செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

தங்கத்தை விட தாஹா நபியின் கட்டளைக்கு முன்னுரிமை தந்தவர்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 
அம்ர் இப்னு ஷரீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான், ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) வந்து, தம் கையை என்னுடைய தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூ ராஃபிஉ(ரலி) வந்து, 'ஸஅதே! எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக!' எனக் கூறினார்கள். அதற்கு ஸஅத்(ரலி) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்க மாட்டேன்!" என்றார்கள். அருகிலிருந்த மிஸ்வர்(ரலி) அவர்கள், ஸஅத்(ரலி) அவர்களிடம் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்!" என்றார்கள். அப்போது ஸஅத்(ரலி), 'அல்லாஹ்வீன் மீது ஆணையாக! தவணை அடிப்படையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தரமாட்டேன்!" என்று கூறினார்கள். அதற்கு அபூ ராஃபிவு(ரலி), 'ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது; அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிராவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்' என்று கூறிவிட்டு ஸஅதுக்கே விற்றார்.
ஆதாரம் புஹாரி எண் 2258
 
அன்பானவர்களே! நாம் நம்முடைய வீட்டை விற்பதாக இருந்தால் நமது வீட்டை வாங்கிக்கொள்கிறீர்களா என்று அண்டைவீட்டாரிடம் கேட்கத் தயங்குவோம். காரணம் பெரும்பாலும் அண்டை வீட்டினரோடு நமக்கு நல்லுறவு  இருப்பதில்லை. மேலும் நமது வீடோ அல்லது நிலமோ  மற்றவர்களுக்கு பயனளிப்பதைவிட நமது அண்டை வீட்டினருக்கே அதிக பயன்தரக் கூடியதாக இருக்கும். ஆனாலும் நாம் யார் அதிக விலை தருகிறாரோ அவருக்குத்தான் நமது வீட்டையோ,நிலத்தையோ விற்க முனவருவோம். காரணம் நமக்கு நபிகளாரின் கட்டளைகளை விட உலகத்தின் பொருளாதாரம் பிரதானமாக தெரிகிறது. ஆனால் மேற்கண்ட செய்தியில், அபூ ராஃபிஊ[ரலி] அவர்கள், ஐநூறு தங்க காசுகளுக்கு விலைக்கு கேட்கப்பட்ட தனது வீட்டை தனது அண்டை வீட்டினரான ஸஅத் இப்னு அபி வக்காஸ்[ரலி] அவர்களுக்கு, விலை குறைவாக நான்காயிரம் வெள்ளிக்காசுகளுக்கு அதுவும் தவணை  முறையில் வழங்குவதற்கு காரணம், 'அண்டை வீட்டாரே அதிக உரிமை படைத்தவர்' என்ற நபியவர்களின் கட்டளைதான் என்பதைக் காணும்போது, அந்த நல்லறத் தோழர்களுக்கு முன்னால், உலகின் செல்வாமா..? அல்லது இறைத் தூதரின் கட்டளையா..? என்ற கேள்வி வருமாயின், உலகின் செல்வங்களுக்காக ஒருபோதும் எங்கள் நபியின் கட்டளையை உதாசீனப்படுத்தமாட்டோம் என்ற அவர்களின் கொள்கை உறுதி மெய்சிலிர்க்க செய்வதாக உள்ளது. ஆனால் நாம் இன்றைக்கு உலகின் வசதி வாய்ப்ப்புகளுக்காக இன்னும் பல்வேறு விஷயங்களுக்காக தெளிவான நபியவர்களின் கட்டளையை புறக்கணிப்பவர்களாக இருப்பது உள்ளபடியே வேதனைக்குரியதாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், நபியவர்களின் கட்டளைக்கு அணுவளவேனும் மற்றம் செய்யாமல் நடந்த /நடக்க முயன்ற அந்த நல்லறத்தோழர்களை பொருந்திக் கொள்வானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக