வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

எமது சொல்லும், செயலும் இஸ்லாமே என வாழ்ந்தவர்!

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்;

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'பச்சை
குத்திவிடும் பெண்கள், பச்சை
குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?' என்று கூறினார்கள். இச்செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, 'உம்மு யஅகூப்' எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து, 'இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், '(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!' என்று கேட்டதற்கு அவர்கள், 'நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். 'இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதைவிட்டும் நீங்கள் விலகி இருங்கள்' எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா?' என்று கேட்டார்கள். அந்தப் பெண், 'ஆம் (ஒதினேன்)' என்று பதிலளித்தார். அப்துல்லாஹ்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி, 'உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக கருதுகிறேன்' என்று கூறினார். அப்துல்லாஹ்(ரலி), 'சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!' என்று கூறினார்கள். எனவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்' என்று கூறினார்கள். நூல்;புஹாரி எண் 4886
 
அன்பானவர்களே! நபித் தோழர்களில் மிகச்சிறந்தவர்களில் ஒருவரான இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள், பச்சை குத்துவது உள்ளிட்ட அல்லாஹ் வடிவமைத்ததை மாற்றுபவர்களை சபிக்கிறார்கள். இச்செய்தி ஒரு பெண்மணிக்கு எட்டுகிறது. சரி! சொன்னவர் சாமான்யர் அல்ல. ஒரு உயர்வான நபித்தோழர். எனவே அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று அப்படியே நம்பிவிடவில்லை. மாறாக, இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களிடம் வந்து உங்களின் கூற்றுக்கு என்ன ஆதாரம்..? என்கிறார். இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப் பட்டுள்ளவர்களை நான் சபிக்கக் கூடாதா என்கிறார்கள். அப்போதும் அப்பெண்மணி விடவில்லை. குர்ஆணை முழுமையாக ஒதியுள்ளேன் எனவே நீங்கள் கூறுவது போல இல்லையே என்கிறார். இந்த அளவுக்கு சஹாபிப் பெண்கள் தெளிவாக இருந்துள்ளார்கள். குர்ஆணோடு முழு தொடர்போடு இருந்துள்ளார்கள். ஒருவர் கூறும் சட்டம் குர்ஆனில் இல்லை என்று அடித்து சொல்லும் அளவுக்கு குர்ஆணை முழுமையாக மனனம் செய்துள்ளார்கள். ஆனால் இன்று நம்முடைய பெண்கள்  மட்டுமல்ல; ஆண்களில் கூட  பெரும்பாலோருக்கு குர்ஆண்  ஓத தெரிவதில்லை. காரணம் போடுபோக்குத்தான். எதுவா இருந்தாலும் ஆலிம்ஷாக்களிடம் கேட்டுக்கொள்வோம். அவர்கள் சொல்வதை அப்படியே அமுல்படுத்துவோம் என்ற மெத்தனப்போக்குத்தானே  இத்தனை குழப்பங்களுக்கு வழிவகுத்தது..? இது ஒருபுறமிருக்க, இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களிடம் அப்பெண்மணி, 'எல்லாம் சரிதான் ஆனா ஒங்க வீட்டுல ஒங்க துணைவியார் செய்கிறாகளாமே' என இழுக்க, சட்டென இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் என் வீட்டில் போய் பாருங்கள் என்கிறார்கள். அதோடு இறுதியாக, என் மனைவி மட்டும் அப்படி செய்பவளாக இருந்தால் அவளோடு நான் சேர்ந்து வாழமாட்டேன் என்கிறார்கள் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள். இன்றைக்கு வெளியிலே மார்க்க சட்டம் பேசக்கூடிய நம்மில் பலரின் வீட்டில் நாம் பேசக்கூடிய சட்டங்கள் பெரும்பாலும் நமது குடும்பத்தாரால் அமுல்படுத்தப்படுவதில்லை. ஆனாலும் நாம் அதை கண்டுகொள்வதில்லை. அவ்வளவு ஏன்..? பல நேரங்களில் நாமே பல அமல்களை கோட்டை விடக்கூடியவர்களாக இருக்கிறோம். 'ஊருக்குத்தான் உபதேசம்'  என்பதற்கு ஏற்ப நமது செயல்பாடுகள் உள்ளன.ஆனால் அருமை சஹாபா பெருமக்கள் சொல்லிலும் செயலிலும் தூய்மையாளர்களாக திகழ்ந்ததோடு, தந்து குடும்பத்தார் விசயத்திலும் அத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களின் இந்த செய்தி உணர்த்துகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் மார்க்கத்தை சொல்லில் மட்டுமல்ல; செயலிலும் கடைபிடிக்க அருள்புரிவானாக!

'பட்டு' இவரது கைக்குட்டைக்கு கிட்ட நிற்குமா ...?

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம் .
அகழ்ப்போரின்போது ஸஅத் இப்னு முஆத்(ரலி) தாக்கப்பட்டார்கள். அன்னாரின் கை நரம்பில் குறைஷிகளில் ஒருவனான ஹிப்பான் இப்னு அரிஃகா என்றழைக்கப்பட்டவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி)விட்டான். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலிலேயே (அவருக்குக்) கூடாரமொன்றை அமைத்தார்கள். அகழ்ப் போரை முடித்துக் கொண்டு வந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் தங்களின் தலையிலிருந்து புழுதியைத் தட்டிய வண்ணம் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'நாங்கள் இன்னும்  ஆயுதங்களைக் கீழே வைக்கவில்லை. அவர்களை நோக்கி (படை நடத்தி)ச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு 'எங்கே? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது 'பனூ குறைழா' குலத்தினர் (வசிப்பிடம்) நோக்கி ஜிப்ரீல் (அலை) அவர்கள் சைகை செய்தார்கள். உடனே,  உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பனூ குறைழா நோக்கிச் சென்றார்கள்.(பல நாள் முற்றுகைக்குப் பின்னர்) ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக் கொண்டு (யூதர்களான) 'பனூ குறைழா' குலத்தார் (கைபரிலிருந்த தங்கள் கோட்டையிலிருந்து) இறங்கி வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்களுக்கு ஆளனுப்பிட, அன்னார் கழுதையின் மீது (சவாரி செய்தபடி) வந்தார்கள். (நபிகளார் தாற்காலிமாக அமைத்திருந்த) தொழுமிடத்திற்கு அருகே அன்னார் வந்து சேர்ந்ததும், நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தலைவரை... அல்லது உங்களில் சிறந்த வரை... நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கி விடுங்கள்" என்று அன்சாரிகளிடம் கூறினார்கள். பிறகு, '(சஅதே!) இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறீர்கள்?') என்று கேட்டார்கள். ஸஅத்(ரலி), 'இவர்களில் போரிடும் வலிமை கொண்டவர்களை நீங்கள் கொன்று விட வேண்டும்; இவர்களுடைய பெண்களையும் குழந்தைகளையும் நீங்கள் கைது செய்திட வேண்டும் என்று நான் தீர்ப்பளிக்கிறேன்" என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்."... அல்லது 'அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்" என்று கூறினார்கள்.
நூல்; புஹாரி எண் 4121 எண் 4122
 
ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்கள் மதீனாவில் அவ்ஸ் கோத்திரத்தாரின் தலைவராக இருந்தார்கள். இந்த கோத்திரத்தாரோடு பனூகுறைளா கோத்திரத்தார் நட்புறவு பாராட்டி வந்தனர். எனவே அவ்ஸ் கோத்திரத்தின் தலைவரான ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்கள் நமக்கு சாதகமான தீர்ப்பை வழங்குவார்கள் என கருதினார்கள். ஆனால் அல்லாஹ்வின் நேசரான ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்களோ, இறைவனின் பொருத்தத்தை மட்டும் நாடியவர்களாக, அவன் விரும்பும் தீர்ப்பை பனூகுறைலாக்கள் விசயத்தில் வழங்குகிறார்கள். அதற்காக அல்லாஹ்வின் தீர்பபுப் படியே தீர்ப்பளித்தீர்கள் என்று நபியவர்களால் பாராட்டப் படுகிறார்கள். மேலும் ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் நேசம் கொண்டவர்களாக திகழ்ந்தார்கள். அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்டபோது, இறைத்தூதர் அவர்களே! அவதூறு சொன்னவர்களில்  எனது கோத்திரத்தார் இருந்து, நீங்கள் உத்தரவிட்டால் அவனது கழுத்தை நான் துண்டிக்கிறேன் என்று முழங்கியவர். அதுபோலவே ஸஅத் ரலி அவர்கள் மீது நபி[ஸல்] வர்களும் மிகுந்த நேசம் கொண்டவர்களாக இருந்தார்கள். எனவேதான் போரில் ஸஅத் [ரலி] அவர்கள் காயமுற்றவுடன்  அவர்களை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்காக மஸ்ஜிதுன் நபவியிலேயே அவருக்காக கூடாரம் அமைத்து கவனித்தார்கள். நபியவர்கள் மட்டுமன்றி, அல்லாஹ்வும் ஸஅத்[ரலி] அவர்களை நேசித்தான் என்பதற்கு, ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறைசிம்மாசனம் அசைந்தது [புஹாரி] சான்றாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்களுக்கு மகத்தான சுவன பதவிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அது குறித்து அறிந்துகொள்ள ஒரு பொன்மொழி;
 
அனஸ்(ரலி) அறிவித்தார்கள்;

நபி(ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான அங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள் பட்டுத் துணியை (அணிவதைத்) தடை செய்து வந்தார்கள். மக்களோ அந்த அங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! சொர்க்கத்தில் ஸஅத் இப்னு முஆ
துக்கு கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிடத் தரமானவையாயிருக்கும்" என்று கூறினார்கள்.[புஹாரி எண் 2615 ]
 
எங்கள் இறைவா! உனது திருப்தியே இலக்காக கொண்டு வாழ்ந்த அந்த நல்லறத்தோழர்களின் வழியில் எங்களையும் வாழ அருள்புரிவாயாக!

புதன், 25 ஆகஸ்ட், 2010

இறைவனுக்கு எதிரிகள்; எங்களுக்கும் எதிரிகளே!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
பத்ர் போரில் பிடிபட்ட கைதிகள் குறித்து, நபி (ஸல்) தங்களது தோழர்களுடன் ஆலோசித்தார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) "அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் நமது தந்தை வழி உறவினர்கள். நமது சகோதரர்கள் மற்றும் நெருக்கமான குடும்பத்தார்கள். எனவே, (இவர்களை கொலை செய்யாமல்) இவர்களிடம் (ஃபித்யா) ஈட்டுத்தொகை பெற்றுக் கொண்டு இவர்களை விடுதலை செய்வோம். நாம் வாங்கும் ஈட்டுத்தொகை இறைநிராகரிப்பாளர்களை எதிர்ப்பதற்கு நமக்கு உதவியாக இருக்கும். அதிவிரைவில் அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டக் கூடும். அப்போது இவர்களும் நமக்கு உதவியாளர்களாக மாறுவர்" என்று கூறினார்கள்.

பின்பு நபி (ஸல்) உமர் (ரழி) அவர்களிடம் "கத்தாபின் மகனே! நீங்கள் என்ன யோசனை கூறுகிறீர்கள்?" எனக் கேட்டார்கள். "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் (ரழி) அவர்கள் கூறிய ஆலோசனையை நான் விரும்பவில்லை. மாறாக, இவர்களைக் கொலை செய்வதே எனது யோசனை. எனது இன்ன உறவினரை என்னிடம் கொடுங்கள். அவர் கழுத்தை நான் வெட்டுகிறேன். அக்கீல் இப்னு அபூதாலிபை அலீ (ரழி) அவர்களிடம் கொடுங்கள். அலீ (ரழி) அவர் கழுத்தை வெட்டட்டும். ஹம்ஸா (ரழி) அவர்களிடம் அவரது இன்ன சகோதரரை கொடுங்கள். ஹம்ஸா (ரழி) அவரது கழுத்தை வெட்டட்டும். இதன்மூலம் இணைவைப்பவர்கள் மீது எங்களது உள்ளத்தில் எந்தப் பிரியமும் இல்லை என்று அல்லாஹ் தெரிந்து கொள்வான். அது மட்டுமா! இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் குறைஷிகளின் தலைவர்களும் அவர்களை வழி நடத்தும் கொடுங்கோலர்களும் ஆவார்கள்" என்று உமர் (ரழி) கூறினார்கள்.

அபூபக்ர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) ஏற்று கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். உமர் (ரழி) கூறுகிறார்கள்:
 
அபூபக்ர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) விரும்பினார்கள். நான் கூறியதை விரும்பவில்லை. எனவே கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். அதற்கு அடுத்த நாள் நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரழி) அவர்களும் அழுதவர்களாக இருந்தார்கள். நான் "அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்களது தோழரும் ஏன் அழுகிறீர்கள்? அழுகைக்குரிய செய்தி எதுவும் இருப்பின், முடிந்தால் நானும் அழுகிறேன். முடியவில்லையென்றால் நீங்கள் அழுவதற்காக நானும் அழ முயல்கிறேன்" என்றேன். அதற்கு நபி (ஸல்) "ஈட்டுத்தொகை வாங்கியதின் காரணமாக உமது தோழர்களுக்கு ஏற்பட்டதை எண்ணி நான் அழுகிறேன். அருகில் உள்ள ஒரு மரத்தை சுட்டிக் காண்பித்து இம்மரத்தை விட நெருக்கமாக அவர்களுக்குரிய வேதனை எனக்குக் காண்பிக்கப்பட்டது" என்றார்கள்.

இது தொடர்பாகவே அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:

(இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளைக் கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்வை விரும்புகிறான். அல்லாஹ் மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். அல்லாஹ்விடம் (பத்ர் போரில் கலந்த முஸ்லிம்களுக்கு மன்னிப்பு உண்டு என்ற) விதி ஏற்கனவே உறுதி செய்யப்படாமலிருப்பின் நீங்கள் (பத்ர் போரில் கைதிகளிடமிருந்து ஈட்டுத் தொகையை) வாங்கியதில் மகத்தானதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும். (அல்குர்ஆன் 8:67, 68)
நூல்; முஸ்லிம்.
 
அன்பானவர்களே! அல்லாஹ்வின் பகைவர்களை முதன்முதலில் வெற்றிகொண்டு இம்மண்ணில் ஏகத்துவத்தை நிலை நாட்டிய பத்ர் போரில் உயிரோடு பிடிக்கப்பட்ட கைதிகள்  குறித்து நபி[ஸல்] அவர்கள் ஆலோசித்தபோது, உமர்[ரலி] அவர்கள் கூறிய வார்த்தைகள் அவர்களது ஈமானிய உறுதியையும், இறைவன் மீது கொண்ட அளப்பரிய நேசத்தையும் வெளிப்படுத்துவதோடு, இறைவனது பகைவர்கள்  என்னதான் எங்களின் ரத்தபந்தமாக இருந்தாலும் அவர்கள் எங்களுக்கு எதிரிகளே என்று கர்ஜித்த அந்த வீரமும், அல்லாஹ் பெரியவன்! அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப உமர்[ரலி] அவர்கள் மொழிந்தவையாகும். அதற்கு உமர்[ரலி] அவர்களின் கருத்தை ஆதரித்து அல்லாஹ் இறக்கிய வசனம் சான்றுபகர்கிறது. மேலும், இந்த வசனம் இறங்கிய மாத்திரமே அல்லாஹ்வின்தூதர்[ஸல்] அவர்களும், தோழர்களும் அழுவதைக் கண்ட உமர்[ரலி] அவர்கள், இறைத்தூதர் அவர்களே! ஏன் அழுகிறீர்கள் என்று சொன்னால் நானும் அழுவேன். அழ முடியவில்லையாயின் அழுக முயற்ச்சிக்கிறேன் என்றார்களே உமர் அவர்கள். இதில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள்  மீது உமர்[ரலி] கொண்டிருந்த அளப்பரிய நேசம் வெளிப்படுவதை காணலாம். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் சிரித்தால் சிரித்து; அவர்கள் அழுதால் அழுது, எங்களுக்கென தனி சந்தோசம் எதுவுமில்லை; எங்கள் தலைவரின் மகிழ்ச்சியே எங்களின் மகிழ்ச்சி என்று வாழ்ந்த அந்த உத்தமத் தோழர்களை உலகம் உள்ளளவும் உண்மை முஃமின்களின் உள்ளம் நினைவு கூறும் இன்ஷா அல்லாஹ்.
 
எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த நல்லறத் தோழர்களுக்கு சுவனத்தில் உயர்வான அந்தஸ்த்தை வழங்கிடுவானாக!

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

தங்கத்தை விட தாஹா நபியின் கட்டளைக்கு முன்னுரிமை தந்தவர்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 
அம்ர் இப்னு ஷரீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான், ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) வந்து, தம் கையை என்னுடைய தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூ ராஃபிஉ(ரலி) வந்து, 'ஸஅதே! எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக!' எனக் கூறினார்கள். அதற்கு ஸஅத்(ரலி) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்க மாட்டேன்!" என்றார்கள். அருகிலிருந்த மிஸ்வர்(ரலி) அவர்கள், ஸஅத்(ரலி) அவர்களிடம் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்!" என்றார்கள். அப்போது ஸஅத்(ரலி), 'அல்லாஹ்வீன் மீது ஆணையாக! தவணை அடிப்படையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தரமாட்டேன்!" என்று கூறினார்கள். அதற்கு அபூ ராஃபிவு(ரலி), 'ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது; அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிராவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்' என்று கூறிவிட்டு ஸஅதுக்கே விற்றார்.
ஆதாரம் புஹாரி எண் 2258
 
அன்பானவர்களே! நாம் நம்முடைய வீட்டை விற்பதாக இருந்தால் நமது வீட்டை வாங்கிக்கொள்கிறீர்களா என்று அண்டைவீட்டாரிடம் கேட்கத் தயங்குவோம். காரணம் பெரும்பாலும் அண்டை வீட்டினரோடு நமக்கு நல்லுறவு  இருப்பதில்லை. மேலும் நமது வீடோ அல்லது நிலமோ  மற்றவர்களுக்கு பயனளிப்பதைவிட நமது அண்டை வீட்டினருக்கே அதிக பயன்தரக் கூடியதாக இருக்கும். ஆனாலும் நாம் யார் அதிக விலை தருகிறாரோ அவருக்குத்தான் நமது வீட்டையோ,நிலத்தையோ விற்க முனவருவோம். காரணம் நமக்கு நபிகளாரின் கட்டளைகளை விட உலகத்தின் பொருளாதாரம் பிரதானமாக தெரிகிறது. ஆனால் மேற்கண்ட செய்தியில், அபூ ராஃபிஊ[ரலி] அவர்கள், ஐநூறு தங்க காசுகளுக்கு விலைக்கு கேட்கப்பட்ட தனது வீட்டை தனது அண்டை வீட்டினரான ஸஅத் இப்னு அபி வக்காஸ்[ரலி] அவர்களுக்கு, விலை குறைவாக நான்காயிரம் வெள்ளிக்காசுகளுக்கு அதுவும் தவணை  முறையில் வழங்குவதற்கு காரணம், 'அண்டை வீட்டாரே அதிக உரிமை படைத்தவர்' என்ற நபியவர்களின் கட்டளைதான் என்பதைக் காணும்போது, அந்த நல்லறத் தோழர்களுக்கு முன்னால், உலகின் செல்வாமா..? அல்லது இறைத் தூதரின் கட்டளையா..? என்ற கேள்வி வருமாயின், உலகின் செல்வங்களுக்காக ஒருபோதும் எங்கள் நபியின் கட்டளையை உதாசீனப்படுத்தமாட்டோம் என்ற அவர்களின் கொள்கை உறுதி மெய்சிலிர்க்க செய்வதாக உள்ளது. ஆனால் நாம் இன்றைக்கு உலகின் வசதி வாய்ப்ப்புகளுக்காக இன்னும் பல்வேறு விஷயங்களுக்காக தெளிவான நபியவர்களின் கட்டளையை புறக்கணிப்பவர்களாக இருப்பது உள்ளபடியே வேதனைக்குரியதாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், நபியவர்களின் கட்டளைக்கு அணுவளவேனும் மற்றம் செய்யாமல் நடந்த /நடக்க முயன்ற அந்த நல்லறத்தோழர்களை பொருந்திக் கொள்வானாக!

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

புகார் சொல்லும்போதும் 'புனைந்து' சொல்லாத மாதரசி!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இஸ்லாமிய வரலாற்றில் கொள்கையை காக்கும் பொருட்டு முதன் முதலாக செய்யப்பட்ட ஹிஜ்ரத் அபிசீனியா ஹிஜ்ரத்தாகும். இந்த தியாகப் பயணத்தில் ஜாஃபர் இப்னு அபீதாலிப் [ரலி] அவர்களும் அவர்களது அருமை மனைவி அஸ்மா பின்த் உமைஸ் [ரலி] அவர்களும் அடங்குவர். பின்னாளில் நபி[ஸல்] அவர்கள் மதீனா ஹிஜ்ரத் செய்து அங்கு இஸ்லாமிய சாம்ராஜ்யம் நிறுவி, யூதர்களை கைபர் போரில் வெற்றி கொண்ட சமயத்தில் அபிசீனியாவில் இருந்த முஹாஜிர்கள் மதீனாவை வந்தடைந்தனர். அப்படி மதீனாவை வந்தடைந்த அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்களுக்கும், தியாக வேங்கை உமர்[ரலி] அவர்களுக்கும் ஒரு வாக்குவாதம். அதாவது அபிசீனியா ஹிஜ்ரத் செய்தவர்கள் இறைத்தூதருக்கு நெருக்கமானவர்களா..? அல்லது மதீனா ஹிஜ்ரத் செய்தவர்கள் இறைத்தூதருக்கு நெருக்கமானவர்களா..? என்று. இனி ஹதீஸில் இருந்து பார்ப்போம்;

[அபிசீனியாவில் இருந்து]மதீனாவிற்கு வந்தவர்களில் ஒருவரான அஸ்மா பின்த் ஹுமைஸ்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்களின் மனைவியார் அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை சந்திப்பதற்காக சென்றார்கள். பிறகு உமர்[ரலி] அவர்கள் தமது புதல்வி ஹஃப்ஸா[ரலி] அவர்களை காண அவர்களின் இல்லத்திற்கு சென்றார்கள். அப்போது ஹஃப்ஸா[ரலி] அவர்களுக்கு அருகில் அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்கள் இருந்தார்கள். உமர்[ரலி] அவர்கள் அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்களை கண்டபோது இவர் யார்.? என்று [தம் மகளிடம்] கேட்டார்கள். இவர் அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] என்று மறுமொழி பகர்ந்தார்கள் ஹஃப்ஸா[ரலி]. இவர் அபிசீனியரா..? கடல் மார்க்கமாக [மதீனா] வந்தவரா என்று உமர்[ரலி] கேட்டார்கள். அதற்கு ஆம் என்று அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்கள் கூறினார்கள். அப்போது உமர்[ரலி] அவர்கள்,

உங்களுக்கு முன்பே நாங்கள் [மதீனாவிற்கு] ஹிஜ்ரத் செய்து வந்துவிட்டோம். எனவே உங்களை விட நாங்களே இறைத்தூதர்[ஸல்] அவர்களுக்கு உரியவர்கள் என்று கூறினார்கள். இதைக்கேட்டு அஸ்மா[ரலி] அவர்கள் கோபப்பட்டு, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அப்படியில்லை. நீங்கள் இறைத்தூதர்[ஸல்] அவர்களுடன் இருந்தீர்கள். உங்களில் பசித்தவர்களுக்கு அவர்கள் உணவளித்தார்க்கள். உங்களில் அறியாதவர்களுக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். நாங்களோ வெகு தொலைவில் இருக்கும் பகைவர்கள் உள்ள அபிசீனிய நாட்டில் அல்லது பூமியில் இருந்தோம். அல்லாஹ்வுக்காவும், அவனது தூதருக்காகவுமே இதைச்செய்தோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் சொன்னதை இறைத்தூதர்[ஸல்] அவர்களிடம் தெரிவிக்கும்வரை நான் எதையும் உண்ணவோ, குடிக்கவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம் , அச்சுறுத்தப்பட்டோம். இதை நான் இறைத்தூதரிடம் கூறுவேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் பொய் சொல்லவும் மாட்டேன். திரித்துக் கூறவும் மாட்டேன். நீங்கள் கூறியதை விட எதையும் கூட்டிச்சொல்லவும் மாட்டேன் என்றார்கள்.

பின்பு நபி[ஸல்] அவர்கள் வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்கள் 'உமர் [ரலி] இன்னின்னவாறு கூறினார்கள்' என்றார்கள். அதற்கு நபி[ஸல்] அவர்கள், அவருக்கு நீங்கள் என்ன பதிலளித்தீர்கள்..? என்று கேட்டபோது, அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன் என்று அஸ்மா[ரலி] கூறினார்கள். அப்போது நபி[ஸல்] அவர்கள், உங்களைவிட அவர் எனக்கு உரியவர் அல்லர்; அவருக்கும் அவரது சகாக்களுக்கும் ஒரே ஒரு ஹிஜ்ரத் [செய்தசிறப்பு] தான் உண்டு. [அபிசீனியாவிலிருந்து] கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு இரண்டு [அபிசீனியா-மதீனா] ஹிஜ்ரத் [செய்த சிறப்பு] உண்டு என்று கூறினார்கள்.
நூல்;புஹாரி எண் 4230

அன்பானவர்களே! நாம் ஒருவரைப்பற்றி ஒருவரிடம் புகார் அளிக்க செல்வோமாயானால், நாம் யார் மீது புகாரளிப்போமோ அவர்மீது அவர் சொன்னவை மட்டுமன்றி, சொல்லாதவைகளையும் இட்டுக்கட்டி நமது கருத்தை நிலைநாட்டிட, நமக்கு சாதகமான கருத்தை தீர்ப்பாக பெற்றிடவே முனைவது நம்மில் பலரது இயல்பாகவே உள்ளது. இயக்கங்கள் பிரிவுக்குப்பின் பின் ஒருவரை ஒருவர் சேற்றை வாரி வீசிக்கொள்வதும் இந்த அடிப்படையில்தான். ஆனால் இந்த பொன்மொழியிலோ, இறைத்தூதர் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் வந்தபின்னால் மதீனாவுக்கு புலம்பெயர்ந்து வந்தவர்களில் தாமே முதலானவர் என்பதை வைத்து, நாங்கள்தான் இறைத்தூதருக்கு உவப்பானவர்கள் என்று எதேச்சையாக உமர்[ரலி] அவர்கள் கூறியதைக் கண்டு சீரும்வேங்கையாக பொங்கி எழுந்த அஸ்மா பின்த் உமைஸ்[ரலி]அவர்கள், உமர்[ரலி] அவர்கள் குறித்து இறைத்தூதரிடம் புகாரளிக்க செல்லும் போது சொன்ன வார்த்தை, பொய்யுரைக்கமாட்டேன்; திரித்துக் கூறமாட்டேன்; நீங்கள் சொன்னதை விட கூடுதலாக ஒரு வார்த்தை கூட கூறமாட்டேன் என்றார்களே! இது சஹாபாக்கள் தியாகிகளாக மட்டுமல்ல; வாய்மையாளர்களாகவும் திகழ்ந்துள்ளார்கள் என்பதற்கு வரலாறு கூறும் சான்றாகும். தனக்கு ஒருவனை பிடிக்கவில்லைஎன்றால் அவனை எங்ஙனமேனும் மண்ணை கவ்வவைக்க சபதமேற்று அவனைப்பற்றி 'கையில் மடியில்' போட்டு சொல்லும் கெட்ட குணத்தை கொண்டவர்களுக்கு இந்த அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்களின் வாழ்க்கை மிகப்பெரும் படிப்பினையாக உள்ளது.

சனி, 14 ஆகஸ்ட், 2010

பாவத்தைக் கண்டு பதறி பரிகாரம் கண்டவர்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அபூஹுரைரா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நாங்கள் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் அமர்ந்திருந்த போது, ஒருவர் நபி[ஸல்] அவர்களிடம் வந்து, இறைத்தூதர்[ஸல்] அவர்களே நான் அழிந்துவிட்டேன் என்றார். அப்போது நபி[ஸல்] அவர்கள், உமக்கு என்ன நேர்ந்தது..? என்று கேட்டார்கள். நான் நோன்பு வைத்துக்கொண்டு என்மனைவியிடம் கூடிவிட்டேன் என்று கூறினார். அப்போது நபி[ஸல்] அவர்கள், விடுதலை செய்வதற்கு ஒரு அடிமை உம்மிடம் இருக்கிறாரா..? என்று கேட்டார்கள் . அதற்கு அவர், இல்லை என்று சொன்னார். தொடர்ந்து இரு மாதம் நோன்பு வைக்க உமக்கு சக்தி இருக்கிறதா..? என்று நபி[ஸல்] அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா..? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை என்று சொன்னார். நபி[ஸல்] அவர்களிடம் பேரிச்சம் பழம் நிறைந்த 'அரக்' எனும் அளவை கொண்டுவரப்பட்டது. அப்போது நபி[ஸல்] அவர்கள், கேள்வி கேட்டவர் எங்கே என்று கேட்டார்கள். நானே என்று அவர் கூறினார். இதைப்பெற்று தர்மம் செய்வீராக! என்று இறைத்தூதர்ஸல்] அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், இறைத்தூதர்[ஸல்] அவர்களே! என்னைவிட ஏழையாக இருப்போருக்கா[நான் தர்மம் செய்யவேண்டும்]..? மதீனாவின் [கருங்கற்கள் நிறைந்த] இரு மலைகளுக்கும் மத்தியில் என் குடும்பத்தை விட பரம ஏழைகள் யாருமில்லை என்று கூறினார். அப்போது நபி[ஸல்] அவர்கள் தங்களின் கடவாய் பற்கள் தெரியும் அளவுக்கு சிரித்தார்கள்; பிறகு இதை உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக! என்றார்கள்.
நூல்;புஹாரி எண்; 1936

அன்பானவர்களே! பாவங்கள் செய்வது மனித இயல்பு. ஆனால் செய்த பாவத்தை எண்ணி வருந்துவது ஒரு இறை நம்பிக்கையாளனின் பண்பு. ஒரு இறை நிராகரிப்பாளன் தான் செய்யும் பாவத்தை தன் மீது அமரும் கொசுக்கு நிகராக கருதுவான்; ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளன் தான் செய்யும் பாவத்தை தன் மீது ஒரு மலை சாய்வதைப் போல கடுமையாக கருதுவான். அதனால்தான், ஆதமின் மகன் பாவம் செய்யக்கூடியவனே; அவர்களில் சிறந்தவன் தவ்பா எனும் பாவமன்னிப்பு கோருபவன் என்ற நபிமொழிக்கேற்ப, இந்த ஸஹாபி உணர்ச்சி மேலிட ஒரு பாவம் செய்கிறார். அதுவும் அந்நியப் பெண்ணிடம் அந்த தவறை செய்யவில்லை. அவருக்கு ஹலாலான மனைவியிடமே செய்கிறார். ஆனாலும் ரமளானில் பகலில் நோன்பு நோற்ற நிலையில் செய்ததால்தான் பாவமாகியது. அந்த பாவம் அவரும்- அவருடைய மனைவியும் தவிர வேறு எவரும் அறியாத நிலையிலும் கூட தான் செய்த பாவத்தால் கைசேதப்பட்டு தான் 'நாசமாகி' விட்டதாக புலம்பிக்கொண்டு நபியவர்களிடம் ஓடோடி வருகிறார். நபியவர்களிடம் பரிகாரம் காண்கிறார். இதுதான் ஒரு இறை நம்பிக்கையாளின் பண்பாகும். சஹாபாக்கள் பாவம் செய்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?
என்று அவர்களை குற்றவாளிகளாக காட்ட இந்த ஹதீஸை சிலர் சொல்வார்கள். ஆனால் இந்த ஹதீஸில் அவர்கள் பாவத்தை செய்து விட்டு துடித்த அந்த துடிப்பை; செய்த பரிகாரத்தை மறைத்து அல்லது மறந்து விடுவார்கள். எனவே சஹாபாக்கள் இயன்றவரை பாவம் தவிர்த்திருக்கிறார்கள். அதையும் தாண்டி மனிதன் என்ற முறையில் தப்பித்தவறி செய்த பாவத்திற்காகவும் வருந்தி தவ்பா செய்துள்ளார்கள். பரிகாரம் கண்டுள்ளார்கள். எனவே பாவம் செய்யும் ஒவ்வொருவரும் பாவத்தை நஞ்சென வெறுக்கவேண்டும். செய்த பாவத்திற்கான மன்னிப்பை அல்லாஹ்விடம் கேட்கவேண்டும். அதன் மூலமே நாம் நஷ்டத்திலிருந்து விடுபடமுடியும் என்பதற்கு இந்த நபித் தோழரின் வாழ்வு மிகச்சிறந்த படிப்பினையாக நமக்கு உள்ளது.

அல்லாஹ், அந்த நபித் தோழரை பொருந்திக்கொள்வானாக! நம்மை பாவத்திலிருந்தும் காப்பானாக!!

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

உம்மஹாத்துல் முஃமினீன்களின் தியாகம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

[ஒருமுறை] அபூபக்கர் அஸ்ஸித்தீக்[ரலி] அவர்கள் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் வீட்டிற்கு வந்து உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அப்போது மக்களில் பலர் தங்களில் எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி கிடைக்காமல் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் வீட்டின் வாசலிலேயே அமர்ந்திருப்பதை கண்டார்கள். அனுமதி கிடைத்ததும் அபூபக்கர்[ரலி] உள்ளே சென்றார்கள். பிறகு உமர்[ரலி] அவர்கள் வந்து உள்ளே செல்ல அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கும் அனுமதி கிடைத்தது.[அவர்களும் உள்ளே நுழைந்தார்கள்] அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் தமது மனைவியர் சூழ, பேசமுடியாத அளவிற்கு துக்கம் மேலிட அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்.

அப்போது அபூபக்கர்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்களை சிரிக்கவைக்க எதையேனும் சொல்லப் போகிறேன் என்று[மனதிற்குள்] சொல்லிக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களே! எனது மனைவி [ஹபீபா]பின்த் காரிஜா என்னிடத்தில் குடும்பச்செலவுத் தொகையை [உயர்த்தித்தருமாறு] கேட்க, நான் அவரது கழுத்தில் அடித்துவிட்டேன் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்..? என்று கேட்டார்கள். இதைக்கேட்டு அல்லாஹ்வின்தூதர்[ஸல்] அவர்கள் சிரித்தார்கள். பிறகு, இதோ நீங்கள் கானுகிண்றீர்களே! இவர்களும் என்னிடம் செலவுத்தொகையை [உயர்த்தித்தரக்]கோரியே என்னைச்சுற்றி குழுமியுள்ளனர் என்று கூறினார்கள். உடனே அபூபக்கர்[ரலி] அவர்கள் [தம் புதல்வி] ஆயிஷா[ரலி] அவர்களை நோக்கி, அவர்களை கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள். உமர்[ரலி] அவர்கள், [தம் புதல்வி] ஹப்ஸா[ரலி] அவர்களை நோக்கி, கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் இல்லாததை நீங்கள் கேட்கிறீர்களா என்று அவ்விருவருமே கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மனைவியர், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் இல்லாததை ஒருபோதும் நாங்கள் கேட்கமாட்டோம் என்று கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் ஒரு மாதம் அல்லது இருபத்தி ஒன்பது நாட்கள் தம் மனைவியரை விட்டு விலகியிருந்தார்கள். அப்போது,

நபியே! உம்முடைய மனைவிகளிடம், ''நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகியமுறையில் விடுதலை செய்கிறேன். ஆனால் நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமைவீட்டையும் விரும்புவீர்களானால், அப்போது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் நிச்சயமாக மகத்தான நற்கூலியை சித்தம் செய்து வைத்துள்ளான் என்று கூறுவீராக. [33; 28,29 ]
என்ற வசனங்கள் அவர்களுக்கு அருளப்பட்டன.

இதையடுத்து ஆரம்பமாக ஆயிஷா[ரலி] அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் சென்று, ஆயிஷாவே! உன்னிடம் ஒரு செய்தியை சொல்லப்போகிறேன். அது தொடர்பாக உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காதவரை அவசரப்பட்டு[எந்த முடிவுக்கும் வந்துவிடக்]கூடாது என விரும்புகிறேன் என்று கூறினார்கள்.

அதற்கு ஆயிஷா[ரலி] அவர்கள், அது என்ன அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்றார்கள். அப்போது நபியவர்கள் மேற்கண்ட வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அப்போது ஆயிஷா[ரலி] அவர்கள், உங்கள் [உறவை துண்டிக்கும்] விஷயத்திலா என் பெற்றோரின் ஆலோசனையை நான் கேட்கவேண்டும்..? இல்லை! நான் அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும், மறுமையும் நான் தேர்ந்தெடுக்கிறேன் என்றார்கள்.
[நூல்;முஸ்லிம் 2946 ]

அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் முடிவைப் போன்றே நபி[ஸல்] அவர்களின் ஏனைய மனைவியரும் அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும், மறுமை வாழ்வையும் தேர்ந்தெடுத்தார்கள் என்று முஸ்லிமின் 2939 மற்றும் சில அறிவிப்புகளில் உள்ளது]

அன்பானவர்களே! இந்த பொன்மொழி நம்முடைய உள்ளத்தையும் கண்களையும் ஒருசேர நெகிழச்செய்வதாக உள்ளது. வெறும் பேரீச்சம் பழத்தையும், தண்ணீரையும் பெரும்பாலான நேரங்களில் உண்டு வாழ்ந்த அன்னையர்கள், சில நேரங்களில் வெறும் தண்ணீர் மட்டுமே தங்களின் வீடுகளில் இருந்ததாக கூறும் அன்னையர்களின் செய்திகளை படிக்கும்போதெல்லாம் எவ்வாறு இவர்களால் இப்படி ஒரு தியாக வாழ்க்கை வாழமுடிந்தது.?என்று எமக்குள் ஒரு கேள்வி அலை வந்துபோகும். இந்த பொன்மொழியை படித்தபின்புதான் ஆம்! அவர்கள் வறுமை வாழ்வையும் பொருந்திக்கொண்டு கருணை நபியோடு வாழ்ந்ததற்கு காரணம் மறுமைவாழ்வு மீது கொண்ட தேட்டமே என்பதை உணரமுடிந்தது. அன்று அன்னையர்கள் இம்மை சுக போகத்தை பெரிதாக கருதாமல், அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மகத்தானமறுமை வீட்டையும் தேர்ந்தெடுத்ததால்தான் உலகம் அழியும் காலம் வரை தோன்றக்கூடிய நம்பிக்கையாளர்களுக்கு தாய்மார்கள் எனும் மகத்தான சிறப்பை அல்லாஹ்விடம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் இன்றைய நவீன யுவதிகளில் பெருபாலோர் , தனது கணவன் பெரும்பான்மையான தேவைகளை நிறைவேற்றிஇருந்தாலும் , சில வேளைகளில் ஏதேனும் ஒரு விருப்பத்தை நிறைவேற்றமுடியாமல் போகும் பட்சத்தில், 'உனக்கு வாழ்க்கைப்பட்டு என்னத்தை கண்டேன்..? என்று கணவனை எடுத்தெறிந்து பேசுவதை நாம் நடைமுறையில் காண்கிறோம். இப்படிப்பட்டவர்களுக்கு அன்னையர்களின் தியாக வாழ்க்கை மிகப்பெரும் பாடமாகும்.
அதோடு, தமது மகளுக்கும்- மருமகனுக்கும் பிரச்சினை என்றால், பிரச்சினை குறித்து தீர ஆராயாமல் மகளுக்கே 'சப்போர்ட்' செய்யும் பெற்றோர்களைத்தான் நாம் பார்த்து வருகிறோம். ஆனால் இந்த பொன்மொழியில், அபூபக்கர்[ரலி] உமர்[ரலி] என்ற இரு மாமனார்கள், தம் மகள்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தும்கூட, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மனம் துன்பத்தில் ஆழ்த்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தம்முடைய மகள்களை அடிக்க முற்படுகிறார்கள் என்றால், இங்கே அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மகிழ்ச்சியே தமது மகிழ்ச்சியாக எண்ணி இந்த இரு நல்லறத்தோழர்களும் வாழ்ந்துள்ளனர் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ், அபூபக்கர்[ரலி], உமர்[ரலி] ஆகியோரையும், உம்மஹாத்துல் முஃமீன்களான நம்பிக்கையாளர்களின் தாய்மார்களையும் பொருந்திக்கொள்வானாக!

வெள்ளி, 30 ஜூலை, 2010

அல்லாஹ்வின் தூதரையே பெரும் சொத்தாக கருதிய அன்சாரிகள்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அல்லாஹ் தன் தூதர்[ஸல்] அவர்களுக்கு 'ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை [போரின் வெற்றிப் பரிசாக] அளித்தபோது, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் [புதிதாக இஸ்லாத்தை தழுவியிருந்த] சில குறைஷிகளுக்கு நூறு ஒட்ட்டகங்களை கொடுக்கலானார்கள். அப்போது அன்சாரிகளில் சிலர், அல்லாஹ் 'அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை மன்னிப்பானாக! [எதிரிகளான] குறைஷிகளின் ரத்தம் நம் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க [நமக்கு கொடுக்காமல்] இவர்களுக்கு கொடுக்கிறார்களேஎன்று கவலையுடன் சொன்னார்கள்.

அன்சாரிகளின் இந்த பேச்சு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கு எட்டியது. இதையொட்டி அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், அன்சாரிகளை ஒரு இடத்தில் ஒன்று கூட்டினார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், உங்களை குறித்து எனக்கு எட்டியுள்ள செய்தி என்ன? என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளிலுள்ள விவரமானவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் கருத்துடையவர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இளவயதுடையவர்கள் சிலர்தாம் அவ்வாறு பேசிக்கொண்டார்கள் என்று அன்சாரிகள் கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், ''இறைமறுப்பை விட்டு இப்போதுதான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு நான் கொடுக்கிறேன். [இதன் வாயிலாக இஸ்லாத்திற்கும்] அவர்களின் உள்ளங்களுடன் நான் இணக்கம் ஏற்படுத்துகிறேன். மக்கள் உலக செல்வங்களை எடுத்துச்செல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத்தூதரையே கொண்டு செல்வதை விரும்பமாட்டீர்களா..? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் பெற்று திரும்பும் செல்வத்தை விட நீங்கள் பெற்றுத் திரும்புவதே சிறந்ததாகும்என்று சொன்னார்கள். உடனே அன்சாரிகள், ஆம், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் [எங்களுடன் உங்களை கொண்டு செல்வதையே] விரும்புகிறோம் என்று சொன்னார்கள்.
ஹதீஸ் சுருக்கம் நூல்;முஸ்லிம்.

அன்பானவர்களே! மக்காவை விட்டு மதீனா நோக்கி கொள்கைக்காக நாட்டு துறந்து வந்த முஹாஜிர்களை தாயன்போடு அரவணைத்து தங்களின் சொந்த சகோதரர்களாகவே கருதி சொத்தில் கூட பங்கு கொடுக்கும் அளவுக்கு தயாள உள்ளம் கொண்டவர்கள் அன்சாரிகள் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அத்தகைய அன்சாரிகளில் சிலர், பொருள் பங்கீடு விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் மீது அதிருப்தி கொண்டது போன்ற தோற்றம் மேற்கண்ட ஹதீஸின் ஆரம்பத்தில் தோன்றலாம். ஆனால் அன்சாரிகள் குறுகிய மனம் கொண்டவர்கள் அல்ல. உயிரை பணயம் வைத்து போரிட்டு அதன் மூலம் கிடைத்த பொருட்களை பங்கிடுவதில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு வழங்கிவிட்டு நம்மை புறக்கணிக்கிறார்களே என்ற ஆதங்கம்தான் அன்சாரிகளின் அந்த வார்த்தை பிரயோகங்கள். பின்பு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் விளக்கிச்சொன்ன மாத்திரமே அதை அப்படியே ஏற்றுக்கொண்டதோடு, இறைத்தூதர்[ஸல்] அவர்களை நாங்கள் எங்கள் இல்லங்களுக்கு கொண்டு செல்லவே விரும்புகிறோம் என்று சொல்லி, உலகத்தின் பொருட்கள் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. எங்களின் மிகப்பெரிய சொத்தாக இறைத்தூதர்[ஸல்] அவர்களையே கருதுகிறோம் என்று சொல்லி தங்களின் தயாள குணத்தை மீண்டும் நிருப்பித்த அன்சாரிகள்ஒரு சரித்திர புருஷர்கள் என்றால் மிகையில்லை.

அல்லாஹ் அன்சாரிகளின் தியாகத்தை பொருந்திக்கொள்வானாக!

வெள்ளி, 23 ஜூலை, 2010

கண் மூடும் வேளையிலே கண்ணீர்; அம்ரு இப்னு அல்ஆஸ்[ரலி]!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அப்துர் ரஹ்மான் இப்னு ஷுமாசா அல் மஹ்ரி[ரஹ்] கூறியதாவது;

இறக்கும் தருவாயில் இருந்த அம்ரு இப்னு அல் ஆஸ்[ரலி] அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள். பின்பு சுவற்றின் பக்கம் தமது முகத்தை திருப்பிக் கொண்டார்கள். அப்போது அவர்களின் மகன், என் தந்தையே! உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் இன்னின்ன நற்செய்திகள கூறவில்லையா என [அறுதல் சொல்லும் வகையில்] கேட்டார். உடனே அம்ரு இப்னு அல்ஆஸ்[ரலி] அவர்கள் தமது முகத்தை [தம் புதல்வரை நோக்கி] திருப்பி [பின்வருமாறு] கூறினார்கள்;
அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத்[ஸல்] அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்ததாகும். நான்[என் வாழ்நாளில்] மூன்று கட்டங்களை கடந்து வந்துள்ளேன்.

[முதலாவதுகட்டத்தில்] அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மீது கடுமையான வெறுப்பு கொண்டவர் என்னைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது என்று நான் கருதினேன். என்னால் இயன்றால் அவர்களை கொன்றுவிடவேண்டும் என்பதே எனக்கு விருப்பமானதாக இருந்தது. அந்த கால கட்டத்தில் மட்டும் நான் மரணித்திருந்தால் நரகவாதிகளில் ஒருவனாக நான் ஆகியிருப்பேன்.

[இராண்டாவது கால கட்டத்தில்] அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை புகுத்தினான். அப்போது நான் நபியவர்களிடம் சென்று உங்கள் வல்லக்கரத்தை நீட்டுங்கள் நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் [பைஅத்] அளிக்கிறேன் என்றேன். நபி[ஸல்] அவர்கள் தமது வலது கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கரத்தை இழுத்துக் கொண்டேன். நபி[ஸல்] அவர்கள், அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று என்றார்கள். நான் சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன் என்று கூறினேன். நபி[ஸல்] அவர்கள் என்ன நிபந்தனை விதிக்கப் போகிறீர் என்று கேட்டார்கள். என் [முந்தைய] பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்று கூறினேன். அப்போது நபி[ஸல்] அவர்கள் உங்கள் முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும். ஹஜ்ஜும் முந்தையா பாவங்களை அழித்துவிடும் என்பது உமக்கு தெரியாதா என்றார்கள். [பின்பு நான் இஸ்லாத்தை தழுவினேன்] அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை விட மிகவும் பிரியமானவர் எவரும் எனக்கில்லை. எனது பார்வைக்கு அவர்களைவிட கண்ணியமானவர்கள் எவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள் மீது நான் கொண்ட மரியாதையினால் என் கண்கள் நிரம்ப, அவர்களை பார்க்கக் கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறுமாறு என்னிடம் கேட்கப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது. ஏனெனில் அவர்கள் மீது நான் கொண்ட மரியாதையினால், என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவில்லை. அந்த நிலையில் நான் மரணித்திருந்தால் நான் சொர்க்கவாசிகளில் ஒருவானாக ஆகியிருப்பேன் என்றே கருதுகிறேன்.

பிறகு [மூன்றவாது கட்டத்தில்] பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம். அவற்றில் எனது நிலை என்ன என்று எனக்குத்தெரியாது.
[ஹதீஸ் சுருக்கம் நூல்;முஸ்லிம்]

அன்பானவர்களே! அம்ரு இப்னுஆஸ்[ரலி] அவர்களை நாமெல்லாம் அறிந்து வைத்துள்ளோம். இந்த பொன்மொழியில் தமது வாழ்வின் மூன்று கட்டங்களை குறிப்பிடுகிறார்கள் அந்த மேதை. முதல் கட்டம் இஸ்லாத்திற்கு எதிரான நிலை அதாவது நரகத்தின் விளிம்பில்.
இரண்டாவது இஸ்லாத்திற்குள் அதுவும் இறைத்தூதரை உயிருக்கு உயிராக நேசிக்கும் காலகட்டம் அதாவது சொர்க்கத்தின் வாயிலில்.
மூன்றாவது பல்வேறு பொறுப்புகள சுமந்த காலகட்டம். இந்த மூன்று காலகட்டங்கலில் எதைக் குறித்து அம்ரு இப்னு ஆஸ் [ரலி] அவர்கள் கைசேதப் படுகிறார்கள் என்றால்,
மூன்றாவது காலகட்டம் அதாவது பொறுப்புகளை வகித்த காலகட்டம் குறித்துதான். ஏனென்றால் இஸ்லாத்திற்கு முந்தைய காலகட்டம் குறித்து அவர்கள் கவலைப் படவேண்டியதில்லை. ஏனெனில், அதில் செய்த பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும் என்று இறைத்தூதர்[ஸல்] அவர்கள் உத்திரவாதம் அளித்து விட்டார்கள். ஆனால் பொறுப்புகள் வகித்த காலத்தில் நாம் தவறு இழைத்திருந்து அதனால் அல்லாஹ்வால் குற்றம் பிடிக்கப் படுவோமோ என்று கண்ணீர் சிந்தி கவலை கொள்கிறார்கள் எனில்,
பதவி வரும்போது பணிவும்-துணிவும் வந்தால் போதாது; அங்கே பயமும் அதாவது இறைவனின் பயமும் வரவேண்டும். ஏனெனில் பொறுப்பில் உள்ளவர்கள் தாம் செய்வதை குறித்து திருப்தி அடையலாம். ஆனால் அந்த செயல்கள் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்படுமா என்ற அச்சம் ஒவ்வொரு பொறுப்பாளருக்கும் இருக்கவேண்டும். அத்தகைய சிறந்த படிப்பினைக்கு அம்ரு இப்னு ஆஸ்[ரலி] அவர்கள் முன்னுதாரமாக திகழ்கிறார்கள்.
அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக!

வெள்ளி, 16 ஜூலை, 2010

இறையச்சத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு; ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி]!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

நம்பிக்கையாளர்களே! நபியின் குரலுக்கு மேலாக உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்; உங்களுக்குள் மற்றொருவர் இரைந்து பேசுவதுபோல் நபியிடம் இரைந்து பேசாதீர்கள்; [இவற்றால்] நீங்கள் அறிந்து கொள்ளமுடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்துபோகும்.[49 ;2 ]

என்ற வசனம் அருளப்பட்டவுடன் ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி] அவர்கள் தமது இல்லத்திலேயே அமர்ந்துவிட்டார்கள். 'நான் நரகவாதிகளில் ஒருவன்' என்று கூறிக்கொண்டு நபி[ஸல்] அவர்களிடம் வராமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தார்கள். எனவே நபி[ஸல்]அவர்கள் [ஸாபித்] குறித்து ஸஅத்இப்னு முஆத் [ரலி] அவர்களிடம் , அபூ அம்ர்! ஸாபித்க்கு என்ன ஆயிற்று..? அவருக்கு உடல் நலமில்லையா.? என்று கேட்டார்கள். அதற்கு ஸஅத் [ரலி] அவர்கள், அவர்[ஸாபித்] எனது அண்டை வீட்டுக்காரர்தான். அவருக்கு எந்த நோயுமிருப்பதாக தெரியவில்லை என்றார்கள். பிறகு ஸஅத்[ரலி] அவர்கள் ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி] அவர்களிடம் நபி[ஸல்] அவர்கள் கேட்டதை பற்றி தெரிவித்தார்கள்.

அப்போது ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி] அவர்கள், [49 ;2 ] வசனம் அல்லாஹ்வால் அருளப்பட்டுள்ளது. உங்களில் இறைத்தூதர்[ஸல்] அவர்கள் முன் நான் குரலை உயர்த்தி பேசுபவன் என்பதை நீங்கள் அறிந்தே வைத்துள்ளீர்கள். ஆகவே நான் நரகவாசிகளில் ஒருவன்தான் என்று கூறினார்கள் . இதை ஸஅத்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி[ஸல்] அவர்கள், இல்லை.அவர்[ஸாபித்] சொர்க்கவாசிகளில் ஒருவர் ஆவார் என்று கூறினார்கள்.

[நூல்; முஸ்லிம்]

அன்பானவர்களே! இந்த பொன்மொழியில், நபியவர்களின் நெருங்கிய தோழர்களில் ஒருவரான ஸாபித்இப்னு ஹைஸ்[ரலி] அவர்கள், அல்லாஹ் மேற்கண்ட வசனத்தை இறக்கிய மாத்திரமே நபி[ஸல்] அவர்களுக்கு முன்னால் குரலை உயர்த்தி பேசியதால், நம்முடைய அமல்கள் அழிந்துவிட்டது; நாம் நரகவாதிதான் என்று கவலைகொண்டவர்களாக நபியவர்களை சந்திக்க வெட்கப்பட்டு ஒதுங்கியதை பார்க்கிறோம். அந்த அளவுக்கு தன்னுடைய தவறு குறித்து, அதுவும் அல்லாஹ் மேற்கண்ட வசனத்தை இறக்கி கட்டளை பிறப்பிப்பதற்கு முன்னால் செய்த தவறு குறித்து கைசேதப்படுகிறார்கள் கவலை கொள்கிறார்கள் என்றால் அதுதான் இறையச்சம்! ஆனால் இன்று நாமோ அல்லாஹ்வின் கட்டளைகள் முழுமையாக அல்-குர்ஆன் வடிவில் இருக்கிறது. அதை பார்த்த பின்னும், படித்த பின்னும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக தவறுகளை செய்துவிட்டு, அந்த தவறு குறித்து எந்தவித சலனமுமின்றி, 'அல்லாஹ் மன்னிக்கக் கூடியவன்' என்று சாதாரணமாக சென்று கொண்டிருக்கிறோம். அல்லாஹ் மன்னிக்க கூடியவன் என்று ஸாபித் இப்னு ஹைஸ் அவர்களுக்கும் தெரியும். அதையும் தாண்டி உள்ளத்தில் இறைவனின் இறையச்சம் . அதனால்தான், 'எங்களிடையே நடமாடும் சொர்க்கவாசியாகவே நாங்கள் ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி] அவர்களை கருதி வந்தோம்' என்று அனஸ்[ரலி] அவர்கள் கூறும் அளவுக்கு சிறப்பு பெற்றார்கள். ஆனால் நாமோ பாவங்களை அற்பமாக கருதுகிறோம், அதற்கு கிடைக்கும் தண்டனைகள் குறித்து பாராமுகமாக இருக்கிறோம். இந்நிலை தொடர்ந்தால் மறுமையில் கைசேதம் அடையவேண்டிய நிலை வரும்.

எனவே இயன்றவரை பாவம் தவிர்ப்போம்; பாவமன்னிப்பு தேடுவோம்; படைத்தவனின் அருள் பெறுவோம்.

புதன், 14 ஜூலை, 2010

அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்களின் அருமை மனைவியரும், முஃமீன்களின் தாயுமான ஆயிஷா[ரலி] அவர்களின் சகோதரி அஸ்மா பின்த் அபூபக்கர்[ரலி] அவர்களின் மகனாவார். நபி[ஸல்] அவர்களின் உற்ற தோழர் அபூபக்கர்[ரலி] அவர்களின் பேரனாவார். நபி[ஸல்] அவர்களின் தோழரும் முஹாஜிரும் சுவனத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவருமான ஸுபைர்[ரலி] அவர்களின் மகனாவார். மதீனா ஹிஜ்ரத்திற்கு பின் பிறந்த முதல் குழந்தையாவார். இத்தகைய சிறப்புமிகு அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்கள்,
நபி[ஸல்] அவர்களின் மரணத்திற்கு பின்னால் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளில் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்பவரது படையால் ஷஹீதாக்கப்பட்டு, பேரீச்சம் மரத்தில் சிலுவையில் ஏற்றி தலைகீழாக தொங்கவிடப்பட்ட நிலையில்,

இப்னு உமர்[ரலி] அவர்கள், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்களின் ஜனாஸா அருகே நின்று, அபூ குபைபே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் என்று கூறியதோடு, அப்துல்லாஹ் இப்னு ஸுபைரின் சில நற்பண்புகளை அங்கே சொல்கிறார்கள். இந்த செய்தி ஹஜ்ஜாஜுக்கு எட்டியபோது, அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்களின் ஜனசாவை யூதர்க்களின் அடக்கஸ்தலம் மீது போட்டுவிடுமாறு உத்தரவிட்டார். அதோடு, அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்களின் தாயார் அஸ்மா பின்த் அபூபக்கர்[ரலி] அவர்களை அழைத்துவர ஆளனுப்பினார். அஸ்மா[ரலி]அவர்கள் வர மறுத்துவிட்டார்கள். ஹஜ்ஜாஜ் மீண்டும் ஆளனுப்பி, அஸ்மாவே! நீயாக வருகிறாயா..? அல்லது உமது சடையை பிடித்து இழுத்துவர ஆள் அனுப்பட்டுமா என கேட்க, அப்போதும் அஸ்மா[ரலி]அவர்கள் வர மறுத்ததோடு மட்டுமன்றி, அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது சடைப் பிடித்து இழுத்துக்கொண்டு வருபவரை நீர் அனுப்பாதவரையில் நான் உம்மிடம் வரப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள்.

உடனே ஹஜ்ஜாஜ் தமது செருப்பை அணிந்துகொண்டு அஸ்மா[ரலி] அவர்களை நோக்கி விரைந்து வந்து அஸ்மா[ரலி] அவர்களிடம், அல்லாஹ்வின் விரோதியை [உமது மகனை] என்ன செய்தேன் பார்த்தீரா என்று கேட்டார். அப்போது அஸ்மா[ரலி]அவர்கள்,

நீ என் மகனின் இம்மையை சீரழித்துவிட்டாய்; என் மகனோ உனது மறுமையை சீரழித்துவிட்டார் என்றே நான் கருதுகிறேன். நீ என் மகனை 'இரு கச்சுடையாளின் புதல்வரே! என்று ஏளனமாக அழைப்பாய் என்று நான் கேள்விப்பட்டேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இரு கச்சுடையாள் நான்தான். [மதீனா ஹிஜ்ரத் சென்ற] அல்லாஹ்வின் தூதருக்கும் , எனது தந்தை அபூபக்கருக்கும் உரிய உணவை எனது ஒரு கச்சின் மூலம் கட்டினேன். மற்றொன்று ஒரு பெண்ணிடம் அவசியம் இருக்கவேண்டிய கச்சாகும்.

அறிந்துகொள்! அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் எங்களிடம், 'சகீஃப் குலத்தாரில் ஒரு மகாப் பொய்யனும், ஒரு நாசக்காரனும் இருப்பார்கள்' என்று கூறினார்கள். மகாப் பொய்யனை [முக்தார் இப்னு அபீஉபைத்] நாங்கள் பாத்துவிட்டோம். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறிய 'நாசக்காரன்' நீதான் என்றே நான் கருதுகிறேன் என்று கூறியவுடன், அஸ்மா[ரலி] அவர்களுக்கு பதிலளிக்கமுடியாமல் ஹஜ்ஜாஜ் அங்கிருந்து வெளியேறி சென்றுவிட்டார்.

[ஹதீஸ் சுருக்கம்நூல்; முஸ்லிம்.]
அன்பானவர்களே! இந்த செய்தியை நாம் பொறுமையுடன் படித்துப் பார்ப்போமானால், அஸ்மா[ரலி] அவர்களின் அளவுகடந்த வீரமும், பொறுமையும் வெளிப்படுவதை நாம் அறியமுடியும்.
  • தனது அருமை மகன் அநியாயமாக கொல்லப்பட்டு, சிலுவையில் தலைகீழாக தொங்க விடப்பட்டு , பின்பு அநியாயக்கார யூதர்களின் அடக்கஸ்தலத்தில் போடப்பட்ட செய்தியறிந்த பின்பும், கத்தாமல் கதறாமல் தன் மகனை காண ஓடாமல், தன் மகன் அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாகியுள்ளான் என பொறுமை காத்த அந்த அஸ்மா[ரலி] அவர்களின் பாங்கு.
  • ஹஜ்ஜாஜ், அஸ்மா[ரலி] அவர்களை அழைத்துவர ஆள் அனுப்பியபோது, வீரமிக்க நம் மகனையே கொன்ற இந்த அநியாயக்காரன் நம்மை விட்டு வைப்பானா.? என்று பதறி ஹஜ்ஜாஜை சந்திக்க ஓடாமல், வரமறுத்த துணிவு! 'என் சடையை பிடித்து இழுத்துவரும் உன் ஆளை அனுப்பிப் பார்' என்று ஆர்ப்பரித்த வீரம்!! சுப்ஹானல்லாஹ்!!. தொடைநடுங்கி முஸ்லிம்களுக்கோர் பாடம்!!!
  • எங்கள் தலைவர் நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்த 'அநியாயக்காரன்' நீதானோ என்று ஆர்ப்பரித்த ஆளுமை அஸ்மா[ரலி] ஒரு சகாப்தம்.

எங்கள் இறைவா! அஸ்மா[ரலி] அவர்களின் வீரத்தை, உள்ள உறுதியை, ஈமானிய வலுவை எங்களுக்கும் தந்து நீ பொருந்திக் கொண்ட முஸ்லிம்களாக மரணிக்க செய்வாயாக!

ஞாயிறு, 11 ஜூலை, 2010

அமல் செய்வதில்தான் எத்துனை ஆர்வம் இவருக்கு..?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
நபி [ஸல்] அவர்களின் இந்த உம்மத்தில் தலைசிறந்தவர் அபூபக்கர் சித்தீக்[ரலி] அவர்கள் என்பதை நாமெல்லாம் அறிந்துவைத்துள்ளோம். இத்தகைய சிறப்பு அவர்களுக்கு இருந்தும், சொர்க்கத்திற்கு உரியவர் என்று இறைத்தூதரால் பிரகடனப் படுத்தப்பட்ட பின்பும் அபூபக்கர்[ரலி] அவர்களின் அமல்கள் குறைந்ததா என்றால் இல்லை. நல்லமல்கள் என்று எவையெல்லாம் உள்ளதோ அவைகளை அன்றாடம் செய்யக்கூடிய அற்புத மனிதராக அபூபக்கர்[ரலி] அவர்கள் திகழ்ந்துள்ளதற்கு சான்றாகவும், நமக்கும் அத்தகைய ஆர்வம் வரவேண்டும் என்பதற்காகவும் இந்த பொன்மொழி இங்கு பதியப்படுகிறது;

அபூஹுரைரா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;

[ஒருநாள்] இறைத்தூதர்[ஸல்] அவர்கள் [எங்களிடம்] இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார் என்று கேட்டார்கள்.

அப்போது அபூபக்கர்[ரலி] அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றைய தினம் உங்களில், ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்றவர் யார் என்று கேட்டார்கள்.

அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றையதினம் உங்களில் ஒரு ஏழைக்கு உணவளித்தவர் யார் என்று கேட்டார்கள்.

அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றையதினம் ஒரு உங்களில் ஒரு ஒரு நோயாளியின்நலம் விசாரித்தவர் யார் என்று கேட்டார்கள்.

அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.

அப்போது இறைத்தூதர் அவர்கள், இவை அனைத்தும் ஒரு மனிதரிடத்தில் ஒன்று சேர்ந்தால் அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை என்று கூறினார்கள். [நூல்;முஸ்லிம்].

சனி, 10 ஜூலை, 2010

அபூஹுரைரா[ரலி] என்றாலே நமக்கு பாசம் பொங்குவது எதனால்..?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
நபித்தோழர்களில் அபூஹுரைரா[ரலி] அவர்களை அறியாத முஸ்லிம்கள் இருப்பது அரிது. அதுமட்டுமன்றி, அபூஹுரைரா[ரலி] அவர்கள் பெயரை கேட்டாலோ, அல்லது அவர்கள் சம்மந்தப்பட்ட செய்தி படித்தாலோ அவர்கள் மீது நமக்கு இனம் புரியாத பாசம் வெளிப்படுவதை நாம் உணரமுடியும். அதற்கு காரணம் அவர்களின் தியாக வாழ்க்கை என்பது ஒருபுறமிருந்தாலும், மற்றொரு புறம் இவ்வாறு அவர்கள் மீது நமக்கு பாசம் ஏற்படுவதற்கு காரணம் இறைத்தூதர்[ஸல்] அவர்களின் பிரார்த்தனை என்பதுதான் பிரதானமான உண்மையாகும். அதுபற்றிய பொன்மொழி இதோ;

அபூஹுரைரா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;
எனது தாயார் இணைவைப்பு கொள்கையில் இருந்தபோது இஸ்லாத்திற்கு வருமாறு நான் அழைப்பு விடுத்து வந்தேன். அவர் மறுத்து வந்தார். இன்றும் அதுபோல் அழைப்பு விடுத்தபோது அவர் இறைத்தூதர்[ஸல்]அவர்கள் குறித்து நான் விரும்பாத வார்த்தைகளை என் காது பட கூறினார். நான் அழுதுகொண்டே அல்லாஹ்வின் தூதரிடம் சென்று நடந்தவற்றை கூறி, இந்த அபூஹுரைரவின் அன்னைக்கு நேர்வழி கிடைத்திட பிரார்த்தியுங்கள் என்றேன்.
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், இறைவா! அபூஹுரைராவின் அன்னைக்கு நல்வழி காட்டுவாயாக என்று பிரார்த்தித்தார்கள். இதைக்கேட்டு நான் மகிழ்ந்தவனாக புறப்பட்டு எனது வீட்டை அடைந்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது . எனது காலடி சத்தத்தை அறிந்துகொண்ட என் தாயார், அபூஹுரைரா! அங்கே இரு என்றார்கள்.
அப்போது தண்ணீர் சிந்தும் சத்தம் கேட்கவே என் தாயார் குளித்துவிட்டு வந்து கதவை திறந்தார். பின்பு அபூஹுரைராவே! அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாரும் இல்லை. முஹம்மது[ஸல்] அல்லாஹ்வின் தூதர் என்று உறுதிகூறுகிறேன் என்றார்கள்.
உடனே மகிழ்ச்சியில் அழுதவனாக இறைத்தூதரை சந்தித்து, யாரசூலுல்லாஹ்! அல்லாஹ் உங்களின் பிரார்த்தனையை அங்கீகரித்துவிட்டான், அபூஹுரைராவின் அன்னைக்கு நேர்வழி காட்டிவிட்டான் என்றேன். அதைக்கேட்ட நபி[ஸல்]அவர்கள் இறைவனை போற்றி புகழ்ந்தார்கள். அப்போது நான், இறைத்தூதர் அவர்களே! இறை நம்பிக்கையுள்ள அடியார்களுக்கு என்மீதும், என்தாயார்மீதும் நேசம் ஏற்படவும், அவ்வாறே அவர்கள் மீது எனக்கும் என் தாயாருக்கும் நேசம் ஏற்படவும் பிரார்த்தியுங்கள் என்றேன். நபியவர்கள், இறைவா! உன்னுடைய அடியார் அபூஹுரைரா மீதும், அவருடைய தாயார் மீதும் இறை நம்பிக்கையாளர்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக! இறை நம்பிக்கையாளர்கள் மீது இவர்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக என்று பிரார்த்தித்தார்கள்.
எனவேதான், என்னை பார்க்காவிட்டாலும் என்னைப்பற்றி கேள்விப்படும் எந்த ஒரு இறைநம்பிக்கையாளரும் என்னை நேசிக்காமல் இருப்பதில்லை.
நூல்;முஸ்லிம்]

அன்பானவர்களே! அபூஹுரைரா[ரலி] அவர்கள் மீது நமக்கு ஏற்படும் இனம் புரியா நேசம் இறைத்தூதர்[ஸல்] அவர்களின் பிரார்த்தனையால் இறைவன் உருவாக்கியதாகும் என்பதை பொன்மொழி வாயிலாக அறியமுடிகிறது. அதோடு இந்த பொன்மொழியில் மற்றொரு படிப்பினை என்னவெனில், இணைவைப்பு கொள்கையில் இருக்கும் தன்னுடைய தாய் நேர்வழி பெறவேண்டும் என்ற அபூஹுரைரா[ரலி] அவர்களின் ஆவல், நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். ஏனெனில், நம்முடைய பெற்றோர்களோ, உறவினர்களோ, நண்பர்களோ தர்காக்களில் விழுந்து கிடப்பவர்களாக இருக்கலாம். அப்படிப் பட்டவர்களுக்கு தினமும் நாம் சத்தியத்தின் பால் அழைப்பு விடுப்பதோடு, அவர்கள் நேர்வழி பெறவேண்டும் என்ற உண்மையான நோக்கோடு இறைவனிடமும் இறைஞ்சினால், இறைவன் நாடினால் அவர்கள் நேர்வழி பெறக்கூடும். அதைவிடுத்து அறியாமையில் தர்காக்களுக்கு செல்பவர்களுக்கு 'முஷ்ரிக்கீன்கள்' என ஃபத்வா வழங்குவதால் எந்த பயனும் இல்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அபூஹுரைரா[ரலி] அவர்களைப்போல் உண்மையான நோக்கோடு அழைப்புப் பணியாற்றுபவர்களாக நம்மை ஆக்கி அருள்வானாக!

இறைத்தூதரின் ரகசியத்தை இறுதிவரை காத்தவர்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அனஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;

நான்[ரசூல்[ஸல்]அவர்களிடம் சேவகனாக இருந்தபோது] என்னிடம் வந்தார்கள். நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். நபி[ஸல்] அவர்கள் எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு ஒரு அலுவல் நிமித்தமாக என்னை ஒரு இடத்திற்கு அனுப்பினார்கள். நான் என் தாயாரிடம் தாமதமாகவே வந்தேன். அப்போது என்தாயார், உன் தாமதத்திற்கு காரணம் என்ன..? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் ஒரு அலுவலுக்காக என்னை அனுப்பி வைத்திருந்தார்கள் என்று சொன்னேன். அப்போது என் தாயார் என்ன அலுவல்? என்று கேட்டார்கள். நான் அது 'ரகசியம்' என்று சொன்னேன். அப்போது என்தாயார், அல்லாஹ்வின் தூதரின் ரகசியத்தை நீ யாரிடம் சொல்லாதே என்றார்கள்.[ நூல்;முஸ்லிம் 4891 ].

மற்றொரு அறிவிப்பில்;
நபி[ஸல்] அவர்கள் என்னிடம் ஒரு ரகசியம் சொன்னார்கள். அவர்களின் இறப்பிற்கு பிறகு கூட அதை நான் ஒருவரிடமும் தெரிக்கவில்லை. என் தாயார் உம்மு சுலைம்[ரலி] அவர்கள் அது குறித்து கேட்டபோது நான் அவர்களுக்கும் தெரிவிக்கவில்லை. [நூல்;முஸ்லிம் 4892 ]

இந்த பொன்மொழியில் நபி[ஸல்]அவர்களிடம் சேவகராக இருந்த அனஸ்[ரலி] அவர்களின் பண்பு நமக்கு மிகப்பெரிய படிப்பினையாக உள்ளது. சிறுவர்களுடன் விளையாடும் அளவுக்கு சிறிய வயதுடைய அனஸ்[ரலி]அவர்கள், இறைத்தூதரின் ரகசியம் விசயத்தில் எந்த அளவுக்கு கவனமாக இருந்துள்ளார்கள் எனில், அவர்களது தாயார் கேட்டபோதும் கூட சொல்லவில்லை. அதுமட்டுமன்றி, அந்த ரகசியத்தை இறைத்தூதர்[ஸல்] அவர்களின் மரணத்திற்கு பின்னால் கூட எவரிடமும் சொன்னதில்லை என்றால், ரகசியமும் அமானிதமே என்பதை அனஸ்[ரலி] அவர்கள்வாழ்வு எமக்கு உணர்த்துகிறது. ஆனால் இன்று பெரும்பாலான பிரச்சினைக்கு ரகசியங்கள் வெளிப்படுவதே காரணமாக அமைகிறது. இயக்கம், அமைப்பு, தொழில், பாதுகாப்பு போன்றவை மட்டுமன்றி, கணவன் மனைவிக்குள் நடக்கும் இல்லறம் வரை பேணப்படவேண்டிய ரகசியங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு அதனால் பல்வேறுவகையான பின்னடைவை சந்திக்கிறோம். எனவே அனஸ்[ரலி] அவர்களின் இந்த உயரிய பண்பை நம்முடைய வாழ்விலும் கடைபிடிக்க முன்வருவோமாக!

வெள்ளி, 11 டிசம்பர், 2009

பாங்கோசையை முன்மொழிந்தவர்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

உமர்[ரலி] அவர்கள், 'உமரின் நாவின் அல்லாஹ் பேசுகிறான்' என்று நபி[ஸல்] அவர்களால் சிறப்பித்து சொல்லப்பட்ட ஸஹாபி என்பதை நாம் அறிவோம். உமர்[ரலி] அவர்கள் கூற்றிற்கேற்ப, அல்லாஹ் சில வசனங்களை இறக்கியதையும் நாமெல்லாம் அறிந்துள்ளோம். அத்தகைய சிறப்பிற்குரிய உமர்[ரலி] அவர்கள் இன்னொரு நல் அமலுக்கு ஒரு ஆலோசனை கூற அது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, அன்றும்-இன்றும்- நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் இவ்வுலகம் உள்ளளவும் அது நடைமுறையில் இருக்கும். ஆம்! அதுதான் அல்லாஹ்வை வணங்க ஐவேளை தொழுகையின் போது அழைக்கப்படும் 'பாங்கு' எனும் அழைப்போசையாகும்.
இதுபற்றிய பொன்மொழி இதோ;

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர்(ரலி) 'தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?' என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 604

இந்த பொன்மொழி உமர்[ரலி] அவர்களின் பெரும்பாலான சிந்தனைகள், செயல்கள் அல்லாஹ்வாலும், அவன் தூதராலும் பொருந்திக்கொள்ளும் வகையிலேயே அமைந்துள்ளதற்கு மற்றொரு சான்றாகும்.
அல்லாஹ் உமர்[ரலி] அவர்களுக்கு கிருபை செய்வானாக!

வியாழன், 10 டிசம்பர், 2009

அபூஹுரைரா[ரலி] அவர்களின் வியக்கத்தக்க நினைவாற்றல்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆன் நபி[ஸல்] அவர்கள் மீது அருளப்படும் காலகட்டத்தில், சில நபித்தோழர்களை எழுத்தர்களாக நியமித்து நபியவர்கள் எழுதிவைத்திட பனித்த செய்தியை நாம் அறிவோம். ஆனால் நபி[ஸல்] அவர்களின் திருவாயால் மொழிந்த பொன்மொழிகள் அவ்வாறு எழுதப்படவேண்டும் என்று நபியவர்கள் கட்டளையிடவில்லை. இருப்பினும் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களைப் போன்ற சிலர் ஹதீஸ்களை எழுதிவைத்திருந்தனர். ஆனாலும் இவர்கள் அறிவித்த ஹதீஸ்களை விட, ஹதீஸ்களை எழுதிவைக்காத அபூஹுரைரா[ரலி] அவர்கள் தான் அதிக அளவில் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் ஹதீஸ்களை அறிவித்த சஹாபிகள் பட்டியலில் அபூஹுரைரா[ரலி] அவர்கள் முதலாவதாக திகழ்கிறார்கள். நம்மை எடுத்துக்கொண்டால் இன்று சாப்பிட்டதை ஒருவாரம் கழித்துக் கேட்டால் நினைவிருக்காது. பரீட்சைக்கு விழுந்து விழுந்து மனப்பாடம் செய்யும் மாணவன் கூட காலையில் மனனம் செய்ததை பரீட்சை ஹால் உள்ளே சென்றதும் பாதியை மறந்து விடுகிறான். திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் கூட தொழுகை நடத்தும் போது ஒரு சில வசனங்கள் மறந்து மற்றவர்களால் நினைவூட்டப்படுகிறது. ஆனால் அபூஹுரைரா[ரலி] அவர்கள் ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் எந்த வார்த்தையை பயன்படுத்தி சொன்னார்களோ அதே வார்த்தையை அட்சரம் பிசகாமல், மறக்காமல் எப்படி மனனம் செய்யமுடிந்தது..? பல ஆண்டுகளுக்கும் பின்னால் யார் கேட்டாலும் எப்படி இறைத்தூதர் வார்த்தையை அப்படியே சொல்ல முடிந்தது என்ற நமது வியப்பிற்கு விடையாக அபூஹுரைரா[ரலி] அவர்கள் அதிக ஹதீஸ்களை அறிவித்ததற்கும், மறக்காமல் இருந்ததற்கும் அவர்கள் கூறும் விளக்கம் பாரீர்;

'மக்காவிலிருந்து ஹிஜ்ரத்துச் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரம் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனாவிலிருந்த அன்ஸாரித் தோழர்களோ தங்கள் (விவசாய) செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அபூ ஹுரைராவோ முழுக்க முழுக்க (வேறு வேலைகளில் ஈடுபடாமல்) பட்டினியாக நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்தேன். மற்றவர்கள் வருகை தராத இடங்களுக்கெல்லாம் நான் செல்வேன். அவர்கள் மனப்பாடம் செய்யாதவற்றையெல்லாம் நான் மனப்பாடம் செய்து கொண்டிருந்தேன்.என்று கூறினார்கள்" அஃரஜ் என்பவர் அறிவித்தார்.
ஹதீஸ் சுருக்கம் புஹாரி;எண் 118

இந்த பொன்மொழி ஹதீஸ்களை திரட்டுவதற்காக அபூஹுரைரா[ரலி] அவர்கள் செய்த தியாகத்தை விளக்குகிறது. அடுத்து திரட்டிய செய்தி மறக்காமல் இருக்க அவர்கள் செய்தது என்ன..?

'இறைத்தூதர் அவர்களே! நான் தங்களிடமிருந்து ஏராளமான பொன் மொழிகளைக் கேட்கிறேன். (ஆயினும்) அவற்றை மறந்து விடுகிறேன் என நான் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு 'உம்முடைய மேலங்கியை விரியும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நானும் அதனை விரித்தேன். தம் இரண்டு கைகளாலும் இரண்டு கை நிறையளவு அள்ளி (எடுப்பது போன்று பாவனை செய்து)விட்டுப் பின்னர், 'அதனை (நெஞ்சோடு) நீர் அணைத்துக் கொள்வீராக!" என்றார்கள். நானும் உடனே அதனை என் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் எதனையும் மறந்ததே இல்லை" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஆதாரம் புஹாரி எண் 119

அபூஹுரைரா[ரலி] அவர்கள் ஹதீஸ்களை மறக்காமல் இருக்க நபியவர்கள் மூலம் பாதுகாப்பு பெற்றிருக்கிறார்கள். இந்த அளவுக்கு தியாகம் செய்து, சிரத்தைஎடுத்து அபூஹுரைரா[ரலி] அவர்கள் போன்ற பல நல்லறத் தோழர்கள் மூலமாக கிடைக்கப்பெற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை கூட 'நொண்டிச்சாக்கு' சொல்லி குப்பையில் தள்ளும் சில அதிமேதாவிகள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதை என்னும் போது உள்ளம் வேதனையால் விம்முகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அபூஹுரைரா[ரலி] அவர்களின் தியாகத்தை பொருந்திக் கொள்வதோடு, இறைத்தூதரின் பொன்மொழிகளை நாமும் மனனம் செய்து மற்றவர்களுக்கு எடுத்தியம்பும் நன்மக்களாக ஆக்கியருள்வானாக!

புதன், 9 டிசம்பர், 2009

'அல்லாஹ் தன் தூதரின் நாவினால் ஷைத்தானிடமிருந்து காப்பாற்றப் பட்டவர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
உமர்[ரலி] அவர்கள் ஒரு பாதையில் சென்றால் ஷைத்தான் வேறு பாதையில் செல்வான் என்ற செய்தி நாமெல்லாம் அறிந்த ஒன்றுதான். மனிதனின் ரத்த நாளங்களில் எல்லாம் வியாபித்து ஆட்டிப்படைக்கும் ஷைத்தானின் அட்டூழியத்திலிருந்து பாதுகாப்பு பெற்ற மற்றொரு ஸஹாபி அம்மார் இப்னு யாசிர்[ரலி] அவர்களாவார்.

அல்கமா இப்னு கைஸ் அந் நகஈ(ரஹ்) அறிவித்தார்கள்;
நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். பள்ளிவாசலில் நுழைந்(து இரண்டு ரக்அத்கள் தொழு)ததும் 'இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரை ஏற்படுத்துவாயாக" என்று பிராத்தித்தேன். பிறகு அபுதர்தா(ரலி) அவர்களிடம் (சென்று) அமர்ந்தேன். அபுத்தர்தா(ரலி) 'நீங்கள் எந்த ஊர்க்காரர் ?' என்று கேட்டார்கள். அதற்கு நான் 'கூஃபா வாசி' என்றேன். அபுத்தர்தா(ரலி) '(நபி - ஸல் - அவர்கள் அறிவித்த) வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் உங்களிடையே இல்லையா?' என்று ஹுதைஃபா(ரலி) அவர்களைத் கருத்தில் கொண்டு கேட்டார்கள். நான், 'ஆம் (இருக்கிறார்)" என்று பதிலளித்தேன். அவர்கள், 'தன் நபியின் வாயால் எவரை ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இல்லையா?' என்று கேட்டார்... அம்மார்(ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள். நான் 'ஆம் (இருக்கிறார்)" என்று பதிலளித்தேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்களின் (பல்துலக்கும்) மிஸ்வாக் குச்சியையும், தலையணையையும் சுமந்து சென்றவர்... அல்லது அவர்களின் அந்தரங்க உதவியாளர்.. (இப்னு மஸ்வூத்) உங்களிடம் இல்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'ஆம் (இருக்கிறார்)" என்று பதிலளித்தேன்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 3743 ]

அல்கமா இப்னு கைஸ்(ரலி) அறிவித்தார். நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள், 'அபுத் தர்தா(ரலி), (இங்கு) வந்து, அல்லாஹ் தன் தூதரின் நாவினால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இருக்கிறாரா?' என்று கேட்டார்" எனச் சொன்னார்கள். முகீரா இப்னு மிக்ஸம்(ரலி), 'அல்லாஹ் தன் தூதரின் நாவினால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர்" என்று அபுத் தர்தா(ரலி) குறிப்பிட்டது அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அவர்களைத் தான்" என்று கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 3287

இத்தகைய சிறப்பு வாய்ந்த அம்மார்[ரலி] அவர்கள், இஸ்லாத்திற்காக முதன்முதலாக உயிர்த்தியாகம் செய்த சுமைய்யா[ரலி], யாசிர்[ரலி] ஆகியோரின் அருமை மகன் என்பது நாமறிந்த செய்திதான். இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சத்திய மார்க்கத்தை போதிக்கத்தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் இஸ்லாத்தை ஏற்று பல்வேறு இன்னல்களை சந்தித்தவர்கள் அம்மார்[ரலி] அவர்கள். ஒரு கட்டத்தில் இணைவைப்பாளர்களின் உச்சகட்ட துன்புறுத்தலின் போது, உள்ளத்தில் ஈமானை நிறைத்துகொண்டு உதட்டளவில் ஈமானுக்கு மாற்றமான கருத்தை சொன்ன அம்மார்[ரலி] அவர்கள் கைசேதம் அடைந்தவர்களாக அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் கூறியபோது கண்ணியம் பொருந்திய அல்லாஹ்,

مَن كَفَرَ بِاللّهِ مِن بَعْدِ إيمَانِهِ إِلاَّ مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالإِيمَانِ وَلَـكِن مَّن شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.[16:106 ]

என்ற வசனத்தை இறக்கி அம்மார்[ரலி] அவர்களின் தியாகத்தை பொருந்திக் கொள்கிறான், மேலும் நபியவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா செல்வதற்கு முன்பாகவே மதீனாவிற்கு ஹிஜ்ரத் எனும் தியாகப் பயணம் மேற்கொண்ட அம்மார்[ரலி] அவர்கள் புனிதமிக்க மஸ்ஜிதுன் நபவியின் கட்டுமனான பணியில் அதிகம் உடலுழைப்பு செய்த அந்த வேளையில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;

இக்ரிமா அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடமும் அவர் மகன் அலியிடமும் 'நீங்களிருவரும் அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் சென்று அவர் அறிவிக்கும் செய்தியைச் செவிமடுத்து வாருங்கள்!' எனக் கூறினார்கள். நாங்கள் சென்றோம். அபூ ஸயீத்(ரலி) தங்களின் தோட்டத்தைச் சரி செய்து கொண்டிருந்தார்கள். (எங்களைக் கண்டதும் தங்களின் மேலாடையைப் போர்த்திக் கொண்டு (பல செய்திகளை) எங்களுக்குக் கூறலானார்கள். பள்ளிவாசல் கட்டப்பட்ட செய்தியைக் கூறும்போது 'நாங்கள் ஒவ்வொரு செங்கல்லாகச் சுமப்பவர்களாக இருந்தோம். (ஆனால்) அம்மார்(ரலி) இரண்டிரண்டு செங்கற்களாகச் சுமக்கலானார். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அவரின் மேனியில் படிந்த மண்ணைத் தட்டிவிட்டு 'பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்." என்று கூறினார்கள். அதற்கு அம்மார்(ரலி) 'அந்தக் குழப்பங்களைவிட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார்கள்' என அபூ ஸயீத்(ரலி) குறிப்பிட்டார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 447

தான் கொல்லப்படுவோம் என்பதை இறைத்தூதர்[ஸல்] அவர்களின் வாயால் செவிமடுத்த அம்மார்[ரலி] அவர்கள், நம்மை போன்ற பலவீனமானமானவராக இருந்தால், உயிர்மீது ஆசையுடையவராக இருந்தால் அவர் இஸ்லாத்தை விட்டே விரண்டோடியிருப்பார். அம்மார்[ரலி] அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. தான் கொல்லப்படப்போகும் நாளை எண்ணி கண்ணீர் விட்டு கொண்டிருக்கவில்லை. மாறாக, அத்தகைய குழப்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூறுகிறார்கள் என்றால், அவர்கள் உள்ளத்தில் எந்த அளவு இறையச்சம் நிரம்பியுள்ளது என்பதை விளங்கிக்கொள்ளலாம். அந்த இறையச்சம்தான் அவர்களுக்கு ஷஹீத் எனும் அந்தஸ்த்தையும், சுவனத்தில் உயர்ந்த படித்தரத்தையும் பெற்றுத்தந்துள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அம்மார்[ரலி] அவர்களைப் போன்று நம்முடைய வாழ்வும்-மரணமும் இஸ்லாத்திற்காகவே அமைந்திட அருள்புரிவானாக!

வெள்ளி, 4 டிசம்பர், 2009

கப்பல் படையில் களமிறங்கி ஷஹீதான வீரப்பெண்மணி!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த்து மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு தருவது வழக்கம். உம்மு ஹராம்(ரலி), உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்களின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கினார்கள். அப்படியே நபி(ஸல்) அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு, சிரித்துக் கொண்டே கண் விழித்தார்கள். உம்மு ஹராம்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! ஏன் (இப்படிச்) சிரிக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் வீரர்களாக எனக்கு (கனவில்) எடுத்துக் காட்டப்பட்டார்கள். அவர்கள் இந்தக் கடலின் முதுகில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் மன்னர்களாக அல்லது கட்டில்களில் அமர்ந்திருக்கும் மன்னர்களைப் போல்... ஏறிச் செல்கிறார்கள்" என்று பதிலளித்தார்கள். அதற்கு உம்மு ஹராம்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர்(ரலி) அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, தம் தலையை(த் தலையணையில்) வைத்(து உறங்க ஆரம்பித்)தார்கள்; பிறகு, சிரித்தபடியே விழித்தெழுந்தார்கள். அப்போது உம்மு ஹராம்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் புரிபவர்களாக எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர்.." என்று முன்பு போன்றே கூறினார்கள். உம்மு ஹராம்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் (அறப்போருக்காகக் கடலில்) முதன்முதலாகப் பயணிப்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே, முஆவியா இப்னு அபீ சுஃப்யான்(ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் (சைப்ரஸ் தீவின் மீது அறப்போர் புரியச் சென்றவர்களுடன் உம்மு ஹராம்(ரலி) அவர்களும் கடல் பயணம் செய்து கடலிலிருந்து (தீவின் ஒரு பகுதிக்குப்) புறப்பட்டபோது தம் வாகனத்திலிருந்து விழுந்து மரணமடைந்தார்கள். [நூல்;புஹாரி]


வீரப்பெண்மணி உம்மு ஹராம்[ரலி] அவர்கள், மற்றொரு வீரப் பெண்மணியான உம்மு சுலைம்[ரலி] அவர்களின் சகோதரியும், நபி[ஸல்] அவர்களின் ஊழியரான அனஸ் இப்னு மாலிக்[ரலி] அவர்களின் சிற்றன்னையும் ஆவார். மதீனாவில் உள்ள தனது தோழர்களின் வீடுகளில் நபியவர்கள் அதிகமதிகம் செல்லக்கூடிய வீடு இந்த இரு சகோதரிகளின் வீடுகள்தான். அந்த வகையில் உம்மு ஹராம்[ரலி] அவர்களும், உம்மு ஸுலைம்[ரலி] அவர்களும் நபியவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்துவிட்டால், அவர்களை இன்முகத்துடன் வரவேற்று உணவளித்து மகிழ்வார்கள். அப்படிப்பட்ட நிலையில்தான் ஒருமுறை தனது உம்மத்தினரில் கடல் மார்க்கமாக ஒரு சாரார் அறப்போருக்காக செல்வார்கள் என்ற செய்தியை நபியவர்கள் சொன்ன மாத்திரமே உம்மு ஹராம்[ரலி] அவர்கள்,nabi
[sal] அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறியதோடு, நபியவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரித்ததன் விளைவாக, உம்மு ஹராம்[ரலி] அவர்கள் அந்த போர் முடிந்து திரும்பும்போது கீழே விழுந்து ஷஹீத் எனும் பேற்றை அடைகிறார்கள் என்றால் நாம் அவர்களின் வீரத்தையும், இறையச்சத்தஹியும், சொர்க்கத்தின் மீது அவர்கள் கொண்ட நேசத்தையும் என்னும்போது மெய்சிலிர்த்து போகிறோம். இன்றைய பெண்களை எடுத்து பார்த்தோமானால், நாம் ஒரு பொழுதுபோக்கு இடத்திற்கோ, அல்லது ஒரு இன்ப சுற்றுலாவுக்கோ செல்கிறோம் என்றால் ஏங்க! நானும் ஒங்க கூட வருகிறேன் என்று சொல்வார்கள். அதே நேரத்தில் ஒரு போர்களத்திற்கு செல்கிறோம் என்றால், அவர்கள் வராததோடு நம்மையும் போகவிடாமல் தடுப்பார்கள். போகாதே போகாதே என்கணவா! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்ற ரீதியில் செண்டிமெண்டை காட்டி தடுக்க முயற்சிப்பார்கள். இதுதான் இன்றைய பெண்களின் நிலை. [விதி விலக்காக சிலர் இருக்கலாம்] ஆனால் சஹாபிப் பெண்களுக்கோ தமது உயிரோ, செல்வங்களோ, இந்த உலகின் கவர்ச்சியோ அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. மாறாக, சுவனத்தை அடைவது ஒன்றே அவர்களின் ஒரே இலக்காக இருந்துள்ளது எனபதற்கு உம்மு ஹராம்[ரலி] எனற உயிர்த் தியாகி மிக சிறந்த உதாரணமாக வரலாற்றில் மிளிர்கிறார்.
அல்லாஹ் உம்மு ஹராம்[ரலி] அவர்களை போன்று மார்க்கத்திற்காக உயிர் துறந்து மறுமையில் அவர்களை சுவனத்தில் நாம் பார்ப்பதற்கு நமக்கு நல்லருள் பாலிப்பானாக!

குறிப்பு; மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது. புஹாரி மட்டுமன்றி முஸ்லிமிலும் உள்ளது. ஆனாலும் இந்த ஹதீஸை நவீன ஹதீஸ்கலை[?] அறிஞர்கள் மறுக்கிறார்கள். காரணம் உம்மு ஹராம்[ரலி] என்ற அந்நியப் பெண் வீட்டிற்கு நபியவர்கள் எப்படி போயிருக்கமுடியும்.? ஒரு அந்நிய பெண் பேன் பார்க்கும் அளவுக்கு நபியவர்கள் எப்படி நடந்திருப்பார்கள்.? உம்மு ஹராம்[ரலி] அவர்களின் கனவர் வீட்டில் இல்லாதபோது நபியவர்கள் எப்படி சென்றிருப்பார்கள்..? எனவே இது நபியவர்களின் போதனைக்கும், அவர்களின் மகத்தான குணத்திற்கும் எதிராக உள்ள்ளது என்று கூறி, இந்த ஹதீஸை குப்பை கூடைக்கு அனுப்பி விட்டார்கள். ஒரு அந்நியப் பெண்ணின் வீட்டிற்கு செல்லக் கூடாது என்பது இவர்களுக்கு தெரிந்துள்ளது. ஆனால் பாவம் நபியவர்களுக்கு தெரியவில்லை. அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் சொல்லை விடநமது சிந்தனைதான் முக்கியம் என்றால், குளிப்பு கடமையான நிலையில் தண்ணீர் கிடைக்கவில்லையானால், தயம்மும் செய்யலாம் என்று மார்க்கம் சொல்கிறது. ஏற்கனவே ஸ்கலிதம் எர்ப்படடதால்தான் தான் குளிப்பு கடமையாகி உள்ளது. அந்த அசுத்ததோடு, தயம்மும் என்ற பெயரில் முகத்திலும் கைகளிலும் மண்ணை தடவி கூட கொஞ்சம் அசுத்தமாவது அறிவுக்கு பொருந்துகிறதா..? எனவே இது தொடர்பான வசனங்களையும், ஹதீஸ்களையும் குப்பை கூடைக்கு அனுப்புவோமா..? [அல்லாஹ் மன்னிப்பானாக].

இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டியபின் தடம்புரள செய்துவிடாதே!

வியாழன், 3 டிசம்பர், 2009

உயரிய பண்புடைய உம்மு ஸுலைம்[ரலி].

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
நபி[ஸல்] அவர்களின் மதீனா வாழ்வை நாம் படித்துப்பார்த்தால், அவற்றில் பல்வேறு இடங்களில் நபியவர்களோடு தொடர்புடையவர்களாக அபூதல்ஹா[ரலி] -உம்மு ஸுலைம்[ரலி] தம்பதியை நாம் காணலாம். இந்த தம்பதிகளுக்கென்று பல்வேறு சிறப்புகள் உண்டு. இவ்விருவரும் இறைக்கட்டளையை அப்படியே பேனக்கூடியவர்களாக, இறைத்தூதரின் விருப்பத்திற்குரியவர்களாக இருந்துள்ளனர். இவர்களில் உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் சீரிய அறிவாற்றலும் மதிநுட்பமும் பொருந்தியவர்களாக திகழ்ந்தார்கள். எப்படிப்பட்ட சோதனையான கட்டமாகிலும் அதை பொறுமையுடன் எதிர்கொண்டு அதை நன்மையாக மாற்றக் கூடியவர்களாக திகழ்ந்துள்ளனர் என்பதற்கு ஒரே ஒரு சான்று;

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்கள்;
என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா(ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூ தல்ஹா(ரலி) திரும்பி வந்தபோது 'என் மகன் என்ன ஆனான்?' என்று கேட்டார்கள். (அவரின் துணைவியார்) உம்மு சுலைம் (துக்கத்தை வெளிக்காட்டாமல்), 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூ தல்ஹா(ரலி) இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் (அன்றிரவு) தாம்பத்திய உறவுகொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் (தம் கணவரிடம்) 'பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்' என்று கூறினார்கள். விடிந்ததும் அபூ தல்ஹா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா?' எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா(ரலி), 'ஆம்' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்தித்தார்கள்.
பின்னர் உம்முசுலைம்(ரலி) ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள். என்னிடம் அபூ தல்ஹா(ரலி), 'குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் பத்திரமாகக் கொண்டுசெல்' என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். என்னிடம் உம்மு சுலைம்(ரலி) பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பியிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, 'இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?' என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள் 'ஆம்; பேரீச்சம் பழங்கள் உள்ளன' என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அதை வாங்கி (தம் வாயால்) மென்று பிறகு தம் வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவினார்கள். குழந்தைக்கு 'அப்துல்லாஹ்' எனப் பெயர் சூட்டினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 5470

இந்த பொன்மொழியில் உம்மு ஸுலைம்[ரலி] அவர்களின் செயல்பாடுகள் ஒவ்வொரு முஸ்லிமான ஆணுக்கும்-பெண்ணுக்கும் ஆயிரம் படிப்பினை தரும் விஷயமாகும். பொதுவாகவே ஒருவர் இறந்துவிட்டால் அதிலும் குறிப்பாக தமது பிள்ளை இறந்துவிட்டால் ஆணை விட பெண்கள் அழுது ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதில் முன்னிலை வகிப்பதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம். இங்கே தமது மகன் இறந்தபோது, உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை . முதலாவதாக அல்லாஹ்வின் தீர்ப்பை பொருந்திக் கொள்கிறார்கள். அடுத்து வெளியே சென்றுள்ள கணவன் திரும்பி வந்தவுடன் மகன் இறந்த சோகத்தை மறைத்து கணவனை உபசரிக்கிறார்கள். கணவனோடு இல்லற வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள். இந்த விஷயத்தில் கணவனின் மனநிலை அறிந்து செயல்படும் ஒரு சிறந்த மனைவியாக திகழ்ந்துள்ளார்கள். அடுத்து தன் மகன் பற்றி அபூ தல்ஹா[ரலி] அவர்கள் கேட்டபோது, உங்கள் மகன் இறக்கவில்லை என்று சொல்லியிருந்தால் அது பொய்யாகிவிடும் என்பதால், மிகவும் சாதுர்யமாக உண்மையை வேறு வார்த்தையில் அதாவது 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று கூறி, எந்த நிலையிலும் பொய் சொல்லக் கூடாது என்ற மார்க்க கட்டளையை பேணி காத்ததன் மூலம் மிகச்சிறந்த இறையச்சமுடையவராக திகழ்கிறார்கள் . உம்மு ஸுலைம்[ரலி] அவர்களின் இந்த செயல் பற்றி அபூ தல்ஹா[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, நபியவர்கள் உம்மு ஸுலைம்[ரலி] அவர்களை கண்டிக்காமல் அவர்களின் செயல்களை அங்கீகரிக்கும் வகையில், 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்திக்கிறார்கள் என்றால் உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் எத்தகைய சிறப்புடையவர்கள் என்று விளங்கிக்கொள்ளலாம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். [புஹாரி எண் 6424 ]

மேலும் உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் சொர்க்கத்திற்கு உரியவர் என்று நபி[ஸல்] அவர்களின் மற்றொரு பொன்மொழியின் வாயிலாக உணரமுடிகிறது;

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள், 'நான் (கனவில்) என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரிஎண் 3679 ]
[உம்மு ஸுலைம்[ரலி] அவர்களின் இயற்பெயர் அர்ருமைஸா பின்த் மில்ஹான் என்பதாகும்]
எல்லாம் வல்ல அல்லாஹ் உம்மு ஸுலைம்[ரலி] அவர்களை பொருந்திக் கொள்வானாக! தியாகத்தையும், இறையச்சத்தையும் வாழ்க்கையாக கொண்ட அவர்களைப்போல் நம்மையும் வாழ்ந்து மரணிக்க செய்வானாக!

சனி, 28 நவம்பர், 2009

எங்களுக்குள் போட்டி உண்டு; ஆனால் பொறாமையில்லை என்று நிரூபித்த அன்னை!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிமான ஆண்களுக்கு அதிகபட்சமாக நான்கு திருமணம் வரை செய்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளதை நாம் அறிவோம். இந்திய அளவில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்பவர்கள் மிக மிக குறைவு. காரணம் பொருளாதரா பிரச்சினை ஒருபக்கம் இருந்தாலும், மறு பக்கம் இரு மனைவியர் ஒருவருக்கு இருந்தால் அவர்களுக்கு மத்தியில் பஞ்சாயத்து தீர்ப்பதற்கே பெரும்பான்மையான நேரம் ஒதுக்கவேண்டிய நிலை. இரு ஆண்கள் ஒத்துப்போய் விடுவார்கள். ஆனால் இரு பெண்கள் ஒத்துப்போவது என்பது மிகமிக அரிது. அதிலும் ஒரு கணவருக்கு வாழ்க்கைப்பட்ட இரு பெண்கள், இவர்களில் ஒவ்வொருவரும் மற்ற மனைவியை தன் கணவன் நெருங்காமல் இருப்பதற்கு என்ன வழி என்று சதா யோசித்து தங்களில் ஒருத்தியை மாட்டிவிடும் வாய்ப்பு கிடைக்குமென்றால் அதை கச்சிதமாக பயன்படுத்தி அவளிடமிருந்து தன் கணவனை பிரித்துவிடுவாள். தன் கணவன் மறுமணம் செய்வதை அனுமதிக்கும் அரபு நாட்டு பெண்கள் பெரிய அளவில் தனது சக்களத்தியை கண்டுகொள்வதில்லை. ஆயினும் அவர்களில் சிலர் தனது கணவன் மற்றொரு பெண்ணை மணப்பதை தடுப்பதற்கான முயற்சி மேற்கொள்வதாக அறிகிறோம். சமீபத்தில் குவைத்தில் ஜஹ்ரா என்ற பகுதியில் ஒரு திருமணத்தின்போது நடந்த தீவிபத்திற்கு ஒரு முன்னாள் மனைவியே காரணம் என்று கூறப்பட்டது.[அல்லாஹ்வே அறிந்தவன்] இதை நாம் இங்கு குறிப்பிட காரணம் பொதுவாகவே பெண்கள், கணவன் குடிகாரனாகவோ, சூதாடியாகவோ, குடும்பத்தை சரிவர கவனிக்காத பொருப்பில்லாதவனாகவோ இருந்தால்கூட சகித்துகொண்டு விட்டுக்கொடுத்து விடுவார்கள். ஆனால் ஒரு உதவாக்கரை கணவனைக்கூட இன்னொரு பெண்ணிற்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இது பெரும்பான்மையான பெண்களின் இயல்பு. ஆனால் ஸஹாபி பெண்களை பொறுத்தவரையில் அல்லாஹ் அனுமதித்த எந்த ஒன்றையும் தடுக்கக் கூடியவர்கள் அல்லர். எனவே பெரும்பான்மையான சஹாபாக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்ததை நாம் ஹதீஸ்களின் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் இறைத்தூதர்[ஸல்] அவர்களுக்கு அல்லாஹ் பல மனைவியரை மணக்கும் அனுமதி தந்திருந்தான். நபி[ஸல்] அவர்களும் சுமார் பதினொரு அல்லது பன்னெண்டு மனைவியரை மணந்தார்கள். இந்த மனைவியருக்குள் நபியவர்களின் அன்பை பெறுவதில் போட்டி இருந்தது. இதை நாமாக சொல்லவில்லை. நபி[ஸல்] அவர்களின் நேசத்திற்குரிய அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் சொல்கிறார்கள்;

அல்லாஹ்வின் தூதருடைய மனைவிமார்களான நாங்கள் இரு குழுக்களாக இருந்தோம். ஒரு குழுவில் நானும் ஹஃப்ஸா, ஸஃபிய்யா, மற்றும் சவ்தா ஆகியோரும் இருந்தோம். மற்றொரு குழுவில் உம்மு சலாமா அவர்களும் அல்லாஹ்வின் தூதருடைய மற்ற மனைவிமார்களும் இருந்தனர்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 2581 ]

மற்றொரு ஹதீஸில் நம் அன்னையர்களுக்கு மத்தியில் நபியவர்களின் நெருக்கத்திற்குரியவர்களாக இருப்பதில் போட்டியிருந்ததை காணலாம்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் (அவர்களின் அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். எனவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் 'நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்' என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம். எங்களில் ஒருவரிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவுதான் சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்' என்று கூறினார்கள். எனவே, 'நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?' என்று தொடங்கி 'நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)' என முடியும் (திருக்குர்ஆன் 66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.
ஆதாரம்; புஹாரி எண் 5267

இவ்வாறாக நம் அன்னையர்களுக்கு மத்தியில் பெண்களுக்கே உரித்தான போட்டி மனப்பான்மை இருந்தாலும், அவர்களுக்கிடையே பகைமையோ, ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்கும் என்னமோ, பழிவாங்கும் நோக்கமோ கடுகளவும் இல்லை என்பதை பின்வரும் ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது. அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது பாவிகள் அவதூறு சொனன்போது, இது குறித்து என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து நபி[ஸல்] அவர்கள், அலீ[ரலி] உசாமா[ரலி] பரீரா[ரலி] உள்ளிட்ட சிலரிடம் ஆலோசனையும் கருத்துக்களும் கேட்டது போன்று அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடமும் கருத்து கேட்டார்கள். அப்போது அன்னையவர்கள் கூறிய வார்த்தை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை;

அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம் விசாரித்தார்கள். 'ஸைனபே! நீ (ஆயிஷாவைக் குறித்து) என்ன அறிந்திருக்கிறாய்?... அல்லது (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?... என்று (ஸைனபிடம்) கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்" என்று பதிலளித்தார்கள். ஸைனப் அவர்கள் தாம், நபியவர்களின் துணைவியரில் எனக்கு (அழகிலும் நபி-ஸல்-அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை (இறையச்சமுடைய) பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 4141 ]

அழகிலும், நபி [ஸல்] அவர்களின் அன்பிலும் எனக்கு போட்டியாக இருந்தவர் ஸைனப் என்று வர்ணிக்கும் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் வாயாலேயே, அன்னை ஸைனப்[ரலி] அவர்கள் சொன்ன வார்த்தையால் சிலாகித்து அன்னை ஆயிஷா[ரலி] அவர்களே சொல்லுமளவிற்கு அன்னை ஸைனப்[ரலி] அவர்களின் உள்ளம் இறையச்சத்தால் நிரம்பியிருந்ததை காண்கிறோம். அதனால்தான் தன்னை போட்டியாக கருதிய ஆயிஷா[ரலி] அவர்கள் மீது பழி சொல்வதற்கு வாய்ப்பு கிடைத்தபோதும், அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக ஆயிஷா[ரலி] அவர்கள் விஷயத்தில் உள்ளதை மட்டும், உண்மையை மட்டும், நன்மையை மட்டும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் அன்னை ஸைனப்[ரலி] அவர்கள் சொல்கிறார்கள் என்றால் அதுதான் சஹாபாக்கள். இதே நிலை இன்றைய பெண்களிடம் நடந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே! எனவேதான் தெளிவாக சொல்கிறோம் இறையச்சத்திலும் சரி, அமல்களிலும் சரி, நன்னடத்தையிலும் நற்குணத்திலும் சரி அந்த சஹாபாக்கள் மற்றும் ஸஹாபி பெண்களின் அந்தஸ்த்தில் கடுகளவும் எட்டிப்பிடிக்கமுடியாது என்பதே உண்மை. இந்த லட்சணத்தில், அந்த மேன்மக்களை விட அல்லாஹ் நம்மை மேன்மையாக்கி வைத்துள்ளான் என்ற அகம்பாவ பிரச்சாரம் வேறு!

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.