வெள்ளி, 21 அக்டோபர், 2011

இந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர் 'அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அறிவித்தார்கள்;

ஆகிப், சையித் எனும் நஜ்ரான் நாட்டுக்காரர்கள் இருவர், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'முபாஹலா - சாபப் பிரார்த்தனை' செய்வதற்காக வந்தனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், 'நீ அவ்வாறு செய்யாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் உண்மையிலேயே இறைத்தூதராக இருந்து; நாம் சாபப் பிரார்த்தனை செய்துவிட்டோமானால் நாமும் உருப்பட மாட்டோம்; நமக்குப் பின்வரவிருக்கும் நம் சந்ததிகளும் உருவப்படமாட்டார்கள்'' என்று கூறினார்.


(பிறகு) இருவரும் சேர்ந்து (நபி(ஸல்) அவர்களிடம்), 'நீங்கள் எங்களிடம் கேட்கிறவற்றை நாங்கள் உங்களுக்குக் கொடுக்கிறோம். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரை எங்களுடன் அனுப்புங்கள். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரைத் தவிர வேறெவரையும் எங்களுடன் அனுப்பவேண்டாம்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நம்பகத் தன்மையில் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரை நிச்சயம் நான் உங்களுடன் அனுப்புவேன்'' என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்கள் (ஒவ்வொருவரும்) நபியவர்களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள், 'அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்களே! எழுந்திருங்கள்'' என்று கூறினார்கள். அவர் எழுந்து நின்றபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இவர் இந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர்'' என்று கூறினார்கள். நூல்;புஹாரி.

மேற்கண்ட பொன்மொழியில் நஜ்ரான் நாட்டினரோடு செல்வதில் நபித் தோழர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பு இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதுபற்றி சீறத் இப்னு ஹிஷாம் என்ற நூலில் இடம்பெற்ற ஒரு செய்தியை தஃப்சீர் மேதை இமாம் இப்னு கஸீர் அவர்கள் தனது திருக்குர்ஆண் விரிவுரையில் பதிவு செய்துள்ளார்கள்.

''நபி[ஸல்] அவர்களிடம் வந்த கிறிஸ்தவர்கள்,''அபுல்காசிமே! உம்மோடு நாங்கள் சாப அழைப்புப் பிரமாணம் செய்யவேண்டாம் என்றே கருதுகிறோம். உங்கள் மார்க்கத்தில் நீங்கள் இருந்து கொள்ளுங்கள்.நாங்கள் எங்கள் மார்க்கத்தில் இருந்தபடியே திரும்பிச் சென்று விடுகிறோம்.எனினும், உம்முடைய தோழர்களில் நீர் விரும்பும் ஒருவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள்; நாங்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளில் அவர் எங்களிடையே தீர்ப்பு வழங்கட்டும். ஏனெனில், நீங்கள் எங்களது அபிமானத்தைப் பெற்றவர்கள் என்றனர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள்,''மாலையில் என்னிடம் வாருங்கள்;நம்பத்தகுந்த வலிமை மிகக் ஒருவரை உங்களுடன் அனுப்பி வைக்கிறேன் என்றார்கள்.

உமர்[ரலி] அவர்கள் கூறியதாவது; அன்று நான் பதவியை விரும்பியது போன்று ஒருபோதும் விரும்பியதே இல்லை. நபி[ஸல்] அவர்கள் குறிப்பிட்ட அந்த ஒருவர் நானாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்தேன். எனவே, அன்றைய லுஹர் தொழுகைக்கு விரைவாகவே வந்து விட்டேன். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், லுஹர் தொழுகை முடித்து ஸலாம் கொடுத்துவிட்டு வலப்பக்கமும் இடப்பக்கமும் திரும்பிப் பார்த்தார்கள். அவர்கள் என்னைப் பார்க்கவேண்டும் என்பதற்காக தலையை தூக்கி காண்பித்தேன்.

ஆயினும் வேறு யாரோ ஒருவரை நபி[ஸல்] அவர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள்.இறுதியில் அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்[ரலி] அவர்களைப் பார்த்ததும், அவரை அழைத்து, ''அந்த கிறிஸ்தவர்களுடன் புறப்படுங்கள்; அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள பிரச்சினைகளில் அவர்களுக்கிடையே சத்தியத் தீர்ப்பு வழங்குங்கள்'' என்றார்கள். பின்னர் அந்தக் குழுவினருடன் அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்[ரலி]  அவர்கள் புறப்பட்டு சென்றார்கள்.

ஈஸா[அலை] குறித்து விவாதம் செய்ய வந்த நஜ்ரான் பகுதி கிறிஸ்தவ குழுவினரிடம், 'முபாஹலா' அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அதிலிருந்து பின் வாங்கி செல்கையில், தங்களுடன் ஒரு நம்பகமானவரை அனுப்பிட நபியவர்களை கேட்டபோது, அந்த நம்பகமானவர் நாமாக இருக்கவேண்டும், நாம் இந்த குழுவினரோடு சென்றால் இவர்களுக்கு தாஃவா செய்யலாம் என்று ஆசை கொள்கிறார்கள் உமர்[ரலி] அவர்கள். ஆனால் அவர்களுக்கு கூட கிடைக்காத அந்த அருமையான வாய்ப்பு அபூ உபைதா அல்ஜர்ராஹ்[ரலி] அவர்களுக்கு கிடைத்தது என்று மேற்கண்ட இந்த வரலாற்று செய்தியில் நாம் காண்கிறோம். அபூ உபைதா அல்ஜர்ராஹ்[ரலி] அவர்கள் இந்த சமுதாயத்தின் நம்பகமானவர் என்று நபி[ஸல்] அவர்கள் சொல்லியுள்ளதோடு, மற்றொரு கட்டத்தில் நபி[ஸல்] அவர்களின் திருவாயால் சுவனத்தைக் கொண்டு நன்மாராயமும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இறைத்தூதரின் ஹவாரீ[உதவியாளர்] ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி)


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்;

"அகழ்ப்போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'எதிரிகளின் செய்தியை (வேவு பார்த்துக்) கொண்டு வருபவர் யார்?' என்று கேட்டார்கள். ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி), 'நான்" என்று (முன்வந்து) கூறினார்கள். மீண்டும்; எதிரிகளின் செய்தியை அறிந்து எம்மிடம் கொண்டு வருபவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர்(ரலி), 'நான்" என்று கூறினார்கள். பிறகு, 'எதிரிகளின் செய்தியை எம்மிடம் கொண்டு வருபவர் யார்?' என்று (மீண்டும்) நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர்(ரலி), 'நான்" என்று கூறினார்கள்.


பிறகு நபி(ஸல்) அவர்கள், 'ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (பிரத்தியேகமான) உதவியாளர் உண்டு; என்னுடைய (பிரத்தியேக) உதவியாளர் ஸுபைராவார்" என்று கூறினார்கள்.  நூல்; புஹாரி

இம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி]


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

ஆகவே, அவரை [அந்தக் குழந்தையை] அவருடைய இறைவன் அழகியமுறையில் ஏற்றுக்கொண்டான். அதை நல்ல பயிராக வளரச் செய்தான். அதற்கு ஜக்கரியாவைப் பொறுப்பாக்கினான். மர்யம் இருந்த மாடத்திற்குள் ஜக்கரிய்யா நுழைந்த போதெல்லாம் அவருக்கருகில் ஏதேனும் உணவுப் பொருள்  இருப்பதைக் கண்டு, ''மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டார். அதற்கு அவர், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறினார்''
அல்-குர்'ஆன் 3 ;37
மேற்கண்ட வசனத்தில் அன்னை மரியம் அவர்களுக்கு உணவு கிடைத்த விதம் பற்றி நபி ஜக்கரிய்யா[அலை] அவர்கள் விசாரிக்கும் போதெல்லாம், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் வார்த்தையை அன்னை மர்யம்[அலை] பயன்படுத்தினார்கள் என்பதை அல்லாஹ் அருள்மறையில்
சொல்லிக் காட்டுகின்றான். அன்னை மர்யம்[அலை] அவர்களைப் போன்றவர் என்று நபி[ஸல்] அவர்களால் பாராட்டப்பட்டவர் யார் தெரியுமா? அறிந்து கொள்ள கீழே உள்ள பொன்மொழியை படியுங்கள்;

ஜாபிர்[ரலி] அவர்கள் கூறியதாவது;
ஒரு தடவை நபி[ஸல்] அவர்கள் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்ததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். எனவே, தம்முடைய துணைவியாரின் வீடுகளுக்குச் சென்று பார்த்தஹர்கள். அவர்களிடமும் எதுவும் கிடைக்கவில்லை. உடனே [தம்முடைய மகள்] ஃபாத்திமா[ரலி] அவர்களிடம் வந்து, மகளே! நான் பசியோடு இருக்கின்றேன்; சாப்பிடுவதற்கு உன்னிடம் ஏதேனும் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு பாத்திமா[ரலி], ''என் தந்தையும் தாயும் தங்களுக்கே அர்ப்பணம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! [என்னிடம்] எதுவுமில்லை'' என்று கூறினார்கள். அதனால் நபி[ஸல்]அவர்கள் அங்கிருந்து போய்விட்டார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு ஃபாத்திமா[ரலி] அவர்களுக்கு பக்கத்து வீட்டுப் பெண்மணி இரு ரொட்டிகளையும் சில இறைச்சி துண்டுகளையும் கொடுத்தனுப்பினார்.

அவற்றை வாங்கிக்கொண்ட ஃபாத்திமா[ரலி] அவர்கள் ஒரு பாத்திரத்தில் வைத்து, ''இந்த உணவு விசயத்தில் என்னைவிடவும், என்னைச் சேர்ந்தோரை விடவும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்போகிறேன்'' என்று கூறினார்கள். முன்னதாக அவர்கள் அனைவரும் வயிறார உண்ணவேண்டிய தேவையுடையவர்களாகவே இருந்தனர்.

பின்னர் ஹசன்[ரலி] அல்லது ஹுசைன்[ரலி] அவர்களை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் அனுப்பி அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். நபி[ஸல்] அவர்கள் ஃபாத்திமா[ரலி] அவர்களிடம் திரும்ப வந்தார்கள். அப்போது ஃபாத்திமா[ரலி] ''அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கே அர்ப்பணம்! அல்லாஹ் சிறிதளவு உணவுப் பொருளை கொடுத்துள்ளான். அதைத் தங்களுக்காக பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்'' என்று கூறினார்கள். மகளே! அதைக் கொண்டுவா'' என நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்.

தொடர்ந்து அன்னை பாத்திமா[ரலி] அவர்கள் கூறினார்கள்; அந்த உணவுத்தட்டை எடுத்து வந்து திறந்து பார்த்தேன். அப்போது தட்டு நிரம்ப ரொட்டியும், இறைச்சியும் இருந்தன. அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட நான், அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த அருள்தான் என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால் அல்லாஹ்வை புகழ்ந்தேன். அல்லாஹ்வின் தூதர் மீது ஸலவாத் கூறினேன்.

பின்னர் நபி[ஸல்] அவர்களுக்கு
முன்னால் அந்த தட்டை கொண்டு வந்து வைத்தேன். அதைப் பார்த்த நபி[ஸல்] அவர்கள், அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்துவிட்டு, ''மகளே!இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?''என்று கேட்டார்கள். அதற்கு நான், ''என் தந்தையே! இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறினேன்.''

உடனே அல்லாஹ்வை புகழ்ந்த நபி[ஸல்] அவர்கள், ''மகளே! இஸ்ரவேல பெண்களுக்குத் தலைவி[யான மர்யமைப்]போன்று உன்னை ஆக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அவருக்கு [மர்யம்] அல்லாஹ் ஏதேனும் உணவளித்து, அது குறித்து யாரேனும் அவரிடம் வினவினால், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறுவார்.'' என்று கூறினார்கள். ஹதீஸ் சுருக்கம்; நூல் முஸ்னது அபீயஅலா.

மேற்கண்ட பொன்மொழியில் அன்னை ஃபாத்திமா[ரலி] அவர்களின் பல நற்பண்புகள் மற்றும் இறையச்சம் மிளிர்வதைக் காணலாம். தனக்கு ஏதேனும் உணவு கிடைத்தால், அன்னை மர்யம்[அலை] அவர்கள் எப்படி அல்லாஹ்வை முன்னிலைப் படுத்தி, ''அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறுவார்களோ, அதே போன்று அன்னை பாத்திமா[ரலி] அவர்களும் அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் குணத்தை கொண்டுள்ளதால், அன்னை பாத்திமா[ரலி] அவர்களை, அன்னை மர்யம்[அலை] அவர்களோடு ஒப்பிட்டு நபி[ஸல்] அவர்கள் சிலாகித்து கூறுகிறார்கள். மேலும், தான் பசியோடு இருந்த நிலையில் தனக்கு ஒரு உணவு கிடைத்த மாத்திரமே அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கே முன்னுரிமை என்று சொன்ன அன்னை ஃபாத்திமா[ரலி] அவர்கள், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மீது எந்த அளவுக்கு அளப்பரிய பாசம் கொண்டிருந்தார்கள் என்பதையும் நம்மால் உணரமுடிகிறது. அதோடு இந்த சம்பவத்தில் நாம் பெறவேண்டிய முக்கியமான படிப்பினை என்னவெனில், நமக்கு ஒரு நலம் விளையுமானால் இது அவரால் விளைந்தது; இவரால் விளைந்தது என்று பெருமையடிக்காமல், இது அல்லாஹ் வழங்கியது அவன் நாடியவர்களுக்கு கணக்கின்றி வழங்குவான் என்ற வாத்தை நம்மிடம் வெளிப்படவேண்டும். அவ்வாறு அனைத்திலும் அல்லாஹ்வை முன்னிலைப் படுத்தினாலே ஆணவம்-பெருமை அடிபட்டுப் போகும்.

 எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னை மர்யம்[அலை] மற்றும் அன்னை ஃபாத்திமா[ரலி] ஆகியோர் மீது நல்லருளை நல்கிடுவானாக! 

சனி, 1 அக்டோபர், 2011

அவதூறு பரப்பியவர் மீதும் அன்பு காட்டிய அன்னை ஆயிஷா[ரலி]

بسم الله الرحمن الرحيم

அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்டபோது அவர்கள் அடைந்த வேதனையை வெளிப்படுத்தும் அவர்களின் வார்த்தையிலிருந்து சிறு பகுதி;
'ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்" என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் பேச்சை முடித்தபோது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை.
ஹதீஸ் சுருக்கம், நூல்;புஹாரி,எண் 2661

அபாண்ட அவதூறால் உள்ளம் உடைந்து அழுது, அழுது கண்ணீர் வற்றும் அளவுக்கு அன்னையவர்கள் வேதனைப்பட்டுள்ளார்களே! அத்தகைய அவதூறை பரப்பியவர்களில் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்[ரலி] அவர்களும் ஒருவர். இதை மனதில்கொண்டு கீழுள்ள செய்தியை படியுங்கள்;

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்;
நான் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை ஏசிக் கொண்டே (என் சிற்றன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், 'ஹஸ்ஸானை ஏசாதே. ஏனென்றால், அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தரப்பிலிருந்து (எதிரிகளின் வசைக் கவிதைகளுக்கு) பதிலடி தருபவராய் இருந்தார்கள். (ஒரு நாள்) ஹஸ்ஸான் அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்து இணைவைப்பவர்(களான குறைஷி)களுக்கெதிராக வசைக் கவி பாட அனுமதி கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'பிறகு என்னுடைய வமிசாவளியை என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், '(அவர்களைப் பற்றி நான் வசைக் கவி கூறும்போது) குழைத்த மாவிலிருந்து முடி உருவப்படுத்து போன்று உங்களை உருவி எடுத்து விடுவேன்" என்று கூறினார். நூல்;புஹாரி,எண் 4145

தன்னைக்குறித்து அவதூறு பரப்பியவர்களில் ஒருவரை 'திட்டாதீர்கள்' என்று அன்னையவர்கள் பெருந்தன்மையோடு சொன்னார்களே! இந்த பண்பு நம்மிடம் இன்றைக்கு உள்ளதா? ஒருவன் தனக்கு எதிரான கருத்தை உரிய சான்றுகளுடன் சுட்டிக்காட்டினால் கூட, அவனது கருத்தை கருத்தால் எதிர்கொள்வதை விடுத்து, அவனை விட்டேனா பார்' என்று எதிரியின் பிறப்பிலிருந்து ஆய்வுசெய்து அவன் செய்த சிறிய/பெரிய தனிப்பட்ட தவறுகள் அத்துனையையும் பரப்புவது.
மேலும், இவ்வாறு அவதூறுகள் நம்மில் பலர் மத்தியில் அதிகமானதுக்கு காரணம் 'என்னையே எதிர்க்க துணிந்து விட்டானா? என்ற ஆணவம் சிலருக்கு.

ஆனால், அருமை சஹாபாக்கள்  இந்தவிசயத்தில் எப்படி மன்னிக்கும் தன்மையை கையாண்டுள்ளார்கள் என்பதற்கு அன்னை ஆயிஷா[ரலி]   ஒரு அற்புதமான சான்றாக திகழ்கிறார்கள். இந்த பண்பு நமக்கு வந்துவிட்டாலே பாதி அவதூறு மறைந்துவிடும். நடுநிலையோடு சிந்திப்போம்! நன்மையை மட்டும் பரப்புவோம்.

வியாழன், 22 செப்டம்பர், 2011

''அஞ்சாநெஞ்சர்'' அபூதர் அல் கிஃபாரி[ரலி]

بسم الله الرحمن الرحيم


அபூ ஜம்ரா(ரஹ்) அறிவித்தார்;
எங்களிடம் இப்னு அப்பாஸ்(ரலி), 'அபூ தர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று கேட்க, நாங்கள், 'சரி (அறிவியுங்கள்)" என்றோம். அப்போது அவர்கள், அபூதர்[ரலி] அவர்கள் தன்னிடம் கூறியதாக  பின்வருமாறு கூறினார்கள்:

''நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது 'ஒருவர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, நான் என் சகோதரர் (அனீஸ்) இடம், 'நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரின் செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டு வா" என்று சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார்.

 நான், 'உன்னிடம் என்ன செய்தி உண்டு" என்று கேட்டேன். 'நன்மை புரியும்படி கட்டளையிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கிற ஒரு மனிதராக அவரைக் கண்டேன்" என்றார். நான் அவரிடம், 'போதிய செய்தியை எனக்கு நீ கொண்டுவரவில்லை" என்று கூறினேன். பிறகு தோலினால் ஆன (தண்ணீர்ப்)பையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன்.

 [நபி ஸல்] அவர்களை நான் (தேடி வந்திருப்பதாகக்) காட்டிக் கொள்ளாமலிருக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்பவில்லை. (வேறு உணவு இல்லாததால்) ஸம் ஸம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் (தங்கி) இருந்தேன். அப்போது அலீ(ரலி) (கஅபாவில்) என்னைக் கடந்து சென்றார். (என்னைக் கண்டதும்), 'ஆள் (ஊருக்குப்) புதியவர் போன்று தெரிகிறதே" என்று கேட்டார். நான், 'ஆம்' என்றேன். உடனே அவர்கள், 'அப்படியென்றால் (நம்) வீட்டிற்கு நடங்கள் (போகலாம்)' என்று கூறினார்கள். நான் அவர்களுடன் எதைப் பற்றியும் கேட்காமலும் (எதையும்) அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சென்றேன்.

காலையானதும நபி(ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் நபி(ஸல்) அவர்களைப்  பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்போது அலீ(ரலி) என்னைக் கடந்து சென்றார்கள். 'மனிதர் (தான் தங்க வேண்டியுள்ள) தன் வீட்டை அடையாளம் தெரிந்து கொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?' என்று (சாடையாகக்) கேட்டார்கள். நான், 'இல்லை' என்றேன். உடனே, அலீ(ரலி), 'என்னுடன் நடங்கள்' என்று சொல்லிவிட்டு, 'உங்கள் விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு, 'நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்பதாயிருந்தால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்" என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், 'அவ்வாறே செய்கிறேன்" என்று கூறினார்கள்.

நான் அப்போது 'இங்கே தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டபடி ஒருவர் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, நான் என் சகோதரை அவரிடம் பேசும்படி அனுப்பினேன். போதிய பதிலை என்னிடம் அவர் கொண்டு வரவில்லை. எனவே, நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பினேன்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். எனவே, என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்கள் நுழையுங்கள். ஏனெனில், (என்னுடன் வருவதால்) இவனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகிற ஒருவனைக் காண்பேனாயின், என் செருப்பைச் சரி செய்பவனைப் போல் சுவரோராமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் போய்க் கொண்டிருங்கள்" என்று கூறினார்கள்.

இறுதியில், அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'எனக்கு இஸ்லாத்தை எடுத்துரையுங்கள்" என்று சொன்னேன். அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் இருந்த அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அபூ தர்ரே! (நீ இஸ்லாத்தை ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்து வை. உன் ஊருக்குத் திரும்பிச் செல். நாங்கள் மேலோங்கிவிட்ட செய்தி உனக்கு எட்டும்போது எங்களை நோக்கி வா" என்று கூறினார்கள்.

அதற்கு நான், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக்கிடையே உரக்கச் சொல்வேன்" என்று சொல்லிவிட்டு, இறையில்லத்திற்கு வந்தேன். அப்போது குறைஷிகள் அங்கே இருந்தனர். நான், 'குறைஷிக் குலத்தாரே!" அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை' என்று நான் உறுதி கூறுகிறேன். 'முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும அவனுடைய தூதரும் ஆவார்' என்றும் நான் உறுதி கூறுகிறேன்" என்று சொன்னேன்.

உடனே, அவர்கள் 'இந்த மதம் மாறி(ய துரோம்)யை எழுந்து சென்று கவனியுங்கள்" என்று கூறினார்கள். அவர்கள் எழுந்து வந்தார்கள். என் உயிர் போவது போல் நான் அடிக்கப்பட்டேன். அப்போது அப்பாஸ்(ரலி) என்னை அடையாளம் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாமல் பார்த்துக்) கொண்டார்கள். பிறகு குறைஷிகளை நோக்கி, 'உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வாணிபத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தையொட்டித் தானே உள்ளது! (அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?)" என்று கேட்டார்கள். உடனே, அவர்கள் என்னைவிட்டு விலகி விட்டார்கள்.

மறுநாள் காலை வந்தவுடன் நான் திரும்பிச் சென்று நேற்று சொன்னதைப் போன்றே சொன்னேன். அவர்கள், 'இந்த மதம் மாறி(ய துரோம்)யை எழுந்து சென்று கவனியுங்கள்" என்று கூறினார்கள். நேற்று என்னிடம் நடந்து கொண்டதைப் போன்றே நடந்து கொண்டார்கள். அப்பாஸ்(ரலி) என்னைப் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாதவாறு பார்த்துக்) கொண்டார்கள். நேற்று அப்பாஸ் அவர்கள் சொன்னதைப் போன்றே (அன்றும்) கூறினார்கள்.

(இதை அறிவித்து பிறகு) இப்னு அப்பாஸ்(ரலி), 'இது அபூ தர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்பக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். அல்லாஹ் அபூ தருக்கு கருணை காட்டுவானாக!" என்று கூறினார்கள். [புஹாரி எண் 3522 ]

மேற்கண்ட பொன்மொழியில் இஸ்லாத்தை நாடி, நபியவர்களை தேடி, சத்திய மார்க்கத்தில் சங்கமித்த அபூதர்[ரலி] அவர்களிடம், அபூதர் அவர்களே! உங்களின் சன்மார்க்க பிரவேசத்தை சில காலம் மறைத்து கொள்வீராக! என்று நபி[ஸல்] அவர்கள் சொல்லியும், அபூதர்[ரலி] அவர்களின் உள்ளத்தில் புகுந்த ஏகத்துவ கலிமா அவர்களை எட்டுத்திக்கும் முரசறைந்து ஏகத்துவத்தை முழங்கச் செய்தது. அதனால்தான் அன்றைக்கு முஸ்லிம் என்றாலே [உயிர்]மூச்சுக்கு உத்திரவாதமில்லை என்ற காலகட்டத்தில், 
குறைஷிகள் முன்பாக உரக்க  கர்ஜித்தார் ஏகத்துவ கலிமாவை; ஏந்தல் அபூதர்[ரலி] அவர்கள்.

பொதுவாக இன்று தலைவர்கள் அதிகார வர்க்கத்திற்கு எதிராக சவால் விடுகிறார்கள் எனில், அவர்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கும் தைரியம்தான். அதே தலைவர் தனிமைப்படுத்தப்பட்டால் பயத்தின் காரணமாக அடங்கிவிடுவார். அதுபோல் பத்துபேர் கூடியிருக்கும் நிலையில் ஒருவருக்குள்ள தைரியம் தனிமையில் இருக்கும்போது இருப்பதில்லை. ஆனால் ஒரு முஸ்லிம்  கூட்டமாக இருந்தாலும் சரி, தனிமையில் இருந்தாலும் சரி, சத்தியத்தை சொல்வதற்கும் அதை செயல்படுத்துவதற்கும் தயங்கக்கூடாது என்பதற்கு, இதோ! தனி மனிதராக ஏகத்துவ சங்கநாதம் முழங்கிய  அபூதர் அல் கிஃபாரி[ரலி] அவர்களின் வாழ்வு, அசத்தியத்திற்கு எதிராக, சத்தியத்தின் குரலை எங்கும் எதிலும் ஒலிக்கும் துணிவை நமக்குத் தரும் என்பதில் ஐயமில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ், அபூதர்[ரலி] அவர்களை பொருந்திக் கொண்டு, சுவனத்தில் அவர்களின் அந்தஸ்த்தை உயர்த்துவானாக!

புதன், 14 செப்டம்பர், 2011

தன்னுயிர் தந்து தாஹா நபியை காத்தவர்.


بسم الله الرحمن الرحيم


இறை மார்க்கத்தை ஏற்று, இறைத்தூதருக்கு முன்பாகவே மதீனா ஹிஜ்ரத் செய்து, அழைப்புப் பணி செய்த முதலாமவர் முஸ்அப் இப்னு உமைர்[ரலி] அவர்களாவர். இந்த நபித்தோழர் உஹது போர்களத்தில் ஷஹீதானார்கள் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். ஆனால் யாருக்காக ஷஹீதானார்கள் என்பது  நம்மில் அறிந்தவர்கள் குறைவே. இப்போது அந்த உஹது போர்க்களத்தை நம் கண் முன் கொண்டு வருவோம்.

உர்வா பின் அஸ்ஸுபைர்[ரஹ்] அவர்கள் கூறியதாவது; பனூஜுமஹ  குலத்தாரில் ஒருவனான உபை இப்னு கலஃப், ''முஹம்மதை நிச்சயம் நான் கொல்வேன்'' என்று மக்காவில் வைத்து சத்தியம் செய்திருந்தான். இந்த சத்தியம் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கு தெரியவந்தபோது, ''இல்லை; அல்லாஹ் நாடினால் நான் அவனைக் கொல்வேன்'' என்று கூறியிருந்தார்கள்.

உஹத் நாள் வந்தபோது உபை, இரும்புக் கவசத்தால் தன்னை மறைத்துக் கொண்டு ''முஹம்மத் தப்பி விட்டால் நான் தப்பமுடியாது'' என்று கூறியவாறு வந்தான். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை கொல்லலாம் என நினைத்து அவர்களை அவன் தாக்கினான்.

உடனே முஸ்அப் இப்னு உமைர்[ரலி] அவர்கள், தமது உயிரை கொடுத்தாவது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் உயிரை காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காக நபி[ஸல்] அவர்களுக்கு குறுக்கே வந்தார்.[இறைத்தூதர் மீதான உபை'யின் அந்த தாக்குதலை தம் மீது வாங்கிக் கொண்டார்] அதனால் முஸ்அப் இப்னு உமைர்[ரலி] அவர்கள் ஷஹீதானார்கள். பினனர் உபை இப்னு கலஃப் நபி[ஸல்] அவர்களால் கொல்லப்பட்டான்.
[ஹதீஸ் சுருக்கம், நூல்; ஹாகிம்]

அன்பானவர்களே! இன்றைக்கு முஸ்லிம்களில் சிலர் சினிமா மாயையில் மயங்கி, உடல் மண்ணுக்கு; உயிர் .........க்கு என்று திரிவதை பார்க்கிறோம். மக்களை ஏமாற்றும் கூத்தாடிகளை மகானாக நினைத்து இவர்கள் மதி மயங்கித் திரிகிறார்கள். ஆனால் அருமை நபித்தோழர் முஸ்அப்[ரலி] அவர்கள், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் உயிரை காக்க தன்னுயிரை தியாகம் செய்து, இன்றைக்கும் அவர்கள் தியாகம் போற்றப்படக் கூடிய அளவுக்கு வாழ்ந்துள்ளார்கள் என்பதை நினைத்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம். மேலும், இந்த தியாகி முஸ்அப்[ரலி] அவர்கள் ஷஹீதான பின் அவர்களின் நிலை என்ன?

இப்ராஹீம் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார்.

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் அவரின் உணவு கொண்டு வந்து வைக்கப்பட்டது. உடனே அவர், 'முஸ்அப்
(ரலி) கொல்லப்பட்டபோது.. அவர் என்னைவிடச் சிறந்தவராக இருந்தார். அவருக்குக் கஃபனிடுவதற்கு ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. ஹம்ஸா(ரலி) அல்லது வேறொருவர் கொல்லப்பட்டபோது.. அவரும் என்னைவிடச் சிறந்தவரே... அவருக்குக் கஃபனிடுவதற்கும் ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. எனவே, நல்லவை(க்கான நற்கூலி)களெல்லாம் எனக்கு இவ்வுலக வாழ்விலேயே முன் கூட்டியே கொடுக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்!" எனக் கூறிவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.
நூல்; புஹாரி.

மேற்கண்ட செய்தியில், மாபெரும் உயிர்த்தியாகியான முஸ்அப்[ரலி] அவர்களுக்கு கபனிடக்கூட முழுமையான துணி இல்லாத அளவுக்கு அவரின் இஸ்லாமிய வாழ்க்கை ஏழ்மை நிலையில் கழிந்துள்ளது என்பதை காணும்போது கண்கள் கசிகின்றன. அந்த ஏழ்மை வாழ்க்கையிலும் இனிமை கண்டு, இம்மையை வென்று மறுமையை
தனதாக்கிய முஸ்அப்[ரலி] அவர்களின் மறுமை அந்தஸ்தை  அல்லாஹ் உயர்த்துவானாக! முஸ்அப்[ரலி] அவர்களின் வாழ்க்கை மூலம் முஸ்லிம்களுக்கு படிப்பினையை வழங்குவனாக!

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

வானவர் கோமான் ஜிப்ரீலும் வந்தாரே இவர் வடிவத்திலே...!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
அபூ உஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் அருகில் (அன்னை) உம்மு ஸலமா(ரலி) இருந்தார்கள். (ஜிப்ரீல் எழுந்து சென்றதும்) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம், 'இவர் யார் (தெரியுமா)?' என்றோ, இது போன்ற வேறொரு வார்த்தையைக் கூறியோ கேட்டார்கள். உம்மு ஸலமா(ரலி), 'இவர் (தங்களின் தோழர்) திஹ்யா' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுந்து சென்ற பின், உம்மு ஸலமா(ரலி), 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்ன செய்தி குறித்து நிகழ்த்திய உரையை நான் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா
அல்கல்பீ என்றே நினைத்திருந்தேன். (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் திஹ்யாவின் உருவில் வந்த வானவர் ஜிப்ரீல் என்று எனக்குத் தெரியவந்தது.)' என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் இப்னு தர்கான் அத்தைமீ(ரஹ்) கூறினார்கள்: நான் அபூ உஸ்மான்(ரஹ்) அவர்களிடம், 'இந்த அறிவிப்பைத் தாங்கள் யாரிடமிருந்து செவியேற்றீர்கள்?' என்று கேட்டேன். அவர்கள், 'உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடமிருந்து' என்று பதிலளித்தார்கள். நூல்; புகாரி
 
மேற்கண்ட பொன்மொழியில் வானவர் கோமான் ஜிப்ரீல்[அலை], திஹ்யா[ரலி] அவர்கள் உருவத்தில் வந்துள்ளார்கள். ஜிப்ரீல்[அலை] அவர்கள் மனித உருவில் வந்ததாக ஹதீஸ்கள் சில இருந்தாலும், உறுதியாக  ஒரு நபித்தோழர்  வடிவில் வந்த சிறப்பை பெற்றவர் திஹ்யா[ரலி] அவர்களாவார்.
 
மேலும் இந்த திஹ்யா[ரலி] அவர்கள் நபியவர்களின் நம்பிக்கைக்கு பத்திரமான நபித் தோழராவார். ஹெர்குலிஸ் மன்னருக்கு நபி[ஸல்] அவர்கள் சார்பாக எழுதப்பட்ட கடிதத்தை கொண்டு செல்லும் பாக்கியம் பெற்றவரும் இந்த திஹ்யா அல் கல்பீ[ரலி] அவர்களே!
 
அடுத்து கைபர் யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்ட அன்னை ஸபியா பின்த் ஹுயை[ரலி] அவர்கள், திஹ்யா[ரலி] அவர்களுக்கு போர்ச் செல்வங்களின் பங்காக சேர்ந்தார்கள். பிறகு நபி[ஸல்] அவர்கள் அன்னை ஸபியா பின்த் ஹுயை[ரலி]யை  மணக்க விரும்பி திஹ்யா[ரலி] அவர்களிடம் வேண்டுகோள் விடுக்க, மறுக்காமல் வழங்கிய மனமுடையவரும் இந்த திஹ்யா[ரலி] அவர்களாவர்.
 
அல்லாஹ் திஹ்யா[ரலி] அவர்களை பொருந்திக் கொள்வானாக!

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

இம்மையின் கவனம் மறுமையை பாதிக்குமா? கவலை கொண்ட ஹன்ழலா[ரலி].

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எழுத்தாளர்களில்
ஒருவரான ஹன்ழலா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்;
 
(ஒருநாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து ''ஹன்ழலா எப்படி
இருக்கிறீர்கள்'' என்று கேட்டார்கள். நான் ''ஹன்ழலா நயவஞ்சகனாகி விட்டான்'' என்று கூறினேன். அதற்கு. ''அல்லாஹ் தூயவன்! என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள்.

அதற்கு நான், ''நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில்
இருக்கும்போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் துணைவியருடனும், குழந்தைகளுடனும் கலந்துறவாடுகிறோம்,
பிழைப்புகளில் ஈடுபட்டு விடுகிறோம். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்'' என்று சொன்னேன்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்'' என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.
நான் ''அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சகனாகி விட்டான்'' என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''என்ன அது?'' என்று கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகில் இருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று
நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும்
துணைவியருடனும் குழந்தைகளுடனும் கலந்துறவாடுகிறோம். பிழைப்புகளில் ஈடுபட்டு விடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்'' என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும்போதுள்ள நிலையிலும் இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால் உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும்
வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கைகுலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலாவே!  (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்'' என்று மூன்று முறை கூறினார்கள். நூல் - முஸ்லிம் எண்; 5305


மேற்கண்ட பொன்மொழியில் இரு சிறந்த நபித் தோழர்கள்களான அபூபக்ர்[ரலி] மற்றும் ஹன்ழலா[ரலி] ஆகியோர் அமல்களில் சிறந்தவர்கள், அல்லாஹ்வின் அச்சத்தில் சிறந்தவர்கள். எனினும் அல்லாஹ்வின் தூதரோடு  இருக்கும் போது உள்ள மார்க்க நினைவுகள் மறுமை அச்சம் நமது குடும்பத்தாரோடும், உலக வியாபார நிலைகளில் ஈடுபடும் போதும் இருப்பதில்லையே! என்று கவலை கொள்கிறார்கள். நமது இந்த இரண்டு நிலைப்பாடு நயவஞ்சகத்தின் அடையாளமோ என அச்சம் கொள்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரிடத்தில் விரைகிறார்கள். அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள், ''சில நேரம் மறுமை நினைவு, சில நேரம் உலக நினைவு என்பது இயல்பானதுதான்'' என்று ஆறுதல் கூறியபின் தான அமைதியடைகிறார்கள் என்றால்,  மார்க்கத்திற்காக தங்களை  முழுமையாக அர்பணித்த நல்லறத் தோழர்களே தங்களின் அவசியமான உலக செயல்பாடுகள்  எங்கே மார்க்கத்திற்கு முரனாகிவிடுமோ என்று கவலை கொள்கிறார்கள் என்றால், அமல்களில் பலவீனத்தையும், உலக ஆசாபாசங்களில் அதிக நேரத்தையும் செலவிடும் நாம் எந்த அளவிற்கு கவலை கொள்ள வேண்டும்? நாம் அவ்வாறு கவலை கொண்டதுண்டா? நமது ஒவ்வொரு அசைவும் மார்க்கத்தோடு பொருந்துகிறதா என சீர்தூக்கிப் பார்த்து வாழ்ந்த அபூபக்ர்[ரலி] மற்றும் ஹன்ழலா[ரலி] வாழ்விலிருந்து படிப்பினை பெறுவோம்.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

இறைவனால் உண்மைப் படுத்தப்பட்ட உயர்வாளர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
ஸைத் இப்னு அர்கம்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்;
 
ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன் 'அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள்' என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, 'நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்' என்று கூறினான். அவன் கூறியதை '(நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம்' அல்லது 'உமர்(ரலி) அவர்களிடம்' கூறினேன். அவர் அதை நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்தபோது) அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) 'நாங்கள் அதைச் சொல்லவேயில்லை' என்று அவர்கள் சாதித்தார்கள்.
 
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நான் சொன்னதை நம்ப மறுத்துவிட்டார்கள்; அப்துல்லாஹ் இப்னு உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை என் வாழ்நாளில் ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்துகொண்டிருந்தேன். அப்போது என் சிறிய தந்தை என்னிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை' என்று கூறினார்கள். அப்போது,
 
'இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிற போது' என்று தொடங்கும் இந்த (திருக்குர்ஆன் 63:1 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே, நபி(ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, 'ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான் (நீ சொன்னதை உண்மை என்று தெளிவுபடுத்திவிட்டான்)' என்று கூறினார்கள். நூல்; புஹாரி எண்; 4900௦௦ 
 
திருக்குர்'ஆன் மூலம் உண்மைப் படுத்தப்பட்டவராக ஆன்னை ஆயிஷா[ரலி] அவர்களை அனைவரும் அறிந்து  வைத்துள்ளோம். அதே போல் நயவஞ்சகன் அப்துல்லாஹ் இப்னு உபை'யின் பொய் சத்தியத்தால் பொய்ப்படுத்தப்பட்ட ஸைத் இப்னு அர்கம்[ரலி] அவர்களை, அல்லாஹ் ஒரு வசனத்தையே  இறக்கி 'உண்மையாளர்' என்று தனது தூதருக்கும், அன்றைய மக்களுக்கும் மட்டுமன்றி உலகம் உள்ளளவும் வாழும் மக்கள் அனைவருக்கும் உணர்த்துகின்றான் என்றால் இங்கே ஸைத் இப்னு அர்கம்[ரலி] அவர்களின் சிறப்பு பளிச்சிடுகிறது. மேலும் தான் சொன்ன உண்மை பொய்யாக்கப் பட்டதை அறிந்து அந்த  நபித்தோழர் அடைந்த  மன  வேதனை அவர்களின் நல்லொழுக்கத்தை பறை சாற்றுகிறது. நல்லவர்கள் மீது சுமத்தப்படும்  களங்கம் நீண்டநாள் நீடிப்பதில்லை. அதே போல் இன்றைக்கு சிலர் தங்களின் வாதத்திறமையால் சஹாபாக்களை சிறுமைப்படுத்த முயற்சிப்பதையும் முறியடிக்க அல்லாஹ் போதுமானவன்.   

சனி, 13 ஆகஸ்ட், 2011

அழைப்பாளர்களுக்கு ஒரு முன்மாதிரி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரலி]

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார். அப்போது (ஒரு நாள்) ஒருவர் அவர்களிடம் 'அபூ அப்துர் ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட வேண்டும் என பெரிதும் விரும்புகிறேன்' என்றார். அதற்கு (உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைவிட்டும் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். அவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார்கள்' என்றார்" எனஅபூ வாயில் அறிவித்தார். நூல்;  புகாரி  எண் 70
 
மேற்கண்ட பொன்மொழியில் மிகச்சிறந்த நபித்தோழரான 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் உரையை அனுதினமும் கேட்க ஆவல் கொண்டு ஒருவர் வேண்டுகோள் விடுக்க, அப்படியா! இதோ நான் தயார் எத்தனை மணி நேரங்கள் வேண்டுமானாலும் தண்ணீர் குடிக்காமல் பேசுகிறேன் என்று துள்ளிக் குதித்து வராமல், பேசுவது நல்ல விஷயமாக இருந்தாலும் அதை கேட்பவரின் மனநிலையை உணர்ந்து, கேட்பவருக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்த அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள், ''நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன் என்று கூறுகிறார்கள். அதுமட்டுமன்றி இவ்வாறு தான் இறைத்தூதரின் வழிமுறையும் இருந்தது என்றும் கூறி அறிவுரை என்பது அளவுக்கு மிஞ்சியதாக அமைந்துவிடக் கூடாது என்ற பாடத்தை அழகாக முன் வைக்கிறார்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள்.
 
ஆனால் இன்றைக்கு பேச்சாளர்கள் பலர் 'மைக்' கிடைத்தால் போதும் என கடித்து துப்புவதையும், அவருக்குரிய நேரம் முடிந்துவிட்டது என நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குபவர் சுட்டிக்காட்டினாலும் தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்கிறார்கள். இவ்வாறான இவர்களின் நிலைக்கு காரணம், நமது பேச்சை  மக்கள்  விரும்புகிறார்கள் என்று இவர்கள் நம்புவதுதான். ஆனால் மக்களே விரும்பினாலும் அளவோடு பேசுவதும், அறிவுரை சொல்வதும்தான் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் காட்டிய வழிமுறை என்பதைக் காட்டிய அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் வாழ்வு அழைப்புப் பணியில் உள்ளவர்களுக்கு ஒரு அருமருந்தாகும். ஏனெனில்,
'இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்' என்பது  அல்லாஹ்வின் தூதர்[ஸல்) அவர்களின் கட்டளையாகும் [நூல்;  புகாரி  எண் 69 ]

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

உமராலும் முந்தமுடியாத உத்தமர் இவர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

உமர்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்;
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் தர்மம்  செய்யுமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள். அதற்கு ஏற்றார்போல் என்னிடம் பொருளாதாரமும் இருந்தது. ''ஏதேனும் ஒரு நாளில் அபூபக்கரை நான் முந்த வேண்டுமாயின், இந்த நாளில் முந்திவிட வேண்டியதுதான்'' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். எனவே என் பொருளாதரத்தில் நான் பாதியைக்  கொண்டு வந்தேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், உமரே! உமது குடும்பத்திற்காக என்ன வைத்து விட்டு வந்தீர்கள்? என்று கேட்டார்கள். 'இதுபோன்ற ஒரு பங்கை வைத்து விட்டு வந்துள்ளேன்' என்று நான் பதிலளித்தேன். அபூபக்கர்[ரலி] அவர்கள் தன்னிடமுள்ள பொருளாதாரம் அனைத்தையும் கொண்டு வந்து விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், அபூபக்ரே! உம்முடைய குடும்பத்திற்காக எதை விட்டு வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அவர்களுக்காக விட்டு வந்திருக்கிறேன்' என்று  பதிலளித்தார்கள். ''அல்லாஹ்வின் மீது ஆணையாக!எதிலும் அபூபக்ரை முந்த முடியாது என நான் எண்ணிக்கொண்டேன்.

நூல்; திர்மிதி, அபூதாவூத்.

இந்த பொன்மொழியை நாம் கவனிக்கும் வேளையில், அருமை சஹாபாக்கள் எதற்கு போட்டி போட்டுள்ளார்கள் என்பதை முதலாவதாக நம்மால் அவதானிக்க முடிகிறது. நம்மில் பெரும்பாலோர் நமது சக சகோதரரை  செல்வம் உள்ளிட்ட உலக விஷயங்களில் முந்த முற்படுகிறோம். அவரை விட எங்களுக்குத் தான் வலிமை  அதிகம் என்று காட்ட முற்படுகிறோம். இவ்வாறன உலக விஷயங்கள் எல்லாம் சஹாபாக்களுக்கு இரண்டாம்பட்சமாக, இறைவனின் பொருத்தம் ஒன்றே முதலாவதாக தோன்றியதால் தான் செல்வங்களை  அல்லாஹ்வின் பாதியில் வாரி வழங்குவதில் ஒருவரை ஒருவர் போட்டி  போட்டுக் கொண்டனர். அதிலும் மிக உயர்வான தோழரான அபூபக்ர்[ரலி] அவர்களை, மற்றொரு உயர்வான நபித் தோழர் உமர்[ரலி] அவர்களால் கூட எந்த விஷயத்திலும் நன்மையில் முந்த முடியவில்லை எனும் நிலையில், நாமெல்லாம் நமது அமல்களெல்லாம் இந்த நபித் தோழர்களின் அமல்களோடு ஒப்பிடுகையில் கடலில்  கரைத்த பெருங்காயம் போன்று காட்சியளிக்கிறது. ஆனாலும் நபித் தோழர்கள் வாழ்வில் ஏதேனும் கறையோ, குறையோ தென்படாதா? என கண்ணில் எண்ணெய் ஊற்றி தேடுவதில் மட்டும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை நம்மில் பலரின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. 

எல்லாம் வல்ல அல்லாஹ், அபூபக்ர்-உமர்[ரலி-அன்ஹும்] ஆகியோரைப் போன்று, நாமும்  நன்மையில் போட்டி போடக்கூடியவர்களாக ஆக்கியருள்வானாக!

சனி, 25 ஜூன், 2011

ஆக்கிரமிக்கும் ஆட்சியாளர்களும்- அனுமதி கேட்ட அமீருல்முஃமினீனும்.[new 25-06-2011]

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அதிகாரத்தை பயன்படுத்தி அடுத்தவர் நிலத்தை அபகரிக்கும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் அடியொற்றி வாழ்ந்த அருமை உமர்[ரலி] அவர்கள், ஆட்சி தலைவராக இருந்தபோதும் அடுத்தவர் நில விஷயத்தில் அதுவும் தனது உடலை அடக்கம் செய்ய தேவைப்படும் ஆறு அடி நிலத்திற்க்காக சம்மந்தப்பட்டவரிடம் அனுமதி கேட்ட அற்புதமான வாழ்க்கை பாரீர்;


அம்ர்இப்னு மைமூன் அல்அவ்தீ அறிவித்தார்;
உமர் இப்னுல் கத்தாப்(ரலி) அவர்களை (மரணத் தருவாயில்) பார்த்தேன். தம் மகனை நோக்கி, அவர், 'அப்துல்லாஹ்வே! இறைநம்பிக்கையாளர்களின் தாயார் ஆயிஷா(ரலி) அவர்களிடம் போய் உமர் ஸலாம் சொல்லிவிட்டு, என்னுடைய தோழர்களான (நபி(ஸல்) அபூ பக்ர்(ரலி) ஆகிய இருவருடன் நானும் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதற்கு அவர்களிடம் அனுமதி கேள்' எனக் கூறினார். அவ்வாறே கேட்கப்பட்டதும். ஆயிஷா(ரலி) நான் அந்த இடத்தை எனக்கென நாடியிருந்தேன். இருந்தாலும் இன்று நான் அவருக்காக அதைவிட்டுக் கொடுக்கிறேன்" என்றார். இப்னு உமர்(ரலி) திரும்பி வந்தபோது உமர்(ரலி) 'என்ன பதில் கிடைத்தது?' எனக் கேட்டார். இப்னு உமர்(ரலி) 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கு அவர் அனுமதியளித்துவிட்டார்' எனக் கூறினார். உடனே உமர்(ரலி) 'நான் உறங்கவிருக்கும் அந்த இடத்தைத் தவிர வேறெதுவும் எனக்கு மிக முக்கியமானதாக இல்லை. நான் (என்னுடைய உயிர்) கைப்பற்றப்பட்டவுடன் என்னைச் சுமந்து சென்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் (மீண்டும்) என்னுடைய ஸலாமைக் கூறி, 'உமர் அனுமதி கேட்கிறார்' எனக் கூறுங்கள். எனக்கு அனுமதியளித்தால் என்னை அங்கு அடக்கம் செய்யுங்கள்; இல்லையெனில் என்னை முஸ்லிம்களின் பொது மையவாடியில் அடக்கி விடுங்கள்.[ ஹதீஸ் சுருக்கம் நூல்;புஹாரி]


இந்த ஹதீஸில், முதலில் தன் மகன் மூலம் அனுமதி பெற்ற உமர்[ரலி] அவர்கள், தன்னை அந்த இடத்தில் அடக்கம் செய்வதற்கு முன்பாக மறுபடியும் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களிடம் அனுமதி கேட்குமாறு கூறுகிறார்கள் என்றால், எந்த அளவுக்கு அல்லாஹ் உமர்[ரலி] அவர்களின் உள்ளத்தை விசாலமாக்கியிருக்கவேண்டும்? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். முஸ்லிமல்லாத காந்தி அவர்கள், உமருடைய ஆட்சி போன்று ஆட்சி வேண்டும் என்று சிலாகித்து சொல்லும் அளவுக்கு உமர்[ரலி] அவர்களின் வாழ்க்கை/ஆட்சி இருந்தது. அந்த உமர்[ரலி] அவர்களின் கொள்கை வழிவந்த நாம் இனியாகிலும் அடுத்தவர் நிலத்தையோ,  பொருளையோ, அடுத்தவர் உரிமையையோ பறிக்காமல் வாழ்ந்து மரணிக்க முயற்ச்சிப்போம்.

வெள்ளி, 4 மார்ச், 2011

விருப்பிலும்- வெறுப்பிலும் நீதி!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

நபி[ஸல்] அவர்கள், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா[ரலி] அவர்களை 'கைபர்' எனுமிடத்தில் வசித்த யூதர்களுக்கு கிடைக்கும் கனி வகைகளையும் விளைபொருட்களையும் மதிப்பீடு செய்து வருமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அந்த யூதர்கள், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா[ரலி] அவர்கள் கருணையோடு நடந்துகொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா[ரலி] அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டனர்.
 
அப்போது அப்துல்லாஹ் இப்னு ரவாஹா[ரலி] அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! படைப்புகளிலேயே எனக்கு பிரியமான ஒருவரிடமிருந்து[நபி[ஸல்] அவர்களிடமிருந்து] நான் உங்களிடம் வந்துள்ளேன். ஆனால் நீங்களோ, குரங்குகளாகவும்- பன்றிகளாகவும் அல்லாஹ்வால் உருமாற்றம் செய்யப்பட்ட உங்களின் மூதாதையரை விட எனக்கு மிகவும் பிடிக்காதவர்கள். ஆயினும், நபி[ஸல்] அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் நேசமோ, உங்கள் மீது எனக்குள்ள வெறுப்போ உங்கள் விசயத்தில் நான் நீதி தவறுவதற்கு காரணமாக இருக்காது என்று கூறினார்கள்.
 
அப்போது யூதர்கள், வானங்களும் பூமியும் இன்னமும் நிலைத்திருப்பதற்கு இதுதான் காரணம் என்று கூறினார்கள்.
நூல்; அஹ்மத், முவத்தா மாலிக்.
 
யூதர்களில் பெரும்பாலோனோர்  இஸ்லாத்திற்கு பகைவர்களாகவே  இருந்து வருகின்றனர்  என்பதற்கு அன்றைய காலம் முதல் இன்றைய இஸ்ரேல் வரை சான்று பகர்கிறது. இஸ்லாத்தின் விரோதிகள் என்ற அடிப்படையில் 'கைபர்' யூதர்கள் மீது தனக்கு வெறுப்பு இருந்தபோதிலும், தனது வெறுப்பு அவர்களது விசயத்தில் எந்த வகையிலும் நீதிக்கு மாற்றமாக அமைந்துவிடாது என்று உறுதியளிக்கிறார்கள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா[ரலி] அவர்கள்.
 
ஆம்! இத்தகைய நீதியாளர்களைத் தான்  நபியவர்கள் உருவாக்கினார்கள். மேலும், முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.[5 ;8]
என்ற இறைவாக்கைப் பேணியவர்கள் இந்த சஹாபாக்கள்.
 
ஆனால் இன்று நமது நிலை என்ன? நமக்கு ஒருவர் மீது நேசமும்- ஒருவர் மீது வெறுப்பும் வந்துவிட்டால் அங்கே நீதி கொல்லப்படுகிறது. தனது நேசத்திற்குரியவர் அடுத்தவரின் அமைப்பை அபகரித்தபோதும்  அதை  நியாப்படுத்தும் அளவுக்கு ஒருவர் மீது கொண்ட நேசமோ, அல்லது அவர் மீது உள்ள பயமோ நம்மை மாற்றுகிறது என்றால், இப்படிப்பட்டவர்கள் இந்த சஹாபியின் வாழ்விலிருந்து படிப்பினை பெறவேண்டும். ஒரு முஸ்லிம் எப்படியிருக்கவேண்டும் என்பதற்கு இந்த நபித்தோழர் நல்லதொரு உதாரணமாவார்.