திங்கள், 28 செப்டம்பர், 2009

இறைத்தூதரின் உடையே இறுதி உடையாக விருப்பம் கொண்டவர்..!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அபூ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்.
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) 'ஒரு பெண்மணி (நபி(ஸல்) அவர்களிடம்) புர்தாவைக் கொண்டு வந்தார்!' எனக் கூறிவிட்டு, 'புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். 'ஆம்! அது ஓரப்பகுதி நெய்யப்பட்ட ஒரு சால்வை!" என்று கூறப்பட்டது. தொடர்ந்து ஸஹ்ல்(ரலி) அறிவித்தார். அப்பெண்மணி, 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு அணிவிப்பதற்காக இதை நான் என் கையால் நெய்தேன்!" என்றார். நபி(ஸல்) அவர்கள் தமக்கு அது தேவைப்பட்டதால் அதைப் பெற்றார்கள். (அவர்கள் உள்ளே சென்றுவிட்டு) எங்களிடம் திரும்பி வந்தபோது அதை வேட்டியாக அணிந்திருந்தார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருமனிதர். 'இறைத்தூதர் அவர்களே! இதை நான் அணிவதற்காக எனக்குத் தாருங்கள்!" என்றார். நபி(ஸல்) அவர்கள் 'சரி தருகிறேன்!" என்று சொல்லிவிட்டு, சபையில் அமர்ந்திருந்தார்கள். பிறகு (உள்ளே சென்றுவிட்டுத்) திரும்பி வந்து அதைச் சுருட்டி, (அதைத் தமக்குத் தரும்படி) கேட்ட மனிதருக்கு அதை அனுப்பி வைத்துவிட்டார்கள். அப்போது அவரிடம் மக்கள், 'நீர் செய்தது நன்றன்று; கேட்பவரை வெறுங்கையாக திருப்பியனுப்ப மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே அவர்களிடம் அதைக் கேட்டு விட்டீரே!' எனக் கூறினார். அதற்கு அம் மனிதர், 'நான் மரணிக்கும் நாளில் அது எனக்குக் கஃபனாக ஆக வேண்டும் என்பதற்காகவே அதைக் கேட்டேன்!" என்றார். அது அவ்வாறே, அவரின் கஃபனாக ஆனது!
ஆதாரம்;புஹாரி எண் 2093

இந்த பொன்மொழியில், நபி[ஸல்] அவர்கள் அணிந்த ஆடையை கேட்டு வாங்கிய ஸஹாபி, அதை தான் அணிந்துகொள்வதற்காக வாங்கவில்லை. மாறாக தனது இறுதி ஆடையாக [கஃபனாக] இறைத்தூதர் அணிந்த ஆடை இருக்கவேண்டும் என்று விரும்பியே வாங்கியதாக கூறுகிறார்கள் என்றால், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மீது இந்த தோழர்கள் கொண்ட அன்பிற்கு எல்லையும் உண்டோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக