வெள்ளி, 29 அக்டோபர், 2010

உயர்வான அல்லாஹ் நடத்திவைத்த, 'அன்னையின்' உன்னத திருமணம்'!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று ஒரு சொல் வழக்கு உண்டு. இது சரியோ- தவறோ நாமறியோம். ஆனால் சொர்க்கத்தை உருவாக்கிய உயர்ந்தோனாகிய அல்லாஹ் நடத்தி வைத்த ஒரே திருமணம் என்ற பெருமை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை மணந்த அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்[ரலி] அவர்களின் திருமணத்திற்கே சேரும்.

இறைத்தூதர்[ஸல்] அவர்கள் தனது மாமி மகள் ஸைனப்[ரலி] அவர்களை தனது வளர்ப்பு மகனாக இருந்த ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி)[ரலி] அவர்களுக்கு மணமுடித்து வைத்தார்கள். அவ்விருவருக்கும் பிணக்கு ஏற்படவே, பின்பு நடந்த சம்பவத்தை திருக்குர்ஆனில் அல்லாஹ் விளக்குகிறான்;
وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَاهُ فَلَمَّا قَضَى زَيْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا لِكَيْ لَا يَكُونَ عَلَى الْمُؤْمِنِينَ حَرَجٌ فِي أَزْوَاجِ أَدْعِيَائِهِمْ إِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًا وَكَانَ أَمْرُ اللَّهِ مَفْعُولًا


(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். [33 ;37 ]

உயர்ந்தோனாகிய அல்லாஹ்வால் நடத்தப்பட்ட இந்த திருமணம் குறித்து  ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள். 'உங்களை (நபி(ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத்தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி(ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்' என்று சொல்வார்கள். [புகாரி 7240 ]

இறைத்தூதருக்கும் இத்திருமணத்தில் எல்லையில்லா ஆனந்தம்;

ஸாபித் அல்புனானீ(ரஹ்) அறிவித்தார்

(அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் திருமணம் குறித்து அனஸ்(ரலி) முன்னிலையில் பேசப்பட்டது. அப்போது அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ஸைனப்(ரலி) அவர்களுக்காக (அன்னாரை மணந்து பின்) வலீமா - மணவிருந்தளித்த அளவு வேறு எவரை மணந்தபோதும் அவர்கள் மணவிருந்தளிக்க நான் கண்டதில்லை; நபி(ஸல்) அவர்கள் (ஸைனப்(ரலி) அவர்களை மணந்ததற்காக) ஓர் ஆட்டை (அறுத்து) வலீமா விருந்தளித்தார்கள்.[புகாரி 5171 ]



அல்லாஹ், ஸைனப் பின்த் ஜஹ்ஷ்[ரலி] அவர்களை பொருந்திக் கொள்வானாக!

இறைத்தூதரின் மனைவியரில் ஆயிஷா[ரலி]க்கு தனிச்சிறப்பு!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மனைவியரில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு இருந்தாலும், அவர்களில் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களுக்கு தனிச்சிறப்பு இருப்பதைக்  காணலாம். அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் தனிச்சிறப்புக்கு காரணம் அவர்களின் சீரிய  அறிவாற்றலும், நினைவாற்றலும் என்றாலும் கூட, இவையல்லாத வேறு சில தனிச்சிறப்புகளும் அண்ணைக்கு உண்டு.

அண்ணையோடு இருக்கும் வேளையில்தான் அல்லாஹ்வின் வஹீ அருளப்படுதல்;

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்கள்;


மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபியவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுத்து வந்தனர். (அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து) ஆயிஷா(ரலி) கூறினார்: (நபியவர்களின் துணைவியரான) என் தோழிகள் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் ஒன்று கூடி, 'உம்மு ஸலமாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபிகளார் ஆயிஷாவிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆயிஷா நபி(ஸல்) அவர்களுக்கு நலம் நாடுவதைப் போன்றே நாமும் அவர்களுக்கு நலம் நாடுகிறோம். எனவே, தமக்கு (தரவிரும்பும்) அன்பளிப்புகளை தாம் இருக்குமிடத்தில்... அல்லது செல்லுமிடத்தில்... (அது எவருடைய வீடாக இருந்தாலும் அங்கு) அனுப்பி வைத்து விடவேண்டும் என்று மக்களுக்குக் கட்டளையிடுமபடி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்" என்று கேட்டுக் கொண்டனர்.

(உம்மு ஸலமா(ரலி) கூறினார்கள்:)

நான் நபி(ஸல்) அவர்களிடம் இதைச் சொல்ல, நபி(ஸல்) அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. மீண்டும் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் திரும்பி வந்தபோது நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அப்போதும் அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. மூன்றாம் முறை வந்த போதும் நான் அவர்களிடம்  இதே கோரிக்கையைச் சொன்னேன். அப்போது அவர்கள், 'உம்மு ஸலமாவே! ஆயிஷாவின் விஷயத்தில் எனக்கு மனவேதனை தராதே. ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் அவரல்லாத வேறெந்தப் பெண்ணின் போர்வைக்குள் நான் இருக்கும் போதும் எனக்கு வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) அருளப்பட்டதில்லை" என்று பதிலளித்தார்கள்.
நூல்; புகாரி எண்; 3775

மேற்கண்ட பொன்மொழி, அன்னை ஆயிஷா[ரலி] நீங்கலாக, வேறு மனைவியரின் போர்வைக்குள் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதர் [ஸல்]அவர்களுக்கு வஹீ அருளப்படவில்லை என்று கூறுவதின் மூலம் அன்னையின் சிறப்பை உணரலாம்.

அண்ணைக்கு அமரரின்[வானவர்] ஸலாம்;
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நாள், 'ஆயிஷே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார்" என்று கூறினார்கள். நான், சலாமுக்கு பதில் கூறும் முகமாக 'வ அலைஹிஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு' அவரின் மீதும் சலம் (இறை சாந்தி) பொழியட்டும். மேலும், அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும்" என்று பதில் முகமன் சொல்லிவிட்டு, 'நான் பார்க்க முடியாதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறினேன்.
 
நூல்;புகாரி எண்;  3768 
 
மலக்குகள் சுயமாக எதையும் செய்யக்கூடியவர்கள் அல்ல. அல்லாஹ்வின் கட்டளையை மட்டுமே செய்யக்கூடியவர்கள். எனவே அன்னை ஆயிஷா[ரலி] அவர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைப்படியே ஜிப்ரீல்[அலை]  அவர்கள் ஸலாம் சொல்லியுள்ளார்கள். எனவே இதிலும் அண்ணைக்கு தனிச்சிறப்பு இருப்பதை உணரலாம்.
 
'ஸரீத்' என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் பெற்றவர்;
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"


(உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) உணவுகளைக் காட்டிலும் 'ஸரீத்' என்றும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்.

நூல்;புகாரி எண்; 3770 

அன்னையின்  சிறப்புகள் இன்னும் ஏராளம் உண்டு. அவைகளை அவ்வப்போது அசைபோடுவோம். அல்லாஹ்வின் அருள் பெறுவோம்.

வெள்ளி, 22 அக்டோபர், 2010

உஸ்மான்[ரலி] அவர்கள், இரண்டாம் பாங்கை உருவாக்கவில்லை; பீஜே மீண்டும் பல்டி!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
''நபித்தோழர்களும்- நமது நிலையும்'' என்ற நூலில், வஹிக்கு  முரணான நபித்தோழர்களின் நடவடிக்கைகள் என்ற தலைப்பில், உஸ்மான்[ரலி] அவர்கள் ஜும்மாவுக்கு இரண்டு பாங்குகளை உருவாக்கி நபிவழிக்கு மாறு செய்து விட்டார் என்ற வாதத்தை வைத்து,

''வணக்கத்தில் ஒரு நடைமுறையை நபி[ஸல்] அவர்கள் காட்டித்தந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து வந்த இரு கலீபாக்களும் அதை செயல்படுத்தியுள்ளனர் . ஆனால் மக்கள் உரை கேட்க வருவதில்லை என்பதற்காக உஸ்மான்[ரலி] அவர்கள் 'சுயமாக' இன்னொரு அறிவிப்பை அதிகமாக்கினார்கள். எதோ ஒரு காரணத்தால் நபிவழியை கூட சில நபித்தோழர்கள் மாற்றியுள்ளார்கள். அல்லது இல்லாததை அதிகப்படுத்தியுள்ளார்கள் என்பது இதன்மூலம் தெரிகிறது என்று எழுதியிருந்தார் பீஜே..

உஸ்மான்[ரலி] அவர்கள் இரண்டாம் பாங்கை உருவாக்கவில்லை; மாறாக அவர்கள் கடைத்தெருவில் ஒரு அறிவிப்பைத்தான் செய்தார்கள் என்று, இந்த நூலை வெளியிடுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இலங்கை விவாதத்தில் பீஜே கூறியிருந்தார். ஆனால் அதிலிருந்து பல்டியடித்து, சஹாபாக்களை நபிவழிக்கு முரனானவர்களாக காட்டும் நோக்கில், உஸ்மான்[ரலி] குறித்து தனது மேற்கண்ட நூலில், உஸ்மான்[ரலி] இரண்டாம் பாங்கை உருவாக்கினார் என்று அபாண்டமாக,  சுவனத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட ஒரு நபித் தோழரை குற்றம் சுமத்தினார் பீஜே. அதை அதை விமர்சித்து  நாம் கடந்த  ஓராண்டுக்கு முன் எழுதிய ஆக்கத்தை படிக்க இங்கே கிளிக் செய்க;http://sahaabaakkal.blogspot.com/2009/10/blog-post_11.html

இப்போது மீண்டும் இங்கு இதைப் பற்றி எழுதுவதற்கு காரணம், பீஜே மார்க்க விஷயத்தில் எவ்வாறெல்லாம்  பல்டியடிப்பார் என்று காட்டவே. இப்போது அவரது வலைதளத்தில் ஒரு சகோதரர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பீஜே,  உஸ்மான்[ரலி] அவர்கள் ஜும்மாவுக்கு இரண்டாம் பாங்கை உருவாக்கவில்லை; மக்கள் பயான் கேட்க தாமதமாக வருவதால், கடைத்தெருவில் ஒரு அறிவிப்பைத்தான்  செய்தார்கள். எனவே உஸ்மான்[ரலி] அவர்கள் பித்அத்தை உருவாக்கவில்லை  என்று கூறி மீண்டும் பல்டியடித்துள்ளார். அவரது உரையை கேட்க இங்கு கிளிக் செய்க; http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/jummavil_usman_2bangu/

உஸ்மான் ரெண்டு பாங்கை உண்டாக்கிவிட்டார் என்று மேடை தோறும் நீங்களும், உங்கள் ஆதரவாளர்களும் முழங்கி, எழுத்துக்களில் வடித்து அந்த உயர்வான நபித்தோழரை ஃபித்அத் வாதியாக  காட்டினீர்களே! அதற்கு அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

சத்திய சஹாபாக்கள் குறித்து இவர் சொன்ன அத்துணை அபாண்டங்களையும், இவர் வாயாலேயே மறுக்க வைத்து அந்த நல்லறத்  தோழர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்துவான் இன்ஷா அல்ல்லாஹ். அந்த மனிதநேய செம்மல்கள்  மீது பீஜே போன்றோர் பூசிய கறைகள் கழுவப்பட்ட நாம் அல்லாஹ்விடம் கையேந்துவோம்.

சனி, 16 அக்டோபர், 2010

இவர் சத்தியமிட்டார்; இறைவன் அதை நிறைவேற்றினான்!

بســــم الله الـر حـمـن الرحـــيــم


அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்;


என் தந்தையின் சகோதரி - ருபய்யிஉ பின்த்து நள்ர், - ஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தாரிடம் என் குலத்தார், 'இழப்பீட்டுத் தொகையைப் பெறுங்கள்; அல்லது (ருபய்யிஉவை) மன்னித்து விடும்படி சொல்லுங்கள்" என்று கோரினார்கள்.

அவர்கள் (இரண்டில் எதற்குமே ஒப்புக் கொள்ள) மறுத்துவிட்டார்கள். எனவே, எங்கள் குலத்தார் நபி(ஸல்) அவர்களிடம் (விபரம் கூறி, தீர்ப்புப் பெற) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் (ருபய்யிஉவைப்) பழி வாங்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் இப்னு நள்ரு(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! (என் சகோதரி) ருபய்யிஉவின் முன்பல் உடைக்கப்படுமா? அப்படி நடக்காது. தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவனின் மீது சத்தியமாக! அவளுடைய முன்பல் உடைக்கப்படாது" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும். (எனவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)" என்று கூறினார்கள். பிறகு, அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக் கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்" என்றார்கள்.
ஆதாரம்; புகாரி எண்; 2703

அன்பானவர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யும் அனைத்தையும் நம்மில் பலர்  நிறைவேற்றுவதில்லை. ஆனால் இந்த நபித் தோழர் அனஸ் இப்னு நள்ர்[ரலி] அவர்கள் தனது சகோதரி விஷயத்தில், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து, அல்லாஹ்வின் மீது ஆணையாக! என் சகோதரிக்கு தண்டனை நிறைவேற்றப் படாது என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அவர்களின் சத்தியத்தை அங்கீகரித்து, ஏற்கனவே ஈட்டுத்தொகை பெறமாட்டோம் என்று சொன்னவர்களின் மனதை மாற்றி, ஈட்டுத்தொகை பெற வைப்பதன் மூலம், அனஸ் இப்னு நள்ர்[ரலி] அவர்களின் சகோதரியை தண்டனையிலிருந்தும்  பாதுகாத்து, அதன் மூலம் தனது நல்லடியார் அனஸ் இப்னு நள்ர்[ரலி] அவர்களின் சத்தியத்தையும் உண்மைப் படுத்துகிறான் என்றால், அதை நபியவர்களும் சிலாகித்து சொல்கிறார்கள் என்றால், இங்கே சஹாபாக்களின் சிறப்பு அதிலும் குறிப்பாக அனஸ் இப்னு நள்ர்[ரலி][ அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்ட செய்தி நமக்கு புலப்படுகிறது.

மேலும், இந்த  அனஸ் இப்னு நள்ர்[ரலி] அவர்கள், உஹத் களத்திலே முஸ்லிம்களுக்கு தோல்விமுகம் கண்ட நேரத்தில், 'சுவனத்தின் வாசனையை நான் உஹது பள்ளத்தாக்கில் நுகர்கிறேன்'' என்று கூறியவர்களாக எதிரிகளின் கூட்டத்திற்குள் புகுந்து போரிட்டு வீர மரணம் அடைந்த ஒரு ஷஹீத் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 8 அக்டோபர், 2010

உபதேசம் இவர்களுக்கு பயனளித்தது; ஏனெனில் இவர்கள் முஃமீன்கள்!

بســــم الله الـر حـمـن الرحـــيــم
நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல்(ரஹ்) கூறினார்;

 ஆயிஷா(ரலி) (தம் வீடு ஒன்றை) 'விற்றது தொடர்பாக' அல்லது 'நன்கொடையாக வழங்கியது தொடர்பாக' (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (அதிருப்தியடைந்து) 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும். அல்லது தான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு ஆயிஷா(ரலி), 'அவரா இப்படிக் கூறினார்?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்' என்றனர். அப்போது ஆயிஷா(ரலி), 'இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்' என்று கூறிவிட்டார்கள்.

 நீண்ட நாள்கள் பேச்சு வார்த்தை நின்றுபோனபோது ஆயிஷா(ரலி) அவர்களிடம் (தமக்காகப்) பரிந்து பேசுமாறு (முஹாஜிர்களை) இப்னு ஸுபைர்(ரலி) கேட்டுக்கொண்டார்கள். (அவ்வாறே அவர்கள் பரிந்து பேசியபோது) ஆயிஷா(ரலி), 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் விஷயத்தில் ஒருபோதும் நான் (எவருடைய) பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ளவுமாட்டேன். என் சத்தியத்தை நான் முறித்துக் கொள்ளவுமாட்டேன்' என்று கூறிவிட்டார்கள்.

ஆயிஷா(ரலி) இப்னு ஸுபைர் அவர்களிடம் பேச்சை நிறுத்தி நீண்ட நாள்களாகி விட்டபோது, பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்தி யகூஸ்(ரலி) ஆகிய இருவரிடமும் இப்னு ஸுபைர்(ரலி), 'அல்லாஹ்வை முன்வைத்து உங்கள் இருவரிடமும நான் வேண்டுகிறேன். என்னை (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லக்கூடாதா? என் உறவை முறித்துக் கொள்வதாக அவர்கள் செய்துள்ள சத்தியம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்லவே!' என்று கூறினார்கள்.

எனவே, மிஸ்வர்(ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்களும் தம் மேலங்கிகளை அணிந்துகொண்டு இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுடன் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றார்கள். (அங்கு சென்ற) உடனே 'அஸ்ஸலாமு அலைக்க வ ரஹ்மத்துலலாஹி வ பரகாதுஹு' என்று சலாம் சொல்லிவிட்டு, 'நாங்கள் உள்ளே வரலாமா?' என்று அனுமதி கேட்டனர். அதற்கு ஆயிஷா(ரலி), 'உள்ளே வாருங்கள்' என்று அனுமதி வழங்கினார்கள். அப்போது அவர்கள் (மூவரும்) 'நாங்கள் அனைவரும் உள்ளே வரலாமா?' என்று கேட்டனர். ஆயிஷா(ரலி), 'ஆம்; அனைவரும் உள்ளே வாருங்கள்' என்று அவர்கள் இருவருடனும் இப்னு ஸுபைர்(ரலி) இருப்பதை அறிந்து கொள்ளாமலேயே கூறினார்கள்.

அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும், இப்னு ஸுபைர்(ரலி) (தம் சிறிய தாயாரான ஆயிஷா இருந்த) திரைக்குள் நுழைந்து அவர்களைத் தழுவிக்கொண்டு அவர்களிடம் முறையிட்டு அழத் தொடங்கினார்கள். மிஸ்வர்(ரலி) அவர்களும் அப்துர்ரஹ்மான்(ரலி) அவர்களும் (வெளியே இருந்தபடி) இப்னு ஸுபைர்(ரலி) அவர்களிடம் பேசியே தீரவேண்டும் என்றும் அவருக்காகத் தாங்கள் செய்யும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வேண்டிக் கொண்டிருந்தனர்.

மேலும், அவர்கள் இருவரும், 'ஒரு முஸ்லிம் தம் சகோதரிடம் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளதை தாங்கள் அறிந்தே உள்ளீர்கள்' என்று கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) அவர்களிடம் (உறவைப் பேணுவதன் சிறப்பு குறித்து) நினைவூட்டியும்  அவர்கள் அதிகமாகப் பேசியபோது (தாம் செய்த சத்தியத்தைப் பற்றி) அவர்கள் இருவருக்கும் நினைவூட்டியவாறு ஆயிஷா(ரலி) அழலானார்கள். மேலும், '(நான் அவரிடம் பேசமாட்டேன் என) சத்தியம் செய்து விட்டேன். சத்தியம் மிகவும் கடுமையானதாகும்' என்று (அவர்கள் இருவரிடமும் திரும்பக் திரும்பக்) கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆயிஷா(ரலி)அவர்களிடம், இருவரும் (தங்கள் கருத்தை) வலியுறுத்திக்கொண்டேயிருந்தனர். இறுதியில் ஆயிஷா(ரலி) (தம் சகோதரியின் புதல்வர்) இப்னு ஸுபைரிடம் பேசிவிட்டார்கள். தம் சத்தியத்தை முறித்துவிட்டதற்குப் பரிகாரமாக நாற்பது அடிமைகளை விடுதலை செய்தார்கள். அதற்குப் பிறகும் கூடத் தம் சத்தியத்தை நினைவுகூர்ந்து தம் முகத்திரை நனையுமளவிற்கு அவர்கள் அழுவார்கள்.


நூல்;புஹாரி,எண் 6073

அன்பானவர்களே! மனிதர்கள் என்றால் மனக்கசப்பு ஏற்படுவது இயல்புதான். அந்த வகையில் சிலர் சிலரோடு பினங்கிக்கொண்டிருப்பதை பார்க்கிறோம். இவ்வாறு மனக்கசப்போடு வாழ்பவர்கள் சாமான்யர்கள் மட்டும்தான் என்று கருதி விடாதீர்கள். 'ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என்ற நபிமொழியை மேடைதோறும் முழங்கும் தலைவர்களிலும் இவ்வாறானவர்கள் உண்டு. இவ்வாறான இவர்களின் மனக்கசப்பு நாள்கள் தாண்டி, மாதங்கள் தாண்டி வருடங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது.

இப்படி உறவுகளுக்கு மத்தியிலும், சமூகத்திற்கு மத்தியிலும் பிணங்கிக்  கொண்டிருக்கும் சாமான்யர்களும் சரி, தலைவர்களும் சரி அதுகுறித்து கவலை கொள்கிறார்களா என்றால் இல்லை. இன்னும் சொல்லப்போனால், மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது  என்ற நபிமொழியை சில தலைவர்களிடம் நினைவூட்டினால், தங்களின்  நிலையை மாற்றுவதற்கு பதிலாக 'அல்லாஹ்விற்காக ஒருவரை வெறுப்பதற்கு அனுமதி உள்ளது' என்று தங்களின் வார்த்தை ஜால பத்வாக்கள்  மூலம் தங்களின் பகைமையை தொடர்கிறார்கள். இத்தகைய தலைவர்களை பின்பற்றும் சகோதரர்களும் தங்களது சக அமைப்பினரை சேர்ந்த முஸ்லிம் சகோதரர்களை எதிரி போல் பார்க்கும் நிலையை நாம் பார்க்கிறோம். சஹாபாக்களை  விட அல்லாஹ் நம்மை மேன்மையாக்கி வைத்துள்ளான்[!] என்று சஹாபாக்களுக்கும் மேலாக நம்மை நினைக்கும் நாம், அந்த சஹாபாக்கள் பகைமையை எவ்வாறு வென்றார்கள் என்பதை மட்டும் வசதியாக மறந்து அல்லது மறைத்து விடுகிறோம்.

தனது சகோதரி மகன் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்[ரலி] அவர்களோடு பேசமாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்த அன்னையவர்கள், பின்னாளில் சில சஹாபிகளால் நபிமொழியை நினைவூட்டி உபதேசம் செய்யப்பட்டபின், உடனடியாக தனது சத்தியத்தை முறித்து, சகோதரி மகனுடன் தனது உறவை புதுப்பித்ததோடு, தனது தவறான சத்தியத்தை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர்விட்டு அழுது கைசேதப்படும் அன்னையவர்களின் பண்பு எங்கே..? நாம் எங்கே..? சிந்திக்கவேண்டும்.

மறுபுறம் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்[ரலி] அவர்கள், தனது சிற்றன்னை பேசாவிட்டால் என்ன..? அவர் வீட்டிலா நமக்கு சாப்பாடு..? என்று கண்டும் காணாமல் இருந்தார்களா என்றால் இல்லை. மாறாக தனது சிற்றன்னை தன்னோடு பேசாமல் இருப்பது ஒருபுறம் அவர்களுக்கு கவலையளிப்பதாக இருந்தாலும், மறுபுறம் தன்னோடு  பேசாமல் இருப்பது சிற்றன்னைக்கு மார்க்கத்தில் ஆகுமானதில்லையே என்றும் கவலை கொண்டவர்களாக,

தனது சிற்றன்னையை தன்னோடு பேசிட பரிந்துரைக்குமாறு முஹாஜிர்கள்  சிலரை நாடுகிறார்கள். முஹாஜிர்கள் சிலரின் பரிந்துரை அன்னையிடம் மாற்றத்தை உண்டாக்கவில்லை. தனது முயற்சி  பலனளிக்காததை  கண்டு இப்னு ஜுபைர்[ரலி] அவர்கள், நம்பிக்கையிழந்து விடவில்லை. மீண்டும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்தி யகூஸ்(ரலி) ஆகிய இருவர் மூலமாக சமாதனம் பேசி அன்னையவர்களின்  உறவை உயிர்ப்பிக்கிறார்கள்  என்றால், இங்கே உயிர்ப்பிக்கப்பட்டது அன்னையவர்கள்  மற்றும் இப்னு ஜுபைரின் உறவு மட்டுமல்ல. மூன்று நாட்களுக்கு மேலாக பேசாமல் இருக்கக் கூடாது என்ற மாநபியின் மணிமொழியும் தான்.

எனவே அன்பானவர்களே! சஹாபாக்களுக்கு அறிவுரை பலனளித்தது ஏனென்றால்,
மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்[51:55 ] என்ற இறைவாக்கின் படி, அவர்கள் முஃமின்களாக இருந்ததால் சஹாபாக்களுக்கு உபதேசம் பயனளித்தது. அத்தகைய சஹாபாக்கள் வழியில், நாமும் பகைமை
மறந்து பாசம் காட்டி முஃமீன்களாக வாழ்வோமா..?

வியாழன், 7 அக்டோபர், 2010

பாசத்தலைவனின் பசியறிந்து பரிமாறிய பரிவுமிக்க தம்பதிகள்!

بســــم الله الـر حـمـن الرحـــيــم
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்;


அபூ தல்ஹா (ஸைத் அல்அன்சாரி(ரலி) தம் துணைவியார் உம்மு சுலைம்(ரலி) அவர்களிடம், 'நான் நபி(ஸல்) அவர்களின் குரலைப் பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கு இருக்கும்) பசியை அறிந்துகொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். எனவே, உம்மு சுலைம்(ரலி) வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்து வந்தார்கள். பிறகு, உம்மு சுலைம் அவர்கள் தங்களின் முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் ரொட்டியைச் சுருட்டி என்னுடைய கை (அக்குளு)க்குக் கீழே மறைத்து வைத்துவிட்டு, மற்றொரு பகுதியை எனக்கு மேல்துண்டாக ஆக்கினார்கள்.

பிறகு என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்களும் இருந்தனர். நான் அவர்களுக்கு முன்னால் (போய்) நின்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உன்னை அபூ தல்ஹா அனுப்பினாரா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்' என்று சொன்னேன். 'உணவுடனா அனுப்பியுள்ளார்?' என்று அவர்கள் கேட்க, நான் 'ஆம்' என்றேன்.




அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களிடம், 'எழுந்திருங்கள்' என்று சொல்லிவிட்டு நடக்கலானார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம் வந்(து விவரத்தைத் தெரிவித்)தேன். உடனே அபூ தல்ஹா(ரலி) (என் தாயாரிடம்) 'உம்மு சுலைமே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு உணவளிக்க நம்மிடம் உணவு இல்லையே!' என்று கூறினார்கள். (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி), 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று கூறினார்கள். உடனே அபூ தல்ஹா(ரலி) (தாமே நபி(ஸல்) அவர்களை முன்சென்று வரவேற்பதற்காகப்) போய் இறைத்தூதர்(ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அபூ தல்ஹா அவர்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் வந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'உம்மு சுலைமே! உன்னிடமிருப்பதைக் கொண்டுவா!' என்று கூறினார்கள். உடனே உம்மு சுலைம் அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம்(ரலி) தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறைவன் நாடிய (பிஸ்மில்லாஹ் மற்றும் இதர பிரார்த்தனை வரிகள் சில)வற்றைக் கூறினார்கள். பிறகு 'பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதியுங்கள்' என்று (அபூ தல்ஹாவிடம்) கூறினார்கள்.


அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதியளித்தார்கள். அப்போது அவர்கள் (பத்துப் பேரும்) வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே) வர அனுமதி அளியுங்கள்' என்று கூறினார்கள். அவ்வாறே அபூ தல்ஹா(ரலி) அனுமதியளிக்க, அவர்களும் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, 'மேலும் பத்துப் பேருக்கு அனுமதியுங்கள்' என்று கூற, அபூ தல்ஹாவும் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு பத்துப் பேருக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதி கொடுத்தார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். (அப்படி உண்ட) அந்த மக்கள் எண்பது பேர் ஆவர்.

ஆதாரம் புஹாரி எண்; 5381
 
அன்பானவர்களே! பொதுவாக உணவு பரிமாறல் என்பது ஒருவரின் பசியறிந்து பரிமாறுதல் என்பது அரிதாகும். ஒவ்வொரு வீட்டிலும் காலை டிபன், மதிய உணவு, இரவு உணவு என வேளாவேளைக்கு உணவு பரிமாறுதல் என்பதுதான் நடைமுறையில் உள்ளதேயன்றி, ஒருவரின் பசியறிந்து உணவு பரிமாறுதல் இல்லை. வாய் திறந்து கேட்காமலேயே பிள்ளையின் முகத்தைப் பார்த்து பறிமாறுபவள் தாய் மட்டுமே.
 
அத்தகைய தாய்மை உணர்வோடு தனது தலைவனை பார்த்தவர்கள் சஹாபாக்கள் மட்டுமே. இறைத்தூதர்[ஸல்] அவர்களின் உண்மை வரலாறை எழுத நினைக்கும் எவராகிலும், ஆபூதல்ஹா-உம்மு சுலைம்[ரலி] தம்பதிகளை புறந்தள்ளி எழுதிட முடியாது. அந்த அளவுக்கு இறைத்தூதர்[ஸல்] அவர்களின் வாழ்க்கையில் இரண்டற  கலந்தவர்கள். இத்தகைய அபூதல்ஹா[ரலி] அவர்கள், இறைத்தூதர்[ஸல்] அவர்களின் பலவீனமான  குரலை கேட்டு அதன் மூலம் அல்லாஹ்வின் தூதரின் பசியை உணர்ந்து, அந்த பசியை போக்குவது நமது பாக்கியம் என உணர்ந்தவர்களாக தமது இல்லம் நோக்கி விரைந்து தமது மனைவியை நோக்கி உணவுண்டா எனக் கேட்கிறார்கள். 
 
மறுபுறம் அன்னை உம்முசுலைம்[ரலி] அவர்களோ, இறைத்தூதருக்கு பசியா..? என எண்ணியவர்களாக ரொட்டியை தனது மகன் மூலம் கொடுத்து அனுப்புகிறார்கள். இப்படி தங்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அருட்கொடையான இறைத்தூதர் மீது இவர்கள்  பாசம் காட்ட, மறுபுறம் இறைத்தூதர்[ஸல்] அவர்களோ, அனஸ் அவர்கள் ரொட்டி கொண்டுவந்தவுடன் தான் மட்டும் பசியாறி ஏப்பம் விடாமல், ''யாரேனும் உணவு கொடுத்தால்தான் சாப்பாடு; இல்லையேல் பட்டினி''  என மார்க்கத்திற்காக வாழும் 'திண்ணைத் தோழர்கள' குறித்து அவர்களின் பசி குறித்து கவலை கொண்டவர்களாக அவர்களையும் அழைத்துக்கொண்டு உம்முசுலைம்[ரலி] அவர்களின் இல்லம்  நோக்கி விரைகிறார்கள். 
 
ஒருவரை நாம் விருந்துக்கு அழைக்க அவர் ஒரு படையோடு நம் வீடு தேடி வந்தால் நமது வாயிலிருந்து வரும் வார்த்தை என்னவாக இருக்கும்..? ' எதோ இந்த ஆளு பசியோட இருக்கார்னு ரெண்டு ரொட்டிய குடுத்தா தின்னுட்டு போகாம; இப்படி ஊரையே கூப்பிட்டுகிட்டு வாராரே! என்று தான் சொல்வோம். ஆனால் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள்  தமது தோழர்கள் என்பது பேருடன் வருவதையறிந்து கலங்கிய அபூதல்ஹா[ரலி] அவர்கள் 'நம்மிடம் அவ்வளவு  பேருக்கும் உணவளிக்க உணவில்லையே என கைசேதப்பட, அங்கே அன்னை உம்முசுலைம்[ரலி] அவர்கள் சொன்ன வார்த்தை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். அது இதுதான்; 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று கூறினார்கள். 
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் ஒரு காரியத்தை செய்கிறார்கள் எனில், அதில் நாம் அறியாத விஷயம் இருக்கும்; அது குறித்து நாம் கருத்துக் கூறுவது கூடாது. அதுபற்றி அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிந்தவர்கள் என கூறி, தான் ஈகைக் குணத்தில் மட்டுமல்ல; ஈமானிலும் முழுமையடந்தவர்கள்  என்று காட்டினார்களே அன்னை உம்முசுலைம்[ரலி] அவர்கள்.
 
ஆனால் இன்று  மெத்தப்படித்த மேதாவிகள்[!] சிலர், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சொன்னதாக, செய்ததாக வரும் ஆதாரப் பூர்வமான நபிமொழிகளை தங்களின்  சிற்றறிவோடு உரசிப்ப்பார்த்து, 'முரண்படுகிறது' என தூக்கி வீசுகிறார்களே! இப்போது தெரிகிறதா..? மார்க்கத்தின் நிறைகுடங்களான சஹாபாக்கள் 'தளும்பவில்லை' தலைக்கனம் கொள்ளவில்லை. ஆனால் இன்று 'குறைகுடங்கள்' கூத்தாடுகின்றன. தியாக சீலர்களான சஹாபாக்கள் எம்மைப் போன்றவர்களே! அல்ல. அல்ல. அவர்களை விட அல்லாஹ் எங்களை மேன்மையாக்கி வைத்து விட்டான் என குதிக்கின்றன. 
 
அணையும் நெருப்பு பிரகாசமாக எரியலாம். அதுபோல இவர்கள் சஹாபாக்கள் குறித்து கூறும் குற்றப் பத்திரிக்கைகள் இன்று பளிச்சிடலாம். ஆனால் என்றைக்கும் நட்சத்திரமாக  ஜொலிப்பவர்கள்  சஹாபாக்கள் என்பதை  உலகம் உள்ளளவும் அவர்களின் தியாக வரலாறு சான்று பகர்ந்து கொண்டிருக்கும் இன்ஷா அல்லாஹ்.

புதன், 6 அக்டோபர், 2010

மார்க்கத்தில் மட்டுமல்ல; உலக வாழ்க்கையிலும் தியாகம்!

بســــم الله الـر حـمـن الرحـــيــم
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

என் தந்தை (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக்கும்போது) 'ஏழு பெண் குழந்தைகளை' அல்லது 'ஒன்பது பெண் குழந்தைகளை'விட்டுச் சென்றார்கள். எனவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'ஜாபிரே! நீ மணமுடித்துக்கொண்டாயா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்று சொன்னேன்.

அப்போது நபி[ஸல்] அவர்கள், 'கன்னிப் பெண்ணையா? கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத் தான் (மணந்தேன்)' என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், 'கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!' என்று கூறினார்கள்.

அதற்கு நான் நபி(ஸல்) அவர்களிடம், '(என் தந்தை) அப்துல்லாஹ்(ரலி), பல பெண் மக்களைவிட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். (வயதில்) அந்தப் பெண் மக்களைப் போன்ற ஒரு (இளம் வயதுப்) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை. எனவே, நான் அவர்களைப் பராமரித்துச் சீராட்டி வளர்க்கும் (அனுபவமுள்ள) ஒரு பெண்ணை மணந்துகொண்டேன்' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு 'சுபிட்சத்தை அளிப்பானாக' அல்லது 'நன்மையைப் பொழிவானாக' என்று கூறினார்கள்.
 
ஆதாரம் நூல்; புஹாரி எண் 5367 

அன்பானவர்களே! சத்திய சஹாபாக்கள் மார்க்கத்திற்காக தங்களது இன்னுயிரையும் இழக்கும் தியாக சீலர்கள் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அதே நேரத்தில் மார்க்கத்தின் மற்றொரு அம்சமான உலக வாழ்க்கையிலும் இறைவன் விதித்துள்ள கட்டளைகளை பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட பொன்மொழி நமக்கு உணர்த்துகிறது.

ஒரு ஆண்மகனுக்கு தனது பெற்றோரை, தனது உடன் பிறந்தோரை, உறவினரை பராமரிக்கும் கடமை உள்ளது. பெற்றோர் மரணித்து விட்டால்  உடன்பிறந்தோரை பராமரிக்கும் முழுப் பொறுப்பும் ஆண்மகன் மீது விதியாகி விடுகிறது. ஆனால் இன்றைய நிலையோ, திருமணம் ஆகும்வரை பெற்றோரை தூக்கி வைத்து கொண்டதும் ஆண்மகன், திருமணம் முடிந்த கையோடு, மனைவி சொல்லே மந்திரம் என மனைவியின் முந்தானை நுனியை பிடித்துக் கொண்டு தனிக்குடித்தனம்  சென்றுவிடுகிறான்.

தனிக்குடித்தனம் தவறல்ல. ஆனால் அதற்கு பின் தனது பெற்றோரையோ, உடன் பிறந்தோரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுப்பதில்லை. இதன் விளைவாக உழைக்கமுடியாத பெற்றோர்கள் 'கையேந்தி' வயிற்றை நிரப்புகிறார்கள். உடன்பிறந்த சகோதரிகளுக்கு திருமண வயதை கடந்த பின்னும் திருமணம் நடத்திட நாதியில்லை. இதன் விளைவாக முதிர்கன்னிகளின் ஏக்க மூச்சு எமது வீட்டு ஜன்னல் கம்பிகளையும் துருப்பிடிக்க செய்துவிட்டது.

இந்நிலைக்கு என்ன காரணம்..? மார்க்கம் என்றால் வெறுமனே தொழுகை நோன்பு போன்ற சில அமல்களே  என்ற குறுகிய வட்டத்தை தாமாகவே கற்பனை செய்து கொண்டு, இவைகளை சரியாக செய்தால் போதும். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரை கவனிப்பது கட்டாயமுமல்ல. மார்க்கத்திற்கு உட்பட்டதுமல்ல எனக்  கருதும் மனநிலைதான்.

ஆனால் சத்திய சஹாபாக்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் என்பது, அமல்களில் மட்டுமல்ல, அன்பானவர்களை கவனிப்பதிலும்தான் உள்ளது என்பதை  விளங்கியிருந்தார்கள். எனவேதான் இளைஞரான ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள், கன்னிப்பெண்ணை மணக்க வேண்டிய கட்டிளம் காளை; சகோதரிகளின் நலனை கவனத்தில் கொண்டு, விதவையான பக்குவமான பெண்ணை மணந்து, தனது உடன்பிறந்தோர் மீதான தனது கடமையையும் முழுமையாக நிறைவேற்றுகிறார்கள் என்றால்,

இங்குதான் சஹாபாக்கள் நிற்கிறார்கள்; அவர்களின் தியாக உள்ளம்- இறையச்சம் முன்னே நிற்கிறது.
 ' உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது.
என்ற திருத்தூதரின் பொன்மொழியை மெய்பிக்கும் வாய்மையாளர்களாக திகழ்கிறார்கள் சஹாபாக்கள்.

எனவேதான சொல்கிறோம். அந்த நல்லறத் தோழர்களை ஒருபோதும் நாம் எட்டிப் பிடிக்கமுடியாது என்று.