வெள்ளி, 3 செப்டம்பர், 2010

இறைத்தூதர் [ஸல்] வெறுத்த உணவு எனக்கும் வெறுப்பானதே!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.
அபூ அய்யூப் அல் அன்ஸாரி[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;

இறைத்தூதர்[ஸல்] அவர்கள் [மதீனா வந்த போது] எனது வீட்டிலேயே தங்கினார்கள். நபி[ஸல்] அவர்கள் கீழ் தளத்திலும், நாங்கள் மேல் தளத்திலும் தங்கியிருந்தோம்.  ஓர் இரவில் நான்  உணர்வு பெற்று, நாம் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் தலைக்கு  மேலாக நடமாடுவதா..? என்று சொல்லிக்கொண்டு [தலைக்கு  நேரான பகுதியை தவிர்த்து] மற்றொரு பகுதியில் [நானும் எனது வீட்டாரும்] இரவைக் கழித்தோம்.

பின்னர் நபி[ஸல்] அவர்களிடம் சொன்னபோது அவர்கள், 'கீழ் தளமே மிகவும் வசதியானது' என்று கூறினார்கள். நான் 'நீங்கள் கீழே இருக்க நான் மேலே இருக்கமாட்டேன்' என்று கூறினேன். எனவே நபி[ஸல்] அவர்கள்  மேல்தலத்துக்கும், நான் கீழ்தளத்திற்கும் இடம் மாறிக்கொண்டோம்.

நான் நபி[ஸல்] அவர்களுக்காக உணவு தயாரித்தேன். அது [நபி[ஸல்] அவர்களிடம் சென்றுவிட்டு] என்னிடம் கொண்டுவரப்பட்டபோது, [உணவுப் பாத்திரத்தில்] நபி[ஸல்] அவர்கள் விரல் பட்ட இடத்தைப் பற்றிக்கேட்பேன். அவர்கள் விரல்பட்ட இடத்தைக் கண்டறிந்து  அந்த இடத்தில்  நான்  சாப்பிடுவேன்.

இவ்வாறாக  [ஒருநாள்] வெள்ளைப் பூண்டு உள்ள ஓர் உணவைத் தயாரித்தேன். [நபி[ஸல்] அவர்களிடம்  சென்றுவிட்டு] அது திருப்பிக் கொண்டுவரப் பட்டபோது, நபி[ஸல்] அவர்களின் விரல்பட்ட இடத்தைக் கேட்டேன். அப்போது நபி[ஸல்] அவர்கள் உண்ணவில்லை என்று என்னிடம் கூறப்பட்டது. அதைக் கேட்டு  நான்  பதறினேன்.

மேல்தளத்திற்கு சென்று அது[வெள்ளைப்  பூண்டு உணவு] தடை செய்யப்பட்டதா..? என்று நபி[ஸல்] அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை. ஆயினும் நான் அதை விரும்பவில்லை என்று கூறினார்கள்.

'அவ்வாறாயின் தாங்கள் வெறுப்பதை அல்லது வெறுத்ததை நானும் வெறுக்கிறேன் என்று கூறினேன்'. அப்போது நபி[ஸல்] அவர்களிடம் [வேத அறிவிப்பு] வந்துகொண்டிருந்தன.

ஆதாரம்; முஸ்லிம்.

அன்பானவர்களே! இந்த பொன்மொழி, இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மீது அருமை சஹாபாக்கள் கொண்டிருந்த நேசத்திற்கு மற்றொரு சான்றாகும். இதில் சம்மந்தப்பட்ட அபூ அய்யூப்[ரலி] அவர்கள் நபியவர்கள் மீது கொண்ட அபரீதமான மதிப்பும், நேசமும் வெளிப்படுவதைக் காணலாம். இறைத்தூதர் [ஸல்] அவர்களுக்கு மேலாக நாம் தங்குவதா; அவர்களின் தலைக்கு  மேலாக நாம் நடமாடுவதா என்று அஞ்சியதாகட்டும், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் பூண்டு சம்மந்தப்பட்ட உணவை சாப்பிடாதது கண்டு பதறியதாகட்டும், மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டு, இறைத்தூதர்[ஸல்]  அவர்கள் மனம் விரும்பாத ஒரு உணவு தனக்கு தடையில்லை என்றாலும், அல்லாஹ்வின் தூதருக்கு விருப்பமில்லாத உணவு எனக்கும் வெறுப்பானதே  என்று முடிவெடுத்ததாக்கட்டும், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கரம்பட்ட இடத்தில் உண்ணும் அந்த பாங்காகட்டும்; இவையெல்லாம் அபூ அய்யூப்[ரலி] அவர்களின் பண்பையும், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மீது கொண்ட நேசத்தையும் பதிவு செய்யும் வரலாற்று சுவடுகள்.

ஆம்! அந்த இனிய தோழர்களுக்கு இன்பம் என்றால் இறைத்தூதரின் சிரிப்பும்; துன்பம் என்றால், இறைத்தூதரின் வாட்டமும் தானே!
அல்லாஹ் அந்த தோழர்களை பொருந்திக் கொள்வானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக