கள்;

(அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் சகோதரர் இறந்த சமயம் அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள் நறுமணப் பொருள் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி பூசிக்கொண்டார்கள்.

பிறகு, 'இதோ! (பாருங்கள்.) அல்லாஹ்வின் மீதாணையாக எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சொற்பொழிவு) மேடையில் இருந்தபடி 'அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்த ஒருவருக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், தன் கணவருக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர!' என்று கூறக் கேட்டுள்ளேன்' என்றார்கள்.

அன்பானவர்களே! மேற்கண்ட இரு பொன்மொழிகளையும் நாம் பலமுறை படித்திருப்போம். ஆனால் நடைமுறையில் கொண்டுவரவில்லை என்பதே உண்மை. தமது தந்தை- சகோதரர்- கணவர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர் மரணிக்கும்போது, அதனால் அதிகம் வேதனைப்படுவது பெண்கள்தான்.

கணவர் நீங்கலாக , மற்றவர்களின் இறப்பு விஷயத்தில் நம்முடைய சோகம் எத்தனை நாட்கள் நீடிக்கவேண்டும் என்பது கூட நமது பெண்களில் பெரும்பாலோருக்கு தெரிவதில்லை. தெரிந்தவர்களும் அமுல்படுத்துவதில்லை. காரணம் அங்கே அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புதான் பெரிதாக தெரிகிறதே தவிர, இறைத்தூதர்[ஸல்] அவர்களின் கட்டளை என்பது பெரிதாக தெரிவதில்லை.


பொறுமை என்பதே துன்ப நேரத்தில் கடைபிடிப்பதுதான் என்ற நபிகளாரின் பொன்மொழியை மறந்து, தனது சோகத்தை மாதக்கணக்கில் கொண்டு, கணவன் மற்றும் பிள்ளைகள் நலனை புறக்கணிக்கும் பெண்களைப் பார்க்கிறோம். ஆனால் மேற்கண்ட ஹதீஸ்களில் நம்முடைய அன்னையர்கள், தனது தந்தை இறந்த சோகத்தைவிட , தனது சகோதரன் இறந்த சோகத்தைவிட, இறைத்தூதர்[ஸல்] அவர்களின் கட்டளையை பெரிதாக கருதி, மூன்று நாட்கள் முடிந்தவுடன் கணவருக்காக தனைகளை அலங்கரித்துக் கொள்கிறார்கள் எனில், அதுதான் சஹாபியர்கள்.

நம்முடைய அன்னையர்களை முன்மாதிரியாக கொண்டு நாமும் குறிப்பாக நமது சமுதாய பெண்கள் இழப்பு விஷயத்தில் பொறுமையை மேற்கொள்வோமாக! எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு அருள்புரிவானாக!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக