வியாழன், 17 செப்டம்பர், 2009

சஹாபாக்கள் தொழுகையை பாழடித்தார்களா?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சஹாபாக்களை மட்டம் தட்டும் ஒரு நூலில், நபி[ஸல்] அவர்களின் காலத்திற்கு பின்னால் சஹாபாக்கள் தொழுகையை பாழடித்துவிட்டார்கள் என்று கூறி அதற்கு சான்றாக அனஸ்[ரலி] அவர்கள் சம்மந்தப்பட்ட இரு ஹதீஸ்களை வெளியிட்டுள்ளார்கள்.
  • கைலான் அறிவித்தார். 'நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தவற்றில் எதனையும் (இன்று) என்னால் காண முடியவில்லை' என்று அனஸ்(ரலி) குறிப்பிட்டார்கள். 'தொழுகை இருக்கிறதே' என்று அவர்களிடம் கேட்கப் பட்டது. 'அதில் கூட செய்வதையெல்லாம் நீங்கள் (கூடக் குறைய) செய்து விடவில்லையோ? எனத் திருப்பிக் கேட்டார்கள்.

ஆதாரம்; புஹாரி எண் 529

  • ஸுஹ்ரீ அறிவித்தார். அனஸ் இப்னு மாலிக்(ரலி) 'டமாஸ்கஸ்' நகரிலிருக்கும்போது நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் அழுது கொண்டிருந்தனர். 'ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நான் கண்டவைகளில் இந்தத் தொழுகையைத் தவிர வேறு எதனையும் என்னால் (இன்றைய சமூகத்தில்) காண முடியவில்லை. அந்தத் தொழுகையும் கூட பாழ்படுத்தப் பட்ட நிலையிலுள்ளது' என அனஸ்(ரலி) கூறினார்.

ஆதாரம்;புஹாரி எண் 530

நபித்தோழர்கள் தொழுகையை பாழடித்துவிட்டார்கள் என்பதற்கு சான்றாக வைத்த இரு ஹதீஸ்களில் இரண்டவாது ஹதீஸில், தொழுகையை பாழடித்தது எந்த சமூகம் என்று தெளிவாக விளங்குகிறது. அனஸ்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்கள் மரணத்திற்கு பின்னால் வாழ்ந்த மக்களிடையே 'நபி[ஸல்] அவர்கள் காலத்திய நடைமுறைகள் இல்லாமையை குறிப்பிடும்போது, தொழுகையும் பாழடிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். நபி[ஸல்] அவர்கள் காலத்திற்கு பின்னால் வாழ்ந்த சமூகம் அதிலும் குறிப்பாக டமாஸ்கஸில் வாழ்ந்த சமூகத்தினர் முழுக்க முழுக்க நபித்தோழர்கள் என்று நிரூபிக்கமுடியுமா? நபித்தோழர்கள் சிலர் இருந்திருக்கலாம். ஆக, அடுத்த தலைமுறையினர் செய்த தவறை சகாபாக்களோடு முடிச்சுப்போட்டு 'பார்த்தீர்களா நபித்தோழர்கள் செய்த வேலையை' என்று கூறுவது, அமல்களே வாழ்க்கையாக கொண்ட அந்த நல்லடியார்களை இழிவுபடுத்துவதல்லவா? மேலும் சில மஸாயில்களில் மாறு செய்துவிட்டார்கள் என்று சில நபித்தோழர்கள் பெயரை குறிப்பிட்டு சொல்லும் அந்த நூலாசிரியர், இதில் சஹாபாக்கள் தொழுகையை பாழடித்தார்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்வதன் மூலம் , நபி[ஸல்] அவர்கள் காலத்திற்கு பின்னால் வாழ்ந்த நபித்தோழர்கள் அனைவரையும் இழிவுபடுத்துவதல்லவா இது? மேலும், உமர்[ரலி] அவர்கள் ஆட்சிக்காலத்தில் மக்கள் 20 ரக்அத்துகள் தராவீ ஹ தொழுதார்கள் என்று மாற்று கருத்துடையவர்கள் எடுத்துவைத்தபோது, மக்கள் செய்தால் அதற்கு எப்படி உமர்[ரலி] பொறுப்பாக முடியும் என்று மறுப்புசொன்னவர்கள், இன்று நபி[ஸல்] அவர்களுக்கு பின்னால் வாழ்ந்த சமூகத்தில் யாரோ செய்த செயலுக்கு அன்றைய காலத்தில் வாழ்ந்த சஹாபாக்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்று சிந்திக்க மறந்ததேன்..? மேலும் இப்படி ஒரு நிலை உள்ளதே என்று வருந்தும் அனஸ்[ரலி] அவர்களும் ஒரு சகாபிதானே! ஆக, கண்பார்வையில்லா நிலையிலும் கடமையை செய்யும் அளவுக்கு சஹாபாக்கள் அமல்களில் கவனமுடையவர்கள். அப்படிப்பட்ட அந்த மேதைகளை அமல்களை பெயரளவுக்கு செய்துவரும் நாம் 'அமல்களை பாழாக்க்கியவர்கள்' என்று விமர்சிப்பது வேடிக்கையானது வியப்பிற்குரியது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக