வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

எமது சொல்லும், செயலும் இஸ்லாமே என வாழ்ந்தவர்!

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்;

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'பச்சை
குத்திவிடும் பெண்கள், பச்சை
குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?' என்று கூறினார்கள். இச்செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, 'உம்மு யஅகூப்' எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து, 'இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், '(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!' என்று கேட்டதற்கு அவர்கள், 'நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். 'இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதைவிட்டும் நீங்கள் விலகி இருங்கள்' எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா?' என்று கேட்டார்கள். அந்தப் பெண், 'ஆம் (ஒதினேன்)' என்று பதிலளித்தார். அப்துல்லாஹ்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி, 'உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக கருதுகிறேன்' என்று கூறினார். அப்துல்லாஹ்(ரலி), 'சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!' என்று கூறினார்கள். எனவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்' என்று கூறினார்கள். நூல்;புஹாரி எண் 4886
 
அன்பானவர்களே! நபித் தோழர்களில் மிகச்சிறந்தவர்களில் ஒருவரான இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள், பச்சை குத்துவது உள்ளிட்ட அல்லாஹ் வடிவமைத்ததை மாற்றுபவர்களை சபிக்கிறார்கள். இச்செய்தி ஒரு பெண்மணிக்கு எட்டுகிறது. சரி! சொன்னவர் சாமான்யர் அல்ல. ஒரு உயர்வான நபித்தோழர். எனவே அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று அப்படியே நம்பிவிடவில்லை. மாறாக, இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களிடம் வந்து உங்களின் கூற்றுக்கு என்ன ஆதாரம்..? என்கிறார். இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப் பட்டுள்ளவர்களை நான் சபிக்கக் கூடாதா என்கிறார்கள். அப்போதும் அப்பெண்மணி விடவில்லை. குர்ஆணை முழுமையாக ஒதியுள்ளேன் எனவே நீங்கள் கூறுவது போல இல்லையே என்கிறார். இந்த அளவுக்கு சஹாபிப் பெண்கள் தெளிவாக இருந்துள்ளார்கள். குர்ஆணோடு முழு தொடர்போடு இருந்துள்ளார்கள். ஒருவர் கூறும் சட்டம் குர்ஆனில் இல்லை என்று அடித்து சொல்லும் அளவுக்கு குர்ஆணை முழுமையாக மனனம் செய்துள்ளார்கள். ஆனால் இன்று நம்முடைய பெண்கள்  மட்டுமல்ல; ஆண்களில் கூட  பெரும்பாலோருக்கு குர்ஆண்  ஓத தெரிவதில்லை. காரணம் போடுபோக்குத்தான். எதுவா இருந்தாலும் ஆலிம்ஷாக்களிடம் கேட்டுக்கொள்வோம். அவர்கள் சொல்வதை அப்படியே அமுல்படுத்துவோம் என்ற மெத்தனப்போக்குத்தானே  இத்தனை குழப்பங்களுக்கு வழிவகுத்தது..? இது ஒருபுறமிருக்க, இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களிடம் அப்பெண்மணி, 'எல்லாம் சரிதான் ஆனா ஒங்க வீட்டுல ஒங்க துணைவியார் செய்கிறாகளாமே' என இழுக்க, சட்டென இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் என் வீட்டில் போய் பாருங்கள் என்கிறார்கள். அதோடு இறுதியாக, என் மனைவி மட்டும் அப்படி செய்பவளாக இருந்தால் அவளோடு நான் சேர்ந்து வாழமாட்டேன் என்கிறார்கள் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள். இன்றைக்கு வெளியிலே மார்க்க சட்டம் பேசக்கூடிய நம்மில் பலரின் வீட்டில் நாம் பேசக்கூடிய சட்டங்கள் பெரும்பாலும் நமது குடும்பத்தாரால் அமுல்படுத்தப்படுவதில்லை. ஆனாலும் நாம் அதை கண்டுகொள்வதில்லை. அவ்வளவு ஏன்..? பல நேரங்களில் நாமே பல அமல்களை கோட்டை விடக்கூடியவர்களாக இருக்கிறோம். 'ஊருக்குத்தான் உபதேசம்'  என்பதற்கு ஏற்ப நமது செயல்பாடுகள் உள்ளன.ஆனால் அருமை சஹாபா பெருமக்கள் சொல்லிலும் செயலிலும் தூய்மையாளர்களாக திகழ்ந்ததோடு, தந்து குடும்பத்தார் விசயத்திலும் அத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களின் இந்த செய்தி உணர்த்துகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் மார்க்கத்தை சொல்லில் மட்டுமல்ல; செயலிலும் கடைபிடிக்க அருள்புரிவானாக!

2 கருத்துகள்:

  1. உங்கள் தளத்தினை என் தளத்தினுள் இணைத்துள்ளேன்.நன்றி
    ரமலான் முபாரக்

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்.
    தங்களின் ஆதரவுக்கு நன்றி. ஜசாக்கல்லாஹு ஹைர்.

    பதிலளிநீக்கு