புதன், 14 அக்டோபர், 2009

நண்மைக்கு ஏங்கிய நன்மக்கள்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;
ஏழை மக்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகிறார்கள். மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதனால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர்;உம்ராச் செய்கின்றனர்; அறப்போரிடுகின்றனர்; தர்மமும் செய்கின்றனர். (ஏழைகளாகிய நாங்கள் இவற்றைச் செய்ய முடிவதில்லை)' என்று முறையிட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகிறேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்திவிட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கிறீர்களோ அவர்களும அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவராவீர்கள். (அந்த காரியமாவது) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33முறை இறைவனைத் துதியுங்கள்; 33 முறை இறைவனைப் புகழுங்கள்; 33 முறை இறைவனைப் பெருமைப படுத்துங்கள்' என்று கூறினார்கள். நாங்கள் இது விஷயத்தில் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர் ஸுப்ஹானல்லாஹ் 33 முறையும், அல்ஹம்துலில்லாஹ் 33 முறையும் அல்லாஹு அக்பர் 33 முறையும் கூறலானோம். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்" என்று 33 முறை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 முறை கூறினார்கள் என அமையும்'. என்று விளக்கம் தந்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 843
இந்த பொன்மொழியில் பல படிப்பினை நமக்கு உள்ளது. ஏழைகளான சகாபாக்கள், வசதி படைத்தவர்களைப்போல் நாம் மாளிகை கட்டமுடியவில்லையே, ஆடை- ஆபரணங்களால் நம்மை அழகு படுத்திக்கொள்ள முடியவில்லையே, அவர்களைப்போன்று வாகனங்கள் வைத்துக்கொள்ள முடியவில்லையே, அவர்களைப்போன்று அறுசுவை உணவுகளை உட்கொண்டு சுகவாழ்க்கை வாழ முடியவில்லையே என்று அவர்கள் ஆதங்கப்பட்டு நபி[ஸல்] அவர்களிடம் கோரிக்கை வைக்கவில்லை. நபியவர்களே! அவர்களெல்லாம் செல்வ செழிப்பில் மிதக்கும்போது நாங்கள் மட்டும் வறுமையில் வாடவேண்டுமா? எனவே எங்களுக்கு செல்வம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். அதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக, வசதி படைத்தவர்கள் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதனால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர்;உம்ராச் செய்கின்றனர்; அறப்போரிடுகின்றனர்; தர்மமும் செய்கின்றனர். இதன் மூலம் நன்மையில் அவர்கள் முந்துகிறார்களே என்றுதான் நபியவர்களிடம் முறையிடுகிறார்கள். இதை பார்க்கும்போது இந்த உலகத்தில் அவர்களை ஆட்கொண்டிருந்த வறுமையை மறுமைக்காக பொறுத்து, அமல்களின் மூலம் அந்த மறுமையை அடையமுயற்சித்த அவர்களின் அடங்காத தாகம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. இன்றும் கூட நம்மில் சிலர் தங்களுக்கு ஏதேனும் வறுமை வந்துவிடுமானால், என்ன அல்லாஹ்! நான் அவனை ஐவேளை தொழுகிறேன்; எனக்கு வறுமையை தந்துள்ளான். ஆனால் பெருநாள் மட்டுமே பள்ளிவாசல் பக்கம் எட்டிப்பார்க்கும் மூஸாவுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுத்துள்ளானே என்று அங்கலாய்ப்பவர்களையும் பார்க்கிறோம். நம்முடைய சிந்தனை அவனைவிட நாம் எப்படி பணக்காரனாக ஆவது என்று; ஆனால் நபியவர்களால் பண்படுத்தப்பட்ட அந்த சத்திய சகாபாக்களுக்கோ என்ன செய்தால் நாம் மற்றவர்களைவிட நன்மையில் முந்தமுடியும் என்ற சிந்தனை. அதுதான் அந்த மேன்மக்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு.

இது ஒருபுறமிருக்க, அந்த ஏழை சகாபாக்களுக்கு நன்மையில் முந்துவதற்கு ஒரு செயலை, அதாவது தொழுகைக்கு பிறகு 'ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்" என்று 33 முறை கூறுங்கள் என்று நபி[ஸல்] அவர்கள் சொன்னார்களே! இது இன்றைக்கு நம்மில் எத்துனை பேரிடம் நடைமுறையில் உள்ளது..? விரலை அசைப்பதிலும்-சத்தமிட்டு ஆமீன் சொல்வதிலும் காட்டும் ஆர்வம் இதில் காட்டப்படுகிறதா? என்றால் இல்லை. இமாம் ஸலாம் கொடுத்தவுடன் மடைதிறந்த வெள்ளம்போல் அடுத்தவர்களை தாண்டிக்குதித்து வெளியேறுவதே நம்மில் பலரின் இன்றைய நிலை. இதில் பர்ல் மட்டுமே தொழும் தவ்ஹீத் வாதிகளும் உண்டு. இவ்வாறெல்லாம் இருக்கும் நமது நிலை மாறவேண்டும். சகாபாக்கள் எப்படி நன்மையை தேடி, தேடி செய்தார்களோ, அதுபோல் நாமும் செய்யமுன்வந்தால்தான் மறுமையில்,அந்த சத்திய சகாபாக்கள் அளவுக்கு 'மெரிட்'டில் பாஸ் பன்ன முடியாவிட்டாலும், எதோ 'பெயில்' ஆகாமலாவது தப்பிக்கலாம்.

என்ன! அடுத்த தொழுகையில் இறைவனை 33முறை இறைவனைத் துதிக்கவும் ; 33 முறை இறைவனைப் புகழவும் ; 33 முறை இறைவனைப் பெருமைப்படுத்தவும் ரெடியா..?

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

உஸ்மான்[ரலி] அவர்கள் ஃபித்அத்தை உண்டாக்கினார்களா..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சஹாபாக்களை மட்டம் தட்டும் நூலில், வஹிக்கு முரணான சஹாபாக்களின் நடவடிக்கைகள் என்ற தலைப்பின் கீழ்,
ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) காலங்களிலும் ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான்(ரலி) காலத்தில் மக்கள் பெருகியபோது கடை வீதியில் (பாங்கு, இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது.[புஹாரி எண் 912 ]
என்ற இந்த ஹதீஸை பதிவு செய்துவிட்டு,
வணக்கத்தில் ஒரு நடைமுறையை நபி[ஸல்] அவர்கள் காட்டித்தந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து வந்த இரு கலீபாக்களும் அதை செயல்படுத்தியுள்ளனர் . ஆனால் மக்கள் உரை கேட்க வருவதில்லை என்பதற்காக உஸ்மான்[ரலி] அவர்கள் 'சுயமாக' இன்னொரு அறிவிப்பை அதிகமாக்கினார்கள். எதோ ஒரு காரணத்தால் நபிவழியை கூட சில நபித்தோழர்கள் மாற்றியுள்ளார்கள். அல்லது இல்லாததை அதிகப்படுத்தியுள்ளார்கள் என்பது இதன்மூலம் தெரிகிறது. என்று எழுதியுள்ளார்கள்.

அன்பானவர்களே! அவர்கள் எடுத்து வைக்கும் ஹதீஸில் உஸ்மான்[ரலி] அவர்கள் ஒரு அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள் என்று வருவது உண்மையே! ஆனால் எதற்காக அந்த அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது மக்கள் அதிகமான காரணத்தால் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த மேதாவி கூறுகிறார்; மக்கள் உரை கேட்க வருவதில்லை என்பதற்காக உஸ்மான்[ரலி] அதிகப்படுத்தினார் என்று தனது சொந்த கருத்தை திணிக்கிறார். சரி! இதில் மக்கள் உரை கேட்க வருவதில்லை என்பதற்காக ஒரு அறிவிப்பை உஸ்மான்[ரலி] அதிகப்படுத்தினார் என்று கூறியவர், அடுத்து எதோ ஒரு காரணத்தால் நபிவழியைக்கூட சில நபித்தோழர்கள் மாற்றியுள்ளார்கள் என்று கூறி தனக்குத்தானே முரண்படுகிறார். மேலும், இந்த செய்தியை வஹிக்கு முரணான நடவடிக்கைகள் என்ற தலைப்பின் கீழ் கொண்டு வந்ததால் உஸ்மான்[ரலி] அவர்கள் ஃபித்அத்தை உருவாக்கினார் என்று அடையாளம் காட்டுகிறார். அப்படியாயின் எல்லா ஃபித்அத்தும் வழிகேடு நரகில் தள்ளும் என்ற நபி[ஸல்] அவர்களின் பொன்மொழியின் படி உஸ்மான்[ரலி] அவர்கள் நரகம் செல்வார்களா? இப்படி ஒரு கேள்வி இலங்கையில் நடைபெற்ற விவாதத்தில் ஷேய்க் அப்துல்லா ஜமாலி என்பவரால் முன்வைக்கப்பட்டபோது,
அதற்கு பதிலளித்த இந்த அறிஞர், உஸ்மான்[ரலி] அவர்கள் பாங்கை அதிகப்படுத்தினார்கள் என்று வரவில்லை. அறிவிப்பை செய்யுமாறு சொன்னதாக அதுவும் கடைத்தெருவில் சொல்ல சொன்னதாகத்தான் வருகிறது. எனவே இது பாங்காக இருக்கமுடியாது. பாங்காக இருந்தால் பள்ளிவாசலில் சொல்லாமல் ஏன் கடைத்தெருவில் சொல்லவேண்டும் என்று அன்று சொன்னவர், இன்று அதையே வஹிக்கு முரணான, நபி[ஸல்] அவர்களின் நடைமுறைக்கு முரணான உஸ்மான்[ரலி ] அவர்களின் செயலாக காட்ட முற்படுகிறார் என்றால், இரட்டை வேடத்தை புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து இன்னொரு அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டும். அதாவது பாங்கு என்பது தொழுகைக்கு அழைக்கும் அழைப்பு அது எங்கு தொழுகை நடைபெறுகிறதோ அங்கு சொல்லப்படும். பள்ளிவாசல் இருந்தால் பள்ளிவாசலில் சொல்லப்படும். பள்ளிவாசல் இல்லாத ஊரில் அல்லது பாலைவனத்தில் இருந்தால் அவர்கள் எந்த இடத்தில் தொழுகை நடத்துவார்களோ அங்கு சொல்லப்படும் . ஆனால் மதீனாவில் புகழ் பெற்ற பள்ளிவாசல் இருக்க அங்கு அதிகப்படியான பாங்கு சொல்லுமாறு உஸ்மான்[ரலி] அவர்கள் சொல்லவில்லை. மாறாக கடைத்தெருவில் சொல்ல சொன்னதன் மூலம் அது பாங்கு அல்ல சாதரண அறிவிப்புதான் என்பது திண்ணம். இதை நாம் மட்டும் சொல்லவில்லை. இன்று உஸ்மான்[ரலி] அவர்களை வஹிக்கு முரனானவ்ராக காட்டும் இந்த 'அதிமேதாவி'யின் மாணவரும், ததஜ துணைத்தலைவருமான மரியாதைக்குரிய மவ்லவி. சுலைமான் அவர்கள் தனது நபிவழியில் தொழுகை சட்டங்கள் என்ற நூலில் இந்த விஷயத்தை எழுதியுள்ளதை பாருங்கள்;
உஸ்மான்[ரலி] அவர்கள் காலத்தில் சொல்லப்பட்டது இப்போது சொல்லப்படும் முதலாவது பாங்கை போன்றது அல்ல. மக்கள் அதிகமானதால் உஸ்மான்[ரலி] அவர்கள் 'ஸவ்ரா'எனும் இடத்தில் ஒரு அறிவிப்பை சொல்ல சொன்னார்கள். ஸவ்ரா என்பது மதீனாவில் உள்ள வீடாகும்.[இப்னுமாஜா 1125 ]
உஸ்மான்[ரலி] அவர்கள் ஏற்படுத்திய அந்த அறிவிப்பை கூட பள்ளிவாசலில் செய்யவில்லை.எனவே உஸ்மான்[ரலி] அவர்கள் இரண்டாம் பாங்கை ஏற்படுத்தவில்லை என்பதே சரியாகும்.
என்று எழுதியுள்ளார்.

அன்பானவர்களே! உஸ்மான்[ரலி] அவர்கள் சாதரணமாக சொல்லுமாறு பனித்த அறிவிப்பை, வஹிக்கு முரனானனதாக காட்டும் இந்த அதிமேதாவிக்கு அவரது மாணவரின் மறுப்பே போதுமானதாகும். சுலைமான் சொன்னது எனக்கு தெரியாது என்று இந்த அறிஞர் கூறமுடியாது. ஏனெனில் இந்த நூல் இவரது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவரது வலைத்தளத்தில் வெளியாகும் அனைத்துக்கும் நான் பொறுப்பாவேன் என்றும் கூறியுள்ளார். எனவே அன்பானவர்களே! உரிய ஆய்வின்றி உஸ்மான்[ரலி] அவர்களை குற்றவாளியாக்கும் இவர்களை போன்றவர்களை இனம்கானுங்கள்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

சனி, 10 அக்டோபர், 2009

உமர்[ரலி] மற்றும் அன்னை ஆயிஷா[ரலி] மீதும் புதிய அவதூறு!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சகாபாக்களை மட்டம் தட்டும் நூலில் வஹிக்கு முரணான நபித்தோழர்களின் நடவடிக்கைகள் என்ற பகுதியில், நபி[ஸல்] அவர்கள் இறந்த போது உமர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்கள் மரணிக்கவில்லை என்று சொன்னதை இப்படி வர்ணிக்கிறார்கள்;
நபி[ஸல்] அவர்கள் மரணித்தபோது உமர்[ரலி]உள்ளிட்ட பல நபித்தோழர்கள் நபி[ஸல்] அவர்கள் மரணிக்கவில்லை என்றும், மரணிக்கமாட்டார்கள் என்றும், உயிர்த்தெழுவார்கள் என்றும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரான கருத்தை கொன்டிருந்தார்கள்அபூபக்கர்[ரலி] தக்க ஆதாரங்களை எடுத்துக்காட்டி அவர்களின் தவறான நம்பிக்கையை புரியவைக்கும் வரை நபி[ஸல்] அவர்களின் மரணத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
என்று எழுதிவிட்டு இரு ஹதீஸ் எண்களை போட்டுள்ளார்கள். அந்த இரு ஹதீஸ்கள் கீழே;
  • இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்; நபி[ஸல்] அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரலி) வெளியில் வந்தார். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) மீண்டும் மறுக்கவே அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே, மக்கள் உமர்(ரலி) பக்கமிருந்து அபூ பக்ர்(ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூ பக்ர்(ரலி) 'உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். மேலும், அல்லாஹ் கூறினான்: முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்: அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்" (திருக்குர்ஆன் 3:144) என்றார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போன்றும் அபூ பக்ர்(ரலி) மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்ததைப் போன்றும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள். [புஹாரி எண் 1242 ]
  • அபூ பக்ர்(ரலி) மக்களுக்கு நேர்வழியைக் காண்பித்தார்கள். அவர்களின் உரையின் காரணத்தால், 'முஹம்மத்(ஸல்) அவர்கள் ஓர் இறைத்தூதரேயன்றி வேறில்லை. அவர்களுக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். அவர் இறந்துவிட்டாலோ, (போரில்) கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக்கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கிறானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதிபலனை மிக விரைவில் வழங்குவான்' என்றும் (திருக்குர்ஆன் 03: 144-ம்) வசனத்தை ஓதியபடி மக்கள் வெளியே சென்றார்கள்.[நூல்;புஹாரி எண் 3670 ]

அவர்கள் எடுத்துவைத்த இந்த இரு ஹதீஸ்களிலும் நபி[ஸல்] அவர்கள் மரணமடையவில்லை என்ற மனநிலையில் சகாபாக்கள் இருந்ததையும் அபூபக்கர் [ரலி] அவர்கள் தெளிவுரைக்கு பின் நபி[ஸல்] அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டார்கள் என்பதை விளங்கமுடிகிறது. இந்த இரு செய்திகளிலும் நபி[ஸல்] அவர்கள் மரணிக்கமாட்டார்கள் என்று எந்த சகாபியாவது சொன்னதாக குறிப்பு உள்ளதா..? என்றால் இல்லை. அதே நேரத்தில் நபி[ஸல்] அவர்கள் மரணிக்கவில்லை என்று உமர்[ரலி] அவர்கள் சொன்ன செய்தி வேறு எண்ணில் பதிவாகியுள்ளது;

  • நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார் (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) (பனூ ஹர்ஸ் குலத்தாரின் இல்லங்கள் அமைந்துள்ள) 'ஸுன்ஹ்' என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள். - அறிவிப்பாளர் இஸ்மாயீல்(ரஹ்), 'அதாவது ஆலியாவில்" என்று கூறினார். அப்போது உமர்(ரலி) எழுந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான் - நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்றே - தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி - ஸல்- அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, 'தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதும் ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்யமாட்டார்கள்" என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள். (வெளியே வந்தபின் உமர் அவர்களை நோக்கி,) '(நபி - ஸல் - அவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) பேசியபோது உமர்(ரலி) அமர்ந்தார்கள்.[புஹாரிஎண் 3667 ]

இந்த செய்தியை கவனமாக படியுங்கள். உமர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்கள் இறக்கவில்லை [அதாவது] மரணிக்கவில்லை என்று சொன்னார்களே யன்றி, மரணிக்கமாட்டார்கள் என்று சொல்லவில்லை. மரணிக்கவில்லை என்பதற்கும் மரணிக்க மாட்டார்கள் என்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு.

மரணிக்கவில்லை; இப்போது மரணிக்கவில்லை ஆனால் மரணிப்பார் என்ற அர்த்தத்தை தரும். உதாரணமாக ஈஸா[அலை] அவர்கள் மரணிக்கவில்லை என்று நாம் சொல்கிறோம். அதற்காக அவர்கள் மரணிக்கவே மாட்டார்கள் என்று அர்த்தமா? என்றால் இல்லை . இப்போது அவர்கள் மரணிக்கவில்லை. ஆனால் மரணிப்பார்கள் என்று விளங்கிக்கொள்கிறோம். இந்த அர்த்தத்தில்தான் உமர்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்கள் மரணிக்கவில்லை என்று சொன்னார்கள் என்று விளங்கவேண்டும்.

மரணிக்கமாட்டார்கள்; இது எப்போதுமே மரணம் இல்லை என்ற அர்த்தத்தை தரும். எனவே உமர்[ரலி] அவர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தாதபோது, மரணிக்க மாட்டார்கள் என்று உமர்[ரலி] அவர்கள் சொன்னார்கள் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரான கருத்தை விதைத்தார்கள் என்று கூறுவது அப்பட்டமான அவதூரல்லவா?

மேலும், அந்த 72 . கூட்டம் யார்? என்ற உரையில் மேற்கண்ட சம்பவத்தை பற்றி சொல்லும்போது இப்படி அந்த அறிஞர் வர்ணிக்கிறார்;

கெட்ட கொள்கைகள் இஸ்லாமிய போர்வையை போர்த்திக்கொண்டு உலகுக்கு வந்தது அத்தகைய கொள்கைகளை ஆய்வு செய்யப்போகிறோம் என்ற பீடிகையோடு, நபி[ஸல்] அவர்கள் மரணித்த உடன் ஏற்ப்பட்ட முதல் கொள்கை குழப்பம் நபி[ஸல்] அவர்களின் மரணித்த அடுத்த வினாடியே ஏற்பட்டது. உமர் சொல்றார்; அல்லாஹ் மேல ஆணையா சொல்றேன் ரசூலுல்லாஹ் மவ்த்தாபோகல. தொலைச்சிருவேன்! இப்ப நான்தான் லீடரு; என்று உமர் லீட் பண்றாரு.

அன்பானவர்களே! உமர்[ரலி] அவர்கள் சொன்ன வாசகம் மேற்கண்ட ஹதீஸில் நாம் உங்களுக்கு விளக்கியுள்ளோம். இந்த அறிஞரின் கூற்று பிரகாரம் இஸ்லாமிய வரலாற்றில் முதல் முதலாக வழிகெட்ட கொள்கையை சொன்னவர் உமர்[ரலி] என்ற கருத்தை மறைமுகமாக முன்வைக்கிறார். சரி! ஒருவரை கொள்கை குழப்பம் ஏற்படுத்தியவர் என்று எப்போது சொல்லமுடியும் என்றால், ஒருவர் அறிந்தோ-அறியாமலோ ஒரு தவறான கருத்தை சொல்கிறார். அவரது கருத்து தவறு என்று குர்ஆண்-ஹதீஸ் ஆதாரங்கள் காட்டப்பட்டபின்பும், இல்லை நான் சொன்னதுதான் சரி என்று தனது கருத்திலேயே நிலைத்திருந்தால்தான் அவரை கொள்கை குழப்பம் ஏற்ப்படுத்தியவர் என்று சொல்லமுடியும். ஒருவாதத்திற்கு இந்த அறிஞர் சொன்ன வார்த்தையை தான் உமர்[ரலி] சொன்னார்கள் என்று வைத்துக்கொண்டாலும், அபூபக்கர்[ரலி] அவர்கள் குர்ஆண் ஆதாரத்தை முன்வைத்தபோது ஏற்றுக்கொண்டு தரையில் சரிந்தார்களே! பிறகு எப்படி கொள்கை குழப்பம் ஏற்ப்படுத்தியவராவார்..?

சரி! நபி[ஸல்] அவர்கள் மரணிக்கவில்லை என்று உமர்[ரலி] அவர்கள் கூறியதற்கு காரணம் இரண்டு. ஒன்று; உமர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்கள் ஒரு விஷயத்தை சொன்னால் அதை அப்படியே ஏற்பவர்கள். நம்மைப்போல் நபி[ஸல்] சொன்ன விஷயம் 'அறிவுக்கு பொருந்துகிறதா' குர்ஆணோடு மோதுகிறதா' என்றெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருப்பவர் அல்ல. மேலும், நபி[ஸல்] அவர்களின் நிழலாக இருந்தவர். நபி[ஸல்] அவர்கள் தன் திரு வாயால், நானும் அபூபக்கரும்-உமரும் இங்கே போனோம், நானும் அபூபக்கரும்-உமரும் இதை செய்தோம், நானும் அபூபக்கரும்-உமரும் இப்படி சொன்னோம் என்று சொல்லலும் அளவுக்கு நபி[ஸல்] அவர்களின் இஸ்லாமிய பயணத்தில் தளபதியாக திகழ்ந்தவர் உமர்[ரலி] அவர்கள். தன் உயிரும் மேலான தோழர் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் சொன்ன வாசகம்தான் நபி[ஸல்] அவர்கள் மரணிக்கவில்லை என்பது.[இதை அந்த அறிஞரும் வேறு வார்த்தையில் கூறியுள்ளார்].

காரணம் இரண்டு;ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் பார்வை (அவர்களின் மரண வேளையில்) நிலை குத்தி நின்றது. பிறகு அவர்கள், 'மிக உயர்ந்த நண்பர்களிடம் (செல்கிறேன்)" என்று (மூன்று முறை) கூறினார்கள். தொடர்ந்து அறிவிப்பாளர் காசிம்(ரஹ்) (நபி-ஸல் அவர்களின் இறப்பு சம்பவம் தொடர்பான) இந்த ஹதீஸை முழுமையாக எடுத்துரைத்தார்கள். ஆயிஷா(ரலி) கூறினார். (அபூ பக்ர், உமர் ஆகிய) அவ்விருவரின் உரைகளில் எந்தவோர் உரையைக் கொண்டும் அல்லாஹ் நன்மை புரியாமல் இல்லை. உமர் அவர்கள் (தவறாக நடந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவீர்கள் என்று) மக்களை எச்சரித்தார்கள். ஏனெனில், மக்களிடையே நயவஞ்சககுணமுடையவர்களும் (அப்போது) இருந்தனர். (உமர் அவர்களின்) அந்த (அச்ச மூட்டும்) உரையின் வாயிலாக அல்லாஹ் அ(ந்த நயவஞ்சக குணமுடைய)வர்களை (சத்தியத்தின் பக்கம்) திருப்பினான். [புஹாரி எண் 3669 ]

உஹத் களத்தில் நபி[ஸல்] உயிரோடு இருக்கும்போதே மரணித்து விட்டதாக நயவஞ்சகர்கள் ஃபித்னா செய்து முஸ்லிம்கள் மத்தியில் பலவீனத்தை உண்டாக்க முயற்சித்தது போன்று, நபி[ஸல்] மரணப்படுக்கையில் இருக்கும் இந்த நேரத்திலும் செய்யலாம் என்பதால் உமர்[ரலி] அவர்கள் எச்சரிக்கை செய்ததாக அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் மேற்கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது. ஆக, நபி[ஸல்] அவர்களின் மரணவேளையில் உமர்[ரலி] அவர்கள் விடுத்த எச்சரிக்கை மூலம் அல்லாஹ் நன்மையை நாடியதாக அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த 'அதிமேதாவியோ' இல்லை உமர் கொள்கை குழப்பம் உண்டாக்கினார் என்கிறார். அல்லாஹ் அறிந்தவன்.

அடுத்து, அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது 72 .கூட்டம் யார் என்ற உரையில் புதிய அவதூறை சுமத்துகிறார். அதாவது பெண்களில் மிக அறிவுடைய ஆயிஷாநாயகி[அவர் பாஷையில்] நபி[ஸல்] அவர்கள் மரணித்தவுடன்,

'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான் - நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்றே - தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி - ஸல்- அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்" என்று கூறினார்கள் என்றும் அதற்கான ஹதீஸ் புஹாரியில் உள்ளது என்றும் பேசினார். நாமும் புஹாரியில் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் அறிவிக்கக்கூடிய, அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் சம்மந்தப்பட்ட சுமார் 957 .ஹதீஸ்களை பார்த்தோம். எந்த ஒன்றிலும் அன்னையவர்கள் இந்த அறிஞர் சொன்னது போன்று சொல்லவில்லை. மாறாக உமர் ரலி அவர்கள் சொன்னதாக அன்னையவர்கள் அறிவிக்கும் செய்திதான் 3667 வது ஹதீஸாக இடம்பெற்றுள்ளது.

ஆக அன்பானவர்களே! விருப்பையும்-வெறுப்பையும் தனியாக வைத்துவிட்டு, நீங்கள் இந்த ஆக்கத்தை படித்தால் உமர்[ரலி] அவர்கள் மீதும், அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீதும் இந்த அதிமேதாவி அபாண்டமான அவதூறை சுமத்தியுள்ளார் என்பது ஊர்ஜிதமாகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

இறை வசனத்தை செவியேற்றார்- அதற்கு முழுமையாக கட்டுப்பட்டார்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;
'உயைனா இப்னு ஹிஸ்ன் இப்னி ஹுதைஃபா'(ரலி) (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம் தங்கினார். உமர்(ரலி) தம் அருகில் அமர்த்திக்கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு இப்னு கைஸ் இருந்தார். முதியவர்களோ இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர்(ரலி) அவர்களின் அவையினராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர். எனவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், 'என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடம் செல்வாக்கு உள்ளது. எனவே, அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தா' என்று கூறினார். அதற்கு அவர், 'உமர்(ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்' என்று கூறினார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர்(ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள். உயைனா அவர்கள் உமர்(ரலி) அவர்களிடம் சென்றபோது, 'கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை' என்று கூறினார். உமர்(ரலி) கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள். உடனே ஹுர்ரு அவர்கள் உமர்(ரலி) அவர்களை நோக்கி, 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! உயர்ந்தோனான அல்லாஹ் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு, '(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களைவிட்டு விலகியிருப்பீராக!' (திருக்குர்ஆன் 07:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில் ஒருவர்' என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர்(ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர்(ரலி) அதை மீறவில்லை. (பொதுவாக) உமர்(ரலி) இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக்கூடியவர்களாய் இருந்தார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 4642

இந்த செய்தியை நாம் படித்துப் பார்க்கும்போது, நபி[ஸல்] அவர்களின் உற்ற தோழரும், சொர்க்கம் உறுதி செய்யப்பட்டவருமான உமர்[ரலி] அவர்கள், தான் ஒரு அதிகாரம் பொருந்திய ஆட்சியாளராக இருந்ததும், தனக்கு எதிராக குற்றம் சுமத்தியவர் மீது ஆரம்பத்தில் கோபம் கொண்டாலும், அவர்கள் முன் இறைவசனம் ஒதிக்கட்டப்பட்டவுடன் அதற்கு முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக அமைதியடைகிறார்கள் எனில், அதுதான் சகாபாக்கள்! இன்று மதரசாவில் சில ஆண்டுகள் பெஞ்சை தேய்த்துவிட்டு பட்டம் என்ற பெயரில் ஒரு பேப்பரை வாங்கிவிட்டால், நான் தன் உலகமகா அறிவாளி என்றும், நான் சொல்வது மட்டுமே இஸ்லாம் என்றும், மற்ற அனைவரும் அவர்கள் அறிஞர்களாக இருந்தாலும் அறிவிலிகள் என்று வசைபாடுவதோடு, திருக்குர்ஆண் வசனத்தை மேற்கோள் காட்டினாலும் அதை தனது சொந்த வியாக்கியானங்களின் மூலம் மழுப்பும் சில அதிமேதாவிகள், அல்லாஹ்வின் வார்த்தைக்கு முன் தான் ஜனாதிபதியே ஆனாலும் சாமான்யன் என்று சரணடைந்த உமர்[ரலி] அவர்களிடம் பாடம் படிக்கவேண்டும்.
மேலும், சமான்யராண நம்மில் சிலரும் , அறிந்தும் அறியாமலும் அல்லாஹ்வின் வார்த்தையான அல்குர்ஆணுக்கு மாற்றமான வரதட்சனை-மது-மாது-புகை-சினிமா-பொய்-அவதூறு- இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவதை பார்க்கிறோம். ஒரு முஸ்லிமின் கடமை, அல்லாஹ்வும்-அவனது தூதரும் கட்டளையிட்டுவிட்டால் அதற்கு பரிபூரணமாக கட்டுப்படுவது. அதில் நமக்கு உமர்[ரலி] அவர்களிடத்தில் அருமையான படிப்பினை உள்ளது.

வெள்ளி, 2 அக்டோபர், 2009

சஹாபாக்களை விட நாம் சிறப்பாக விளங்கமுடியுமா?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சஹாபாக்களை விட நாம் இன்று சிறப்பாக மார்க்கத்தை விளங்கிக்கொள்ளமுடியும். காரணம், சஹாபாக்களின் இறுதிக் காலத்தில் தான் நூல் வடிவில் திருக்குர்ஆன் தாயரிக்கப்பட்டது. அதுவும் எல்லா சகாபியிடமும் குர்ஆன் பிரதிகள் இருக்கவில்லை. ஆனால் இன்று நம்மிடையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரதி குர்ஆன் வைத்துள்ளோம். அதுபோல் முழுமையாக எல்லா ஹதீஸ்களையும் அறிந்த ஒரு சகாபியும் இருக்கவில்லை. அவர்கள் காலத்தில் ஹதீஸ்கள் தொகுத்து நூல் வடிவில் இருக்கவில்லை. எனவே அவர்கள் தங்கள் அளவில் தெரிந்த விஷயங்கள் அடிப்படையில் மட்டும் விளங்கமுடியும். ஆனால் இன்று நாம் மார்க்க விஷயங்கள் முழுமையாக கிடைக்கப்பெற்ற காலத்தில் வாழ்கிறோம். எனவே எந்த ஒரு கடுமையான பிரச்சினையாயினும் ஒரு அரைமணிநேரம் ஒதுக்கினால் மார்க்கத்தின் சரியான தீர்வை அடையமுடியும். எனவே நம்மால்தான் சகாபாக்களை விட மார்க்கத்தை சிறப்பாக விளங்கமுடியும் என்ற கருத்து பரவலாக சிலரால் விதைக்கப்படுகிறது. ஒரு அடிப்படையை விளங்கிக்கொள்ளவேண்டும். சகாபாக்கள் ஒவ்வொருவரிடமும் குர்ஆணின் பிரதிகள் இல்லாவிட்டாலும், அவர்களின் உள்ளத்தில் குர்ஆன் வாழ்ந்தது. அவர்கள் உள்ளத்தில் பதிந்தவற்றை அடிப்படையாக கொண்டே இன்று பேப்பரிலும் பல்வேறு பரிணாமங்களிலும் பதிந்து பாதுகாத்து வருகிறோம். மேலும் ஹதீஸ்கள் முழுமையாக அறிந்த ஒரு சகாபியும் இல்லாவிட்டாலும் அவர்கள் எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் தமக்கு தெரியவில்லை என்றால் சக தோழர்களிடம், இதுகுறித்து நபி[ஸல்] அவர்கள் ஏதாவது சொல்லியுள்ளார்களா என்று கேட்டு அதன் அடிப்படையில் தங்களின் முடிவை எடுத்தார்கள். திருக்குர்ஆன் பிரதிகளை கையில் வைத்திராத, நபி [ஸல்] அவர்களின் அனைத்து பொன்மொழிகளையும் முழுமையாக மனனம் செய்திராத அந்த தோழர்கள் எத்துனை விஷயத்தில் மார்க்கத்திற்கு முரானாக தீர்ப்பளித்தார்கள்...?விரல்விட்டு எண்ணிவிடலாம்! ஆனால் அனைத்தையும் கரைத்து குடித்த நாம் கடந்த 25 ஆண்டுகளில் எத்துனை மஸாயில்களில் நேற்று ஒரு தீர்ப்பை சொல்லி அதை இன்று மாற்றிய பட்டியல் ஏராளம் உண்டே! மார்க்கம் சம்மந்தமான அனைத்தும் முழுமையாய் கிடைக்கப்பெறாத[?] சகாபாக்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் தவறான தீர்ப்பளித்தால் கூட அதை குறைகாண முடியாது. ஆனால் இன்று அனைத்தையும் விரல் நுனியில் வைத்துள்ளோம் என்று சொல்லக்கூடிய நம்மிடையே ஏன் குறுகிய காலத்தில் இவ்வளவு தடுமாற்றங்கள்..? மேலும் அரை மணிநேரம் ஒதுக்கினால் எந்த பிரச்சினையாயினும் மார்க்கத்தின் சரியான தீர்வை எட்டமுடியுமேன்று சொல்லும் நாம், அந்த அரைமணி நேரத்தில் ஒரு உமர்[ரலி]யோ, ஒரு அபூபக்கர்[ரலி]யோ, அபூஹுரைரா[ரலி]யோ சொன்னதைத்தானே தீர்வாக சொல்கிறோம். பின்பு எப்படி அவர்களுக்கு தெரியாதது நமக்கு தெரியும் என்று மார்தட்டமுடியும்..? மேலும் குர்ஆனில்-ஹதீஸ்களில் சொல்லப்படும் விஞ்ஞான கருத்துக்கள்சகாபாக்கள் காலத்தை விட இன்று நாம்தான் தெளிவாக புரிந்துகொள்ளும் காலத்தில் வாழ்கிறோம் என்று சொல்லப்படுகிறது. மார்க்கத்தில் கூறப்பட்ட விஞ்ஞானத்தை எந்த அளவுக்கு நாம் புரிந்துள்ளோம் என்பதை நாம் பின்னால் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த விஞ்ஞான கருத்துக்கள் சகாபாக்களுக்கு புரிந்ததோ இல்லையோ, நபி[ஸல்] அவர்கள் சொன்னவுடன் அப்படியே நம்பினார்களே! நம்மைப்போல், அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கிவருவானா..? அப்ப அர்ஷில் யார் இருப்பது என்று விஞ்ஞான கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கவில்லையே..? அடுத்து சகாபாக்களுக்கு விளங்காத விஞ்ஞானத்தை நாம் விளங்கிய லட்சனத்திற்கு ஒரு உதாரணம்;

விண்வெளி பயணம் மேற்கொள்ளலாம் என்று குர்ஆன் சொல்கிறது என்று கூறி அதற்கு ஆதாரமாக அர்ரஹ்மான் அத்தியாயத்தில் இடம் பெறும் மனித ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது. என்ற வசனத்தை சிலர் காட்டுவதுண்டு. ஆனால் இந்த வசனத்தை அடுத்து வரும் வசனத்தை பாருங்கள்;
உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள். (55:35)
முதல் வசனம் விண்வெளி பயணத்தை வலியுறுத்துவதாக இருந்தால் அடுத்த வசனம் உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள். என்று முரணாக வருவது ஏன்? முதலில் வாங்க என்று சொல்லிவிட்டு பின்பு நீங்கள் விண்வெளிக்கு வந்தால் நெருப்புஜுவாலைகள் வீசப்படும் என்று முரணாக இறைவன் கூறுவானா?எனவே இது விண்வெளி பயணம் சம்மந்தமானது அல்ல. மறுமை சம்மந்தமானது என்பதற்கு பின்வரும் அதே அத்தியாயத்தின் வசனங்கள் சான்று பகர்கிறது;

فَإِذَا انشَقَّتِ السَّمَاء فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ
எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும். (55:37)
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:38)
فَيَوْمَئِذٍ لَّا يُسْأَلُ عَن ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ
எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது. (55:39)
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:40)
يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ
குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள் (55:41)
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:42)
هَذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ
அன்று அவர்களிடம்; "இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்" (என்று கூறப்படும்). (55:43)
يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ
அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள். (55:44)
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:45 ]

இந்த வசனங்கள் கூறுவதென்ன..? மறுமையில் இறைவன் தண்டிக்க நாடும்போது அதிலிருந்து தப்பிக்க துணிவிருந்தால், மனித ஜின் வர்க்கமே வானம் பூமியின் எல்லைகளை கடந்து போய் பார். அப்போது உங்கள் மீது நரகத்தின் நெருப்பு ஜுவாலைகள் வீசப்படும் [எனவே தப்ப முடியாது]என்கிறான். ஆக மறுமை பற்றி சொல்லும் வசனங்களை விஞ்ஞானம் என்று நாம் விளங்கியதுதான் சகாபாக்களை மிஞ்சிய சிந்தனை போலும்.

அடுத்து சகாபாக்களை விட சகாபாக்களிடமிருந்து செவியுருபவர்கள் நன்கு பேணி பாதுகாப்பவர்களாக இருப்பார்கள் என்ற நபி[ஸல்] அவர்களின் வார்த்தையை காட்டி சகாபாக்களை விட நாம் சிந்தனையில் சிறந்தவர்கள் என்று காட்ட சிலர் முயற்ச்சிக்கிறார்கள். அந்த ஹதீஸ்;

இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (என் கட்டளைகளை)த் தெரிவித்து விடுங்கள். ஏனெனில், இச்செய்தியை (நேரடியாக)க் கேட்டவரை விட அவர் யாரிடம் தெரிவிக்கிறாரோ அவர்களில் சிலர் இதை நன்கு கர்ப்பவராயிருக்கலாம்.[புஹாரி]

இதில் நபி[ஸல்] அவர்கள் வந்தவர்கள் வராதவர்களுக்கு சொல்லிவிடுங்கள் என்று சொல்கிறார்கள். வந்தவர்கள் யார்? சகாபாக்கள்! வராதவர்கள் யார் அன்றைய காலத்தில் வாழ்ந்த சகாபாக்கள்! ஆக சொல்பவரும் ஸஹாபி, அவரிடமிருந்து செவியேர்ப்பவரும் சகாபிகள். நபி[ஸல்] அவர்களின் போதனையை நேரடியாக கேட்ட சகாபாக்களை விட, இவரிடமிருந்து செய்தியை செவியுறும் ஸஹாபி இந்த செய்தியை நன்கு விளங்குபராக காப்பவராக இருக்கலாம் என்றுதான் புரிந்து கொள்ள முடியுமேயன்றி, சகாபாக்கள் தலைமுறைக்கு பின் சுமார் 14 தலைமுறைக்கு பின் வந்த நம்மை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது என்று கூறுவது சரியா? மேலும் சகாபாக்கள் சிலர் சிலரை விட சிறப்பாக விளங்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஒரு சான்று;

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் உமர்(ரலி) பத்ருப் போரில் பங்கெடுத்த புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். எனவே, அவர்களில் சிலர், 'எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம்விட்டுவிட்டு) இந்த இளைஞரை மட்டும் எதற்காக அமரச் செய்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி), 'அவர் நீங்கள் அறிந்து வைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்'' என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள். அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள்; அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என் (தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன். (அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்களிடம்) உமர்(ரலி), 'இதா ஜாஅ நஸ்ருல்லாஹி.. (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணை வகை நீங்கள் பார்க்கும்போது உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து அவனுடைய தூய்மையை எடுத்துரையுங்கள்; மேலும், அவனிடம் பாவ மன்னிப்புக் கோருங்கள்)'' என்னும் (திருக்குர்ஆனின் 110-வது 'அந்நஸ்ர்') அத்தியாயத்தை, இறுதிவரை ஓதிக்காட்டி, 'இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்களில் சிலர், 'நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும்போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்'' என்று (விளக்கம்) கூறினர். சிலர், 'எங்களுக்குத் தெரியாது'' என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை. பிறகு உமர்(ரலி) என்னிடம், 'இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித் தான் கூறுகிறீர்களா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை'' என்றேன். அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நான், 'அது, அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி)விட்டதை அறிவிப்பதாகும். எனவே, 'அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து' என்பதில் உள்ள 'வெற்றி' என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றி தான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். எனவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனுடைய தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்' என்பதே இதன் கருத்தாகும்'' என்று சொன்னேன். உமர்(ரலி), 'நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகிறீர்களோ அதையே நானும் அறிகிறேன்'' என்று கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 4294 ]

உமர்[ரலி] அவர்கள் மேற்கோள் காட்டி விளக்கம் கேட்ட வசனத்திற்கு மற்ற சகாபாக்கள் எல்லாம் நாம்மை போன்று அந்த வசனத்தின் நேரடிப் பொருளை கூறிக்கொண்டிருக்க இப்னு அப்பாஸ்[ரலி] அவர்களோ அந்த வசனத்தின் உள் அர்த்தத்தை விளக்குகிறார்கள் எனில், சகாபாக்கள் சிலர் சிலரை விட விளக்கமுடையவர்களாக இருந்திருந்தார்கள். அந்த அடிப்படையில்தான் நபி[ஸல்] அவர்கள், வந்தவர்களிடமிருந்து செவியுறுபவர்கள் சிறந்த முறையில் பேணுபவர்களாக இருக்கலாம் என்றார்கள்.

எனவே என்னதான் நவீன வசதிகளை பெற்றாலும், மார்க்கத்தை முழுமையாக கரைத்துக்குடித்தாலும் அந்த சகாபாக்களுக்கு மேலாக நாம் சிறந்தவர்களாக ஆக முடியாது என்பதே உன்மை.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

வியாழன், 1 அக்டோபர், 2009

மாற்றுக்கருத்து சொல்லும்போதும், மற்றவரின் 'மாண்பு' காக்கும் தன்மை!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
மனிதர்களாகிய நமக்கு சிந்திக்கும் ஆற்றலை அல்லாஹ் வழங்கியுள்ளான். அந்த சிந்தனை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஒரு விஷயத்தில் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை. அது மார்க்க விஷயமாக இருந்தாலும் அல்லது உலக விஷயமாகவே இருந்தாலும் சரியே! அப்படியாயின் செய்யவேண்டியது என்ன? ஒரு விஷயத்தில் பல்வேறு கருத்துக்கள் எழுமாயின் அதில் எவர் சொல்லும் கருத்துக்கள் குர்ஆண்-ஹதீஸுக்கு உட்பட்டதாக இருக்கிறதோ அதை சொல்பவர் 'பட்டம் வாங்கி பறக்கவிடாத' சமான்யராகவே இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் நடைமுறையில் நடப்பதென்ன? ஒருவர் அல்லது ஒரு சாரார் மட்டுமே மார்க்க மேதைகள் என்றும், அவர்கள் மட்டுமே ஆய்வாளர்கள் என்றும், அவர்கள் சொல்வது மட்டுமே சரியானதாக இருக்கும் என்றும் எழுதப்படாத ஒரு சட்டம் தமிழகத்தில் சில ஆண்டுகளாகவே வேரூன்றி உள்ளது. அந்த ஒருவர் அல்லது ஒரு சாரார் சொல்லும் கருத்துக்களுக்கு மாற்றமாக யாரேனும் கருத்துசொன்னால் அவ்வாறு சொல்பவர்களை கருத்து ரீதியாக, ஆதாரங்கள் ரீதியாக எதிர்கொள்ளாமல் தரம்தாழ்ந்து, அவன்-இவன் என்றும்-பொய்யன் ஜமாஅத் என்றும்-அடுத்தவர் தின்று வாந்தி எடுத்ததை விழுங்கி மறு வாந்தி எடுத்தவன் என்றும்-கோமாளி-பைத்தியம் என்றும்-சாக்கடைப் பன்றிகள் என்றும்-அறிவிலி என்றும்-தடம் புரண்டவர்கள் என்றும் இன்னும் எண்ணற்ற வார்த்தைகளால் விமர்சிப்பதை பார்க்கிறோம். அதோடு தங்களின் கருத்துக்கு மாற்று கருத்தை சொன்ன அறிஞர்களின் கருத்தை வெளியிட்டமைக்காக இஸ்லாம்கல்வி.காம் என்ற இஸ்லாமிய தளத்தை பலவேஷம்.காம் என்றும், குப்பை.காம் என்றும் வெளிப்படையாகவே விமர்சிப்பதையும் பார்க்கிறோம். மேற்குறிப்பிட்ட அந்த தளத்தில் [இவர்கள் பார்வையில்]சர்ச்சைக்குரிய சில விஷயங்கள் இருந்தாலும், எண்ணற்ற இஸ்லாமிய செய்திகள் அல் குர்ஆண்-ஹதீஸ் ஆதாரத்தோடு தொகுத்து வழங்கப்பட்டுள்ளதே! அந்த தளம் குப்பை.காம் என்றால் இந்த இஸ்லாமிய செய்திகளும் குப்பைதானா? இஸ்லாம் இவ்வாறுதான் மாற்றுக்கருத்து கொண்டவர்களை விமர்சிக்க சொல்கிறதா? இதோ நபிகளார்[ஸல்] அவர்களிடத்தில் ஒரு அழகிய முன்மாதிரி;

  • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல், (கவிஞர்) லபீத் இப்னு ரபீஆ சொன்ன ('அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே' எனும் சொல்தான். (கவிஞர்) உமய்யா இப்னு அபிஸ் ஸல்த் (தம் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்துவிட்டார்.
ஆதாரம்;புஹாரி எண் 6147

பொய்யையே மூலதனமாக கொண்ட கவிஞனின் கூற்றில் உள்ள ஒரே ஒரு உண்மையை கூட நபி[ஸல்] அங்கீகரித்துள்ளார்கள் என்றால், தமது கருத்துக்கு மாற்றமான கருத்துகள் இடம் பெற்றமைக்காக ஒரு தளத்தையே குப்பை என்று விமர்சிப்பது சரியா? மேலும் நபி[ஸல்] அவர்களின் அடியொற்றி வாழ்ந்த அருமை சஹாபாக்கள் மாற்றுக்கருத்துடையவர்களுக்கு எப்படி அழகான முறையில் பதிலளித்துள்ளார்கள் பாருங்கள்;

உமர்(ரலி) அவர்களிடம் மரணக் காயமுற்றிருந்தபோது 'சகோதரனே! நண்பனே!' எனக் கூறி அழுதவராக ஸுஹைப்(ரலி) (வீட்டினுள்) நுழைந்தார். அப்போது உமர்(ரலி) 'ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்களல்லவா?' என்றார். உமர்(ரலி) இறந்தபோது (அவர்) இறப்பதற்கு முன் கூறிய செய்தியை ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'அல்லாஹ் உமருக்குக் கிருபை செய்வானாக! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குடும்பத்தினர் அழுவதன் காரணமாக மூமினை அல்லாஹ் வேதனை செய்வான்' எனக் கூறவில்லை: மாறாக 'குடும்பத்தினர் சப்தமாக அழுவதன் காரணத்தினால் காஃபிருக்கு வேதனை அதிகமாக்கப்படும்" என்றே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று கூறி, 'ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது" (திருக்குர்ஆன் 6:164) என்ற குர்ஆனின் வசனமே உங்களுக்கு (சான்றுரைக்கப்) போதுமே" என்றும் கூறினார்கள்.
ஹதீஸ் சுருக்கம், ஆதாரம்;புஹாரி எண் 1286

இந்த பொன்மொழியில் இரண்டு விஷயங்களை கவனிக்கவேண்டும். ஒன்று 'ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உமர்[ரலி] கூறுவதை அறிந்த அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் நம்மைப்போல், உமர் சொல்வது குர்ஆணுக்கு முரணானது இப்படி நபி[ஸல்] அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள். எனவே இந்த ஹதீஸ் 'ரிஜெக்டேடு' என்று சொல்லவில்லை. மாறாக நபி[ஸல்] அவர்கள் அப்படி சொல்லவில்லை. இப்படித்தான் சொன்னார்கள் என்று விளக்கமளிக்கிறார்கள்.

இரண்டு; உமர்[ரலி] அவர்கள் விளங்கியதற்கு மாற்றமாக விளக்கமளித்த அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள், உமர்[ரலி] அவர்களை கண்ணியப்படுத்தும் விதமாக 'அல்லாஹ் உமருக்குக் கிருபை செய்வானாக! என்று அழகான வார்த்தையை கொண்டு விளக்கமளிக்கிரார்களே! இதுதான் நபி[ஸல்] அவர்களின் பாடம் படித்த அந்த சத்திய சகாபாக்களுக்கும்- 'கேள்வி ஞானம்' மூலம் மார்க்கத்தை படித்த நமக்கும் உள்ள வேறுபாடு. இதிலே சஹாபாக்களை விட நாம் 'மேன்மக்கள்' என்ற சிந்தனை வேறு நமக்குள்ளே!
ஆகவே அன்பானவர்களே! கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம்- அதில் கண்ணியத்தை பேணுவோம். எல்லோரும் எல்லா நேரத்திலும் எல்லாவற்றையும் சரியாக சொல்லிவிடக்கூடியவர்களும் அல்ல. எல்லோரும் எல்லா நேரத்திலும் எல்லாவற்றையும் தவறாக சொல்லக்கூடியவர்களும் அல்ல. எனவே கருத்தை ஆளை வைத்து முடிவு செய்வதை விட ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு செய்வோம். அதுதான் நபிவழியும்-உயர்வான நபித்தோழர்களின் நடைமுறையுமாகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

புதன், 30 செப்டம்பர், 2009

அன்னலாரோ மரணப்படுக்கையிலே! அவர்தம் தோழர்களோ ஆட்சி பற்றிய ஆலோசனையிலே..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
இஸ்லாத்தை தூய வடிவில் சொல்லும்[?] இணைய தளத்தில் ஒரு கேள்வி;நீங்கள் சகாபாக்களை 'கிரிமினல்' என்று சொன்னதாகவும் மேலும், 'அண்ணன் எப்ப போவான்; திண்ணை எப்ப காலியாகும்' போன்றவாறு பேசியுள்ளீர்கள் என்று கூறுகிறார்களே உண்மையா?


பதில்; [இரண்டாம் பகுதி]
நபி[ஸல்] அவர்கள் மரணப்படுக்கையில் கிடக்கும்போது அவர்களின் குடும்பத்து நபித்தோழர்கள் ஆட்சிப்பொறுப்பை பற்றி ரகசிய ஆலோசனை நடத்தியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நபிகள் நாயகம் மரணப்படுக்கையில் கிடக்கும்போதே அதை நமக்காக கேட்போம் என்று பேசியது அருவருப்பாகவே தெரிகிறது.திண்ணை எப்போது காலியாகும் என்ற மனப்பான்மை இதில் தெள்ளத்தெளிவாக தெரியும்போது என் விமர்சனத்தில் தவறும் இல்லை. நபிகள் நாயகம் மரணப்படுக்கையில் கிடக்கும்போது இப்படி நடக்கலாமா என்று நபியை நேசிப்பவர்கள் எண்ணுவார்கள். நபியை விட்ட நபித்தோழரை நேசிப்பவர்கள் எப்படி ஸஹாபியை விமர்சிக்கலாம் என்பார்கள். எனது இந்த விமர்சனத்தை உரிய முறையில் கவனிக்காதவர்களுக்காக நான் எனக்கு சரி என்று பட்டதை மாற்றிக்கொள்ளமுடியாது. உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மார்க்க ஆதாரத்துடன் எனது விமர்சனம் தவறு என்று சுட்டிகாட்டினால் அது சரியாகவும் இருந்தால் நான் மாற்றிக்கொள்வேன்.

அன்பானவர்களே! அந்த 72 கூட்டம் யார் என்ற தலைப்பில் உரையாற்றிய இந்த அறிஞர் அதில், 'அண்ணன் எப்ப சாவான்; திண்ணை எப்ப காலியாகும்' என்று காத்துக்கிடந்தவர்களாக அன்சாரித்தோழர்களை அடையாளம் காட்டினார். இப்போது அதை மறந்தோ-அல்லது மறைத்தோ, 'திண்ணை எப்போது காலியாகும் என்ற மனநிலையில் நபி[ஸல்] அவர்களின் குடும்பத்து நபித்தோழர்கள் இருந்ததாக இப்போது கூறுகிறார். சரி! இதற்காகவது உரிய சான்றுகளை வைத்திருக்கலாம் அதையும் செய்யவில்லை. எனவே நபி[ஸல்] அவர்களின் குடும்பத்து நபித்தோழர்கள் அத்தகைய மனநிலையில் இருந்தார்களா என்று ஹதீஸ்களை பார்த்தால் இந்த அறிஞரின் கூற்றுக்கு மாற்றமான கருத்தே கிடைக்கிறது. இதோ;

முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார் அப்துல்லாஹ் இப்னு கஅப் இப்னு மாலிக் அல் அன்சாரி(ரலி) - (இவருடைய தந்தை) கஅப்பின் மாலிக்(ரலி) (தபூக் போரில் கலந்துகொள்ளத் தவறியதற்காக) பாவமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் ஒருவராயிருந்தார். அன்னார் எனக்கு அறிவித்தார்கள்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) எனக்குத் தெரிவித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களிடமிருந்து அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) (அவர்களை நலம் விசாரித்துவிட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள், 'அபுல் ஹசனே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?' என்று (கவலையுடன்) விசாரிக்க, அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் அருளால் நலமடைந்துவிட்டார்கள்'' என்று கூறினார்கள். உடனே அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி), அலீ(ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாள்களுக்குப் பிறகு, (பிறரின்) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆki விடப்போகிறீர்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரைவில் தம் இந்த நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே கருதுகிறேன். மரணத்தின்போது அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் களையை) அடையாணம் கண்டுகொள்பவன் நான். எனவே, எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். 'இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்?' என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடம் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்'' என்று கூறினார்கள். அதற்கு அலீ(ரலி), 'நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒருபோதும்) அதைத் தரமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கமாட்டேன்'' என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 4447

இந்த ஹதீஸை கவனமாக படியுங்கள்;
  • நபி[ஸல்] அவர்களின் மரணம் நிச்சயம் என்பதைகருதிய அப்பாஸ்[ரலி] அவர்கள், 'இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்?' என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடம் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்'' என்றுதான் கூறுகிறார்கள். சுருங்க சொன்னால் அடுத்த ஆட்சியாளர் யார் என்பதை கேட்டு தெரிந்து கொள்வோம் என்பதுதான் அப்பாஸ்[ரலி] அவர்களின் நிலைப்பாடு. அதைக்கூட அலீ[ரலி] மறுத்துவிடுகிறார்கள். ஆக இறுதி உபதேசம் என்ற அடிப்படையில் தகவலாக கேட்போம் என்று அப்பாஸ்[ரலி] அவர்கள் கருதியதை,

'நபிகள் நாயகம் மரணித்து விட்டால் ஆட்சிப்பொறுப்பை நம்மிடம் தரமாட்டார்கள்;நபிகள் நாயகம் மரணப்படுக்கையில் அதை நமக்காக கேட்போம் என்று நபி[ஸல்] அவர்கள் குடும்பத்து நபித்தோழர்கள் பேசினார்கள் என்பது அப்பட்டமான அவதூரல்லவா? அந்த உத்தமர்களை இன்றைய அரசியல்வாதிகள் போல் கருதிய காரணத்தால் வந்த வர்ணனையல்லவா? இதுதான் சகாபாக்களை கண்ணியப்படுத்தும் வழிமுறையோ..?

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

தொடர்புடைய இடுகை;http://sahaabaakkal.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%5B%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%5D

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

அம்ர் இப்னு அல்ஆஸ் அவர்களை 'கிரிமினல்' என்று சொன்னதில் தவறில்லை..?

இஸ்லாத்தை தூய வடிவில் சொல்லும்[?] இணைய தளத்தில் ஒரு கேள்வி;நீங்கள் சகாபாக்களை 'கிரிமினல்' என்று சொன்னதாகவும் மேலும், 'அண்ணன் எப்ப போவான்; திண்ணை iஎப்ப காலியாகும்' போன்றவாறு பேசியுள்ளீர்கள் என்று கூறுகிறார்களே உண்மையா?

பதில்; அந்த 72 கூட்டம் என்ற உரையை முழுமையாக கேளுங்கள். உண்மையை நீங்களே உணர்வீர்கள். அலீ[ரலி] அவர்களுக்கும்-முஆவியா[ரலி] அவர்களுக்கும் இடையே நடந்த யுத்தம் சமாதானத்தில் முடிந்தது. இருவர் சார்பிலும் தலா ஒருவர் நடுவராக நியமிக்கப்பட்டனர். அலீ[ரலி] அவர்களின் சார்பில் நடுவராக இருந்த அபூ மூஸா நேர்மையாக வெளிப்படையாக நடந்து கொண்டார். முஆவியா[ரலி] சார்பில் நடுவராக இருந்த அம்ர் இப்னு ஆஸ் அப்படி நடக்கவில்லை. நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல்,மோசடி ஆகியன மார்க்கத்தில் தடுக்கப்பட்டிருந்தும் அதை அவர் செய்தார். அபூ மூஸா அப்பாவியாக நடந்துகொண்டார். ஆனால் அம்ர் இப்னு ஆஸ் நம்ப வைத்து கழுத்தை அறுப்பது போல் நடந்துகொண்டார். கிரிமினலாக சிந்தித்தார் என்ற கருத்தில் நான் பேசினேன்.இவ்வாறு நடந்துகொண்ட நபரை கவனத்தில் கொண்டவர்கள் சகாபியை இப்படி விமர்சிக்கலாமா என்று கேட்கின்றனர். நடந்து கொண்ட செயலை கவனிப்பவர்கள் இந்த செயலை இந்த வார்த்தையால்[கிரிமினல்] வர்ணிப்பது சரிதான் என்று புரிந்து கொண்டனர். அம்ர் இப்னு ஆஸ் செய்தது போன்ற செயலை இன்றைக்கு ஒருவர் செய்தால் அதை எந்த வார்த்தையால் விமர்சிப்பார்கள்.? அவர் நடந்துகொண்டது போல் இப்போது ஒருவர் நடந்து கொண்டால் அது அனுமதிக்கப்பட்டது என்று கூறுவார்களா? என்னுடய பார்வையில் நான் செய்த விமர்சனத்தில் மார்க்க அடிப்படையில் எந்த தவறும் இல்லை.

அன்பானவர்களே! உயர்வான நபித்தோழர் அம்ரு அப்னு ஆஸ்[ரலி] அவர்களை 'கிரிமினல்' என்று சொன்னபோது, பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தபோது 'நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை' என்று இந்த அறிஞர் ஒரு மேடையில் விளக்கம் சொன்னார். அதையொட்டி 'கிரிமினல்' என்ற பேச்சு பற்றி விமர்சனம் வரும்போதெல்லாம் அந்த அறிஞருக்கு ஆதரவாக ததஜ சகோதர்களில் சிலர் 'கிரிமினல்' பற்றி தமிழ் அகராதி பாடம் நடத்தி விமர்சனங்களை முனை மழுங்க செய்தார்கள். ஆனால் இப்போது சம்மந்தப்பட்டவர் நான் அம்ர் இப்னு ஆஸ் அவர்களை 'கிரிமினல்' என்று சொன்னதில் தவறில்லை என்று சொன்னதோடு, நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல், மோசடி, கழுத்தறுப்பு வேலையையும் அம்ரு இப்னு ஆஸ் செய்தார் என்று அந்த சகாபிக்கு புகழ் மாலை[?] சூட்டியுள்ளார். இதுகாறும் ' அந்த அர்த்தமில்லை, இந்த அர்த்தமில்லை என்று 'அகராதியாக' சப்பை கட்டு கட்டியவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்..? மேலும், அம்ரு இப்னு ஆஸ்[ரலி] அவர்கள் செய்த காரியத்தை இன்று ஒருவர் செய்தால் என்ன நிலை..? என்று அந்த அறிஞர் கேட்கிறார். அப்படியாயின் சகாபாக்களும் நாமும் ஒன்று என்ற பிளாட்பாரம் உருவாக்கப்பட்டு விட்டதோ..?

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டியபின் தடம்புரளச்செய்து விடாதே!
திண்ணை எப்ப காலியாகும்..? பதிலும்-பார்வையும் இன்ஷா அல்லாஹ் நாளை.

திங்கள், 28 செப்டம்பர், 2009

இறைத்தூதரின் உடையே இறுதி உடையாக விருப்பம் கொண்டவர்..!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அபூ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்.
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) 'ஒரு பெண்மணி (நபி(ஸல்) அவர்களிடம்) புர்தாவைக் கொண்டு வந்தார்!' எனக் கூறிவிட்டு, 'புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். 'ஆம்! அது ஓரப்பகுதி நெய்யப்பட்ட ஒரு சால்வை!" என்று கூறப்பட்டது. தொடர்ந்து ஸஹ்ல்(ரலி) அறிவித்தார். அப்பெண்மணி, 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு அணிவிப்பதற்காக இதை நான் என் கையால் நெய்தேன்!" என்றார். நபி(ஸல்) அவர்கள் தமக்கு அது தேவைப்பட்டதால் அதைப் பெற்றார்கள். (அவர்கள் உள்ளே சென்றுவிட்டு) எங்களிடம் திரும்பி வந்தபோது அதை வேட்டியாக அணிந்திருந்தார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருமனிதர். 'இறைத்தூதர் அவர்களே! இதை நான் அணிவதற்காக எனக்குத் தாருங்கள்!" என்றார். நபி(ஸல்) அவர்கள் 'சரி தருகிறேன்!" என்று சொல்லிவிட்டு, சபையில் அமர்ந்திருந்தார்கள். பிறகு (உள்ளே சென்றுவிட்டுத்) திரும்பி வந்து அதைச் சுருட்டி, (அதைத் தமக்குத் தரும்படி) கேட்ட மனிதருக்கு அதை அனுப்பி வைத்துவிட்டார்கள். அப்போது அவரிடம் மக்கள், 'நீர் செய்தது நன்றன்று; கேட்பவரை வெறுங்கையாக திருப்பியனுப்ப மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே அவர்களிடம் அதைக் கேட்டு விட்டீரே!' எனக் கூறினார். அதற்கு அம் மனிதர், 'நான் மரணிக்கும் நாளில் அது எனக்குக் கஃபனாக ஆக வேண்டும் என்பதற்காகவே அதைக் கேட்டேன்!" என்றார். அது அவ்வாறே, அவரின் கஃபனாக ஆனது!
ஆதாரம்;புஹாரி எண் 2093

இந்த பொன்மொழியில், நபி[ஸல்] அவர்கள் அணிந்த ஆடையை கேட்டு வாங்கிய ஸஹாபி, அதை தான் அணிந்துகொள்வதற்காக வாங்கவில்லை. மாறாக தனது இறுதி ஆடையாக [கஃபனாக] இறைத்தூதர் அணிந்த ஆடை இருக்கவேண்டும் என்று விரும்பியே வாங்கியதாக கூறுகிறார்கள் என்றால், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மீது இந்த தோழர்கள் கொண்ட அன்பிற்கு எல்லையும் உண்டோ..?

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

இறைத்தூதரின் கட்டளைக்கு கட்டுப்பட்டார்; இணைவைப்பாளர்களின் கட்டுடைத்தார்..!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார்கள்;
ஹுதைபிய்யா நிகழ்ச்சியின்போது நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களுடன் மூன்று நிபந்தனைகளின் பேரில் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். அவையாவன:
1. நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களிடையேயிருந்து தம்மிடம் (மதீனாவுக்கு) வருபவரை (அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட) அவர்களிடமே திருப்பியனுப்பி விட வேண்டும். தங்களிடம் (மக்காவிற்கு) வரும் முஸ்லிம்களை இணைவைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் திருப்பியனுப்ப மாட்டார்கள்.
2. நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அடுத்த ஆண்டு (உம்ரா செய்ய) மக்காவினுள் நுழைந்து மூன்று நாள்கள் தங்கலாம்.
3. (ஆனால்,) வாள், வில் போன்ற ஆயுதங்களை உறையிலிட்டுக் கொண்டே உள்ளே நுழைய வேண்டும்.
இந்த சமாதான ஒப்பந்தம் பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது அபூ ஐந்தல்(ரலி), தம் (கால்) சங்கிலிகளுடன் தத்தித் தத்தி (நடந்து) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களிடமே அவர்களைத் திருப்பியனுப்பிவிட்டார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 2700

பிறகு, நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்குத் திரும்பி வந்தார்கள். அப்போது குறைஷிகளில் ஒருவரான அபூ பஸீர் என்பவர் முஸ்லிமாக இருக்கும் நிலையில் (மதீனாவுக்கு வருகை தந்தார். உடனே, அவரைத் தேடி(ப் பிடிக்க) குறைஷிகள் இரண்டு பேரை அனுப்பி வைத்தனர். அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம் வந்து), 'நீங்கள் எங்களுக்குக் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுங்கள்" என்று கேட்டனர். உடனே, அவரை அந்த இருவரிடமும் நபி(ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அவர்கள் இருவரும் அபூ பஸீர் அவர்களை அழைத்துக் கொண்டு துல்ஹுலைஃபாவை அடைந்தனர். அவர்கள், தம் பேரீச்சம் பழங்களைத் தின்றுகொண்டே (ஒரு மரத்தடியில்) தங்கினார்கள். அபூ பஸீர்(ரலி) அவ்விரு நபர்களில் ஒருவரிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னானே! உன்னுடைய இந்த வாளை நான் மிக நல்லதாகக் காண்கிறேன்" என்றார். உடனே மற்றொருவர் வாளை உருவி, 'ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! இது மிக நல்ல வாள்தான். நான் இதைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன், மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்" என்றார். அபூ பஸீர் அவர்கள், 'எனக்கு(அதை)க் காட்டு. அதை நான் பார்க்கிறேன்" என்று கேட்டு அவரைத் தன் வசத்தில் கொண்டு வந்து (அந்த வாளால்) குத்திக் கொன்றுவிட்டார். மற்றொருவர் விரண்டோடி மதீனா வரை சென்றார்; ஓடிக் கொண்டே பள்ளிவாசலுக்குள் புகுந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரைக் கண்டபோது, 'இவர் ஏதோ பீதியேற்படுத்தும் விஷயத்தைக் கண்டு விட்டிருக்கிறார்" என்று கூறினார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று நின்றபோது, 'அல்லாஹ்வின் மீதாணையாக! என் சகோதரர் கொல்லப்பட்டுவிட்டார். (நீங்கள் அபூ பஸீரைத் தடுக்காவிட்டால்) நானும் கொல்லப்பட்டு விடுவேன்" என்று கூறினார். உடனே அபூ பஸீர் அவர்கள் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் தங்கள் பொறுப்பை நிறைவேற்றிவிட்டான். தாங்கள் என்னை அவர்களிடம் திருப்பியனுப்பி விட்டீர்கள். பிறகு அல்லாஹ், என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றிவிட்டான்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இவரின் தாய்க்குக் கேடுண்டாகட்டும். உதவுபவர் எவராவது இவருக்குக் கிடைத்தால் இவர் போர்த் தீயை மறுபடியும் மூட்டி விடுவார்" என்று கூறினார்கள். இதைச் செவியுற்றவுடன் அபூ பஸீர் அவர்கள், நபி(ஸல்) அவர்கள் தம்மை (மீண்டும்) குறைஷிகளிடம் திருப்பியனுப்பி விடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து தப்பியோடி கடலோரத்திற்குச் சென்றார்கள். சுஹைலின் மகன் அபூ ஜந்தல்(ரலி) அவர்களும் குறைஷிகளிடமிருந்து தப்பியோடி அபூ பஸீர் அவர்களுடன் சேர்ந்தார்கள். பிறகு, குறைஷிகளில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தப்பிச் சென்று) அபூ பஸீர் அவர்களுடன் சேர்ந்து கொள்ளத் தொடங்கினார். இறுதியில், (சிறிது சிறிதாக இப்படி இஸ்லாத்தை ஏற்றவர்கள் மக்காவிலிருந்து தப்பியோடி வந்து) ஒரு குழுவினராக ஒன்று திரண்டுவிட்டனர். அல்லாஹ்வின் மீதாணையாக! ஷாம் நாட்டை நோக்கி குறைஷிகளின் ஒரு (வியாபாரப்) பயணக் குழு புறப்பட்டிருப்பதாகக் கேள்விப்படும் போதெல்லாம் அதை அவர்கள் இடைமறித்து அவர்களைக் கொன்று அவர்களின் செல்வங்களை (வியாபாரப் பொருட்களை)ப பறித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். எனவே, குறைஷிகள் (அபூ பஸீரும் அவரின் சகாக்களும் தங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க வேண்டுமென்று) இருவருக்கும் ஆளனுப்பி உத்தரவிடும்படி அல்லாஹ்வின் பெயராலும் உறவு முறையின் பெயராலும் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுத் தூதனுப்பினார்கள். மேலும், 'குறைஷிகளில், முஸ்லிமாக நபி(ஸல்) அவர்களிடம் வருகிறவர் அச்சமின்றி இருக்கலாம் (அவரை எங்களிடம் திருப்பியனுப்பி வேண்டாம்)" என்று கூறிவிட்டனர். அப்போதுதான் அல்லாஹ், 'அவனே மக்காவின் பள்ளத்தாக்கில் அவர்களின் கைகள் உங்களுக்கெதிராக உயர்வதையும் தடுத்துவிட்டான்; அப்போது அவர்களின் மீது உங்களுக்கு வெற்றியையும் கொடுத்தான். மேலும், நீங்கள் செய்து கொண்டிருந்த யாவற்றையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான்... இறை மறுப்பாளர்கள், தங்கள் உள்ளங்களில் வைராக்கியத்தை (அஞ்ஞான கால மூடச் சிந்தனையை) ஏற்படுத்தியபோது அல்லாஹ், தன் தூதர் மீதும் நம்பிக்கையாளர்களின் மீதும் நிம்மதியை இறக்கியருளினான்.
[ஹதீஸ் சுருக்கம்,புஹாரி;எண் 2731 ]

மக்காவில் முஸ்லிம்களாக ஆகி பல்வேறு தடைகளை தாண்டி அல்லாஹ்வின் தூதரை நாடி அடைக்கலம் தேடி ஹுதைபிய்யா நாளில் வந்த அபூ ஜந்தல்[ரலி] அவர்களையும், மதீனா வரை வந்த அபூ பஷீர்[ரலி] அவர்களையும், ஹுதைபியா ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள காரணத்தால் ஒப்பந்தத்தை பேணவேண்டும் என்பதால் நபி[ஸல்] அவர்கள் திருப்பி அனுப்புகிறார்கள். இஸ்லாத்தை ஏற்ற காரணத்தால் பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இவ்விருவரும் இறைத்தூதர் அவர்கள் ஒப்பந்தத்தை காரணம் காட்டி அபயமளிக்க மறுத்தபோதும், இறைத்தூதர் மீது சிறிதும் அதிருப்தி அடையாமல் அவர்களின் கட்டளைப்படி இணைவைப்பாளர்களுடன் திரும்பிச்சென்ற இவ்விரு சகாபிகளிடமும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கட்டளையிட்டு விட்டால் அது தனக்கு பாதகமாகவே இருந்தாலும் கட்டுப்படவேண்டும் என்ற படிப்பினை நமக்கு உள்ளது. ஆனால் இன்றைக்கு என்ன நிலை..? இறைத்தூதரின் பொன்மொழிகள் அறிவுக்கு பொருந்தவில்லை என்று நிராகரிக்கும் அறிஞர்கள்[?] வாழும் காலம். அடுத்து இவ்விரு சகாபிகள் அடங்கிய குழு ஏற்படுத்திய நெருக்கடி காரணமாகத்தான் குறைஷிகள், நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களிடையேயிருந்து தம்மிடம் (மதீனாவுக்கு) வருபவரை (அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட) அவர்களிடமே திருப்பியனுப்பி விட வேண்டும். என்ற ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தாங்கள் ஒரு பாதுகாப்பற்ற நிலையில் இருந்தாலும், இஸ்லாத்தை ஏற்று மதீனா நோக்கி வரும் முஸ்லிம்கள் மதீனாவில் அடைக்கலம் பெறும் அழகிய வழிமுறைக்கு வழிகாட்டிய இந்த வீரர்களின் தியாகம் மெய்சிலிர்க்க செய்கிறது.

வியாழன், 24 செப்டம்பர், 2009

ஆட்சியாளர்களுக்கு அஞ்சுபவர்களா சகாபாக்கள்...?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சகாபாக்களை மட்டம் தட்டும் நூலில் பின்வரும் செய்தியை பதிவு செய்துள்ளார்கள்;
அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிடவேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ, ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும் வரை மக்கள் இவ்வாறே கடைப்பிடித்து வந்தனர். (மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழுமூ திடலுக்கு வந்தபோது கஸீர் இப்னு ஸல்த் என்பவர் உருவாக்கிய மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் தொழுவதற்கு முன்பே அதில் ஏறமுயன்றார். நான் அவரின் ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் மேடையில் ஏறித் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்தலானார். அப்போது நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (நபி வழியை) மாற்றி விட்டீர்கள் என்று கூறினேன். அதற்கு மர்வான் 'நீ விளங்கி வைத்திருக்கும் நடைமுறை மலையேறிவிட்டது' என்றார். நான் விளங்காத (இந்தப் புதிய) நடைமுறையை விட நான் விளங்கி வைத்துள்ள நடைமுறை அல்லாஹ்வின் மீது ஆணையாகமிகச் சிறந்ததாகும் என கூறினேன். அதற்கு மர்வான் 'மக்கள் தொழுகைக்ப் பிறகு இருப்பதில்லை' எனவே நான் தொழுகைக்கு முன்பே உரையை அமைத்துக் கொண்டேன்' என்று கூறினார். [புஹாரி எண் 956 ]

இந்த செய்தி மிகச்சரியானதே! இச்செய்திக்கு அவர்கள் தந்துள்ள விளக்கம்தான் சகாபாக்களை கொச்சைப்படுத்துகிறது.
  • சிறந்த காலம் என்று நபி[ஸல்] அவர்களால் புகழ்ந்து கூறிய நபித்தோழர்களும், தாபியீன்களும் வாழும் காலத்தில் ஒட்டுமொத்த சமுதாயமும் குழுமியுள்ள பெருநாள் தொழுகையில் நபி[ஸல்] அவர்களின் நடைமுறை அப்பட்டமாக மீறப்படுகிறது. ஒரே ஒருவர் மட்டும் அதை எதிர்க்கிறார் என்பதை காண்கிறோம். ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு பயந்து கூட மார்க்கத்திற்கு முரணான செயல்களை அன்றைய மக்கள் சகித்துக்கொண்டிருக்கக்கூடும்.

என்று எழுதியுள்ளார்கள். திருக்குர்ஆண் விளக்க உரை என்ற பெயரில், உழைப்புக்கு உதாரணமாக நபி[ஸல்] அவர்களால் சொல்லப்பட்ட நபி தாவூத் [அலை] அவர்கள் குறித்து, சாமான்யர்களின் நிலங்களை கையகப்படுத்தியிருக்கக்கூடும் என்று கற்பனையை அள்ளித்தெளித்தது போன்று சகாபாக்கள் விசயத்திலும் 'ஆட்சியாளர்களுக்கு பயந்து மார்க்கத்திற்கு முரணான சட்டத்தை சகித்துக்கொண்டிருக்கக்கூடும் என்ற கற்பனையை அள்ளித் தெளித்து சகாபாக்கள் 'கோழைகள்' என்ற கருத்தை மறைமுகமாக விதைத்துள்ளார்கள். சகாபாக்கள் ஆட்சியாளர்களுக்கு அஞ்சி மார்க்கத்தை விடும் கோழைகள் அல்ல என்பதை மேற்கண்ட இந்த ஹதீஸில் அபூசயீத்[ரலி] அவர்களின் நடவடிக்கை நிரூபிக்கிறது. மர்வான் ஒரு ஆளுநராக இருந்தும்கூட அவர் நபிவழியை மாற்றுகிறார் என்ற மாத்திரத்தில் சட்டையை பிடிக்கும் துணிவு நபித்தோழருக்கு இருந்தது. ஆனால், இன்றும் கூட ஹனபியாக்கள் மர்வானின் வழியில் தொழுகைக்கு முன்பாகவே உரை நிகழ்த்துகிறார்களே! நாம் எத்துனை பேர் போய் அவர்களின் சட்டையை பிடித்து தடுத்து நிறுத்தினோம்..? இன்று ஆட்சியாளரும் இல்லையே நாம் அஞ்சுவதற்கு..? ஆக சாதாரண ஆலிம்ஷா நபிவழியை அப்பட்டமாக ஒவ்வொரு பெருநாளின் போதும் மீறுவதை தடுக்கமுடியாதவர்கள் , ஒரு ஆளுநரை சட்டையை பிடித்த சமுதாயத்தைச் நோக்கி 'ஆட்சியாளர்களுக்கு பயந்தவர்கள்' என்று முத்திரை குத்துவது வியப்பிற்குரியது.

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

பிளேக் நோய் பரவியிருந்த சிரியாவுக்கு செல்ல தயாரானார்களா உமர்[ரலி]...?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
உமர்[ரலி] அவர்கள் சிரியாவை நோக்கி பயணமானார்கள். சஃர்க் எனும் இடத்தை அடைந்தபோது அபூ உபைதாவும், அவரது சகாக்களும் வந்து சிரியாவில் பிளேக் நோய் ஏற்பட்டுள்ளதாக கூறினார்கள். என்ன செய்வது என்று உமர்[ரலி] அவர்கள், முஹாஜிர்களிடமும்-அன்சாரிகளிடமும் ஆலோசனை கேட்டபோது யாருக்கும் அதுபற்றிய விளக்கம் தெரியவில்லை.எனவே சிரியாவுக்கு செல்ல உமர்[ரலி] ஆயத்தமானார்கள். அப்போது வெளியூரிலிருந்து திரும்பி வந்த அப்துர்ரஹ்மான் இப்னு அவூப்[ரலி] அவர்கள் உமர்[ரலி] அவர்களை சந்தித்து ப்ளேக் நோய் தொடர்பான நபிமொழியை சொன்னார்கள். உமர்[ரலி] அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு மதீனா திரும்பினார்கள் என்ற புஹாரியின் 5729 ஹதீஸை அரைகுரைகுறையாக போட்டுவிட்டு,
  • சில விஷயங்கள் ஒரே ஒரு நபித்தோழருக்கு மட்டும் தெரிந்து மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
  • அப்துர்ரஹ்மான் இப்னு அவூப்[ரலி] அவர்கள் இந்த நபிமொழியை எடுத்துக்காட்டி இருக்காவிட்டால் உமர்[ரலி] உள்ளிட்ட நபித்தோழர்கள் சிரியா சென்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

என்று தங்களின் சொந்த கருத்தை திணித்துள்ளார்கள். முதலில் அவர்கள் பதிவு செய்த ஹதீஸின் முழுமையை கீழே படியுங்கள்;

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள்;

உமர் இப்னு கத்தாப்(ரலி) ஷாம் நாட்டை நோக்கி (மக்களின் நிலையை ஆராய்வதற்காக)ப் புறப்பட்டார்கள். 'சர்ஃக்' எனும் இடத்தை அடைந்தபோது (மாகாண) படைத் தளபதிகளான அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர்(ரலி) அவர்களைச் சந்தித்து ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள். அதற்கு உமர்(ரலி) 'ஆரம்பக் கால முஹாஜிர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்' என்று சொல்ல அவர்களை நான் (உமர்(ரலி) அவர்களிடம்) அழைத்து வந்தேன். அவர்களிடம் ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்து (அங்கு போகலாமா? மதீனாவுக்கே திரும்பிச் சென்றுவிடலாமா? என்று) ஆலோசனை கேட்டார்கள். இது தொடர்பாக முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர்களில் சிலர், 'நாம் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டுவிட்டோம். அதிலிருந்து பின்வாங்குவதை நாங்கள் பொறுத்தமாகக் கருதவில்லை' என்று கூறினார்கள். வேறு சிலர், 'உங்களுடன் மற்ற மக்களும் நபித்தோழர்களும் உள்ளனர். அவர்களையெல்லாம் இந்தக் கொள்ளைநோயில் தள்ளி விடுவதை நாங்கள் சரியென்று கருதவில்லை' என்று கூறினார்கள். அப்போது உமர்(ரலி), 'நீங்கள் போகலாம்' என்று சொல்லிவிட்டுப்பிறகு, 'என்னிடம் (மதீனாவாசிகளான) அன்சாரிகளை அழைத்து வந்தார்கள்' என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களிடம் உமர்(ரலி) ஆலோசனை கலந்தார்கள். அவர்களும் முஹாஜிர்களின் வழியிலேயே சென்று அவர்களைப் போன்றே கருத்து வேறுபட்டார்கள். அப்போதும் உமர்(ரலி), 'நீங்கள் போகலாம்' என்று சொல்லிவிட்டுப் பிறகு, மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களில் இங்கு உள்ளவர்களை என்னிடம் அழைத்துவாருங்கள்' என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களில் எந்த இருவருக்கிடையேயும் கருத்து வேறுபாடு எழவில்லை. அவர்கள் (அனைவரும்), 'மக்களுடன் நீங்கள் திரும்பி விட வேண்டும்; அவர்களை இந்தக் கொள்ளைநோயில் தள்ளிவிடக் கூடாது எனக் கருதுகிறோம்' என்றனர். எனவே, உமர்(ரலி) மக்களிடையே 'நான் காலையில் (என்) வாகனத்தில் (மதீனா) புறப்படவிருக்கிறேன்; நீங்களும் வாகனத்தில் புறப்படுங்கள்' என்று அறிவித்தார்கள். அப்போது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி), 'அல்லாஹ்வின் விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)?' என்று கேட்க, உமர்(ரலி), 'அபூ உபைதா! இதை உங்களைத் தவிர வேறேவரேனும் சொல்லியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஆம் நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறுபக்கம் வறண்டதாகவும் உள்ள இரண்டு கரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படி தான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள். வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் நீங்கள் மேய்க்கிறீர்கள், அல்லவா?' என்று கேட்டார்கள். அப்போது தம் தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அங்கு) வந்தார்கள். அவர்கள், 'இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்' என்று சொல்ல கேட்டேன்' என்று கூறினார்கள். உடனே உமர்(ரலி), (தம் முடிவு நபி(ஸல்) அவர்களின் வழி காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். [புஹாரி எண் 5729 ]

அன்பானவர்களே! நாம் 'ஹைலைட்' செய்துள்ளவைகளை கவனமாக படியுங்கள். சஃர்க் எனும் பகுதியில் உள்ள [அல்லது தன்னுடன் வந்த] முஹாஜிர் களிடமும்- அன்சாரிகளிடமும் மட்டுமன்றி, அப்பகுதியில் உள்ள மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்துவந்த குறைஷி பெரியவர்களிடமும் ஆலோசனை நடத்திய உமர்[ரலி] அவர்கள், மதீனா திரும்ப முடிவெடுத்து அறிவித்தபோது, அபூ உபைதா[ரலி] அவர்கள் உமர்[ரலி] அவர்களின் முடிவை ஆட்சேபித்து, அல்லாஹ்வின் விதியை கண்டா வேருண்டோடுகிறீர்கள் என்று கூறுகிறார்கள். இதிலிருந்து தெளிவாக தெரிகிறது உமர்[ரலி] அவர்கள் , அப்துர்ரஹ்மான் இப்னு அவூப்[ரலி] அவர்களை சந்திப்பதற்கு முன்பாகவே மதீனா செல்லும் முடிவை எடுத்துவிட்டார்கள் என்று! மேலும் தனது முடிவுக்கேற்ப நபிமொழியை செவிமடுத்தவுடன் ஆனந்தத்தில் அல்லாஹ்வை புகழ்ந்து மதீனா திரும்புகிறார்கள். ஆக, அப்துர்ரஹ்மான் இப்னு அவூப்[ரலி] அவர்கள் ஹதீஸை சொல்ல்லியிருக்காவிட்டால் உமர்[ரலி] அவர்கள் உள்ளிட்ட சகாபாக்கள் சிரியா சென்றிருப்பார்கள் என்று 'சகாபாக்களை மடம் தட்டும் நூலில் எழுதியது' தவறு என்பது தெளிவாகும். மேலும் இந்த பிளேக் நோய் பற்றிய ஆலோசனையை எதோ ஒட்டுமொத்த முஹாஜிர்களையும்- ஒட்டுமொத்த அன்சாரிகளையும் அழைத்துவைத்து உமர்[ரலி] ஆலோசனை செய்தது போலவும் அவர்களில் யாருக்குமே இந்த ஹதீஸ் தெரியவில்லை என்பது போலவும், அப்துர்ரஹ்மான் இப்னு அவூப்[ரலி] என்ற ஒரே ஒரு[?] சகாபிக்கு மட்டுமே இந்த ஹதீஸ் தெரிந்ததாகவும் வர்ணித்துள்ளார்கள். ஆனால் இதே கருத்துடைய ஹதீஸை வேறு சில சகாபிகளும் அறிவித்துள்ளார்கள்.
  • ஆமிர் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்கள்; (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து (பிளேக் போன்ற) கொள்ளை நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு உஸாமா(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது. அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது.... (அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்" என்று கூறினார்கள்" என்று பதிலளித்தார்கள்.ஆதாரம் புஹாரி எண் 3473 ]

இந்த ஹதீஸ் மூலம், ஆமிர் இப்னு ஸஅத்(ரலி),ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) உஸாமா இப்னு ஸைத்(ரலி) ஆகியோர்க்கு தெரிந்துள்ளதை அறியமுடிகிறது.

  • நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார்கள்; நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்" என்று தெரிவித்தார்கள். மேலும், 'கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்" என்று கூறினார்கள். [ஆதாரம்;புஹாரி எண் 3474 ]

இந்த ஹதீஸ் மூலம் , அன்னை ஆயிஷா[ரலி] அவர்களும் அறிந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. இதே பிளேக் நோய் பற்றி வேறு கருத்துகள் அடங்கிய ஹதீஸ்கள் பல நபித்தோழர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்ட ஏராளமான ஹதீஸ்கள் உண்டு. எனவே உமர்[ரலி] அவர்கள் ஆலோசனை செய்த சஃர்க் எனும் இடத்தில் இருந்த நபித்தோழர்கள் இந்த ஹதீஸ் பற்றி அறியாமல் இருந்திருக்கலாம். அதை வைத்து அப்துர் ரஹ்மான்[இப்னு] அவூப்[ரலி] அவர்களைத்தவிர வேறு எந்த சகாபிக்கும் தெரியவில்லை என்பது அப்பட்டமான பிழையாகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

அன்னையின் கருத்துக்கு 'அபத்தம்' கற்பிப்பதா..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சகாபாக்களை மட்டம் தட்டும் நூலில் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் சம்மந்தப்பட்ட கருத்தை பதிவு செய்துவிட்டு, அந்த ஹதீஸுக்கு தங்களின் அபரீத கற்பனையை விரிவுரையாக்கி அன்னையின் கருத்திற்கு அபத்தம் கற்பித்துள்ளார்கள். அந்த ஹதீஸ் இதோ;
  • ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்; பெண்கள் இன்று நடந்து கொள்ளும் முறையை நபி(ஸல்) அவர்கள் (இன்று கண்டிருந்தால்) பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள்.[புஹாரி எண் 869 ]

இந்த ஹதீஸுக்கு அவர்களின் வர்ணனை;

  • ஆயிஷா[ரலி] கூறுவது போன்ற மாற்றங்கள் ஏற்படும் என்பது இறைவனுக்கு நன்கு தெரியும்.பெண்களிடம் ஏற்படும் தவறான நடவடிக்கை காரணமாக பெண்களை பள்ளியில் அனுமதிக்கக்கூடாது என்று இறைவன் நினைத்திருந்தால் அதை அவன் தெளிவாக சொல்லியிருப்பான்.அதையறியாமல் இறைவன் சட்டமியற்றிவிட்டான் என்பது போன்ற கருத்து ஆயிஷா[ரலி] அவர்களின் கூற்றில் அடங்கியுள்ளது.
  • மேலும் மார்க்கம் முழுமையாகிவிட்டது என்று திருக்குர்ஆண் கூறுகிறது. மார்க்கம் முழுமையாகிவிட்டது என்றால் அதற்குப்பின் எந்த மாற்றமும் வராது என்பதுதான் பொருள்.இதற்கு எதிராகவும் ஆயிஷா[ரலி] அவர்களின் கூற்று அமைந்துள்ளது.

நபி[ஸல்] அவர்களின் காலத்திற்கு பின்னால் பெண்களின் நடவடிக்கையில் எதோ ஒரு மாற்றத்தை கண்ட அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் ,நபி[ஸல்]அவர்கள் (இன்று கண்டிருந்தால்) பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள். என்று சாதாரணமாக சொன்ன வார்த்தை இது. ஏனெனில், நபி[ஸல்] அவர்கள் மீண்டும் உலகுக்கு வரப்போவதுமில்லை. பெண்களின் நடவடிக்கையை பார்க்கப்போவதுமில்லை. பள்ளியை விட்டு தடுக்கப்போவதுமில்லை.முழுமையான மார்க்கத்தில் எந்த மாற்றமும் வரப்போவதுமில்லை. அப்படியிருக்க, பெண்களின் நடவடிக்கையை கண்டு ஆதங்கத்தில் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் சொன்ன வார்த்தையை அல்லாஹ்விற்கு முரணான சிந்தனை என்று வர்ணித்து அன்னையை குற்றவாளியாக்கிவிட்டு, கடைசியாக அந்த நூலில் இப்படி சமாளித்துளார்கள்;

  • ஆயிஷா [ரலி] இந்த கருத்தை மனதில் கொண்டுதான் இவ்வார்த்தைகளை கூறினார்கள் என்று புரிந்து கொள்ளக்கூடாது.பெண்களின் நடவடிக்கைகளை கண்டு மனம் வெதும்பி இந்த சொல்லை பயன்படுவிடார்கள் என்றுதான் நாம் நல்லெண்ணம் வைக்கவேண்டும்.

அன்னை[ஆயிஷா[ரலி] அவர்களின் மீதான இவர்களின் நல்லெண்ணம் உண்மையானால், அந்த ஹதீஸை அதுவும் 'பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை தடுத்தல்' என்ற பாடத்தின் கீழ் கொண்டு வந்தது ஏன்? பெண்கள் பள்ளிக்கு வந்ததை அன்னைஆயிஷா[ரலி] அவர்கள் தடுத்து போன்ற தோற்றத்தையும் தந்து, அன்னையவர்களின் கருத்துக்கு சுய கற்பனை வர்ணனை செய்துவிட்டு இறுதியாக 'நல்லெண்ணம் ' கொள்ளவேண்டுமாம்! சகாபாக்களின் கண்ணியம் எவ்வாறு பேணப்படுகிறது என்பதை மக்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறோம்.

திங்கள், 21 செப்டம்பர், 2009

சஹாபாக்களை பின்பற்றக்கூடாது என்பதற்கு அவர்களது 'அறியாமை' அளவுகோளாகுமா..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
இஸ்லாத்தின் அடிப்படை அல்-குர்ஆனும்-ஹதீஸும்தான். இவை இரண்டை மட்டுமே ஒரு முஸ்லிம் பின்பற்ற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்ககூடாது. இவையிரண்டும் அல்லாத வேறு எதனையும்-யாரையும் குறிப்பாக சகாபக்களைக்கூட பின்பற்றக்கூடாது என்பதற்கு சஹாபாக்களின் தவறுகள் என்று கருதப்படுபவைகளை பட்டியலிடவேண்டிய அவசியமில்லை. மாறாக குர்ஆனையும்-ஹதீஸையும் பின்பற்றுவதை வலியுறுத்தும் வசனங்களும், நபிமொழிகளும் ஏராளம் உண்டு. அவைகளை எடுத்துவைத்தே குர்ஆண்-ஹதீஸ் மட்டுமே பின்பற்றப்பட வேண்டியது என்பதை நிலை நாட்டமுடியும். நிலை இவ்வாறிருக்க சகாபாக்களை பின்பற்றக்கூடாது என்பதற்கு அவர்கள் செய்ததாக கருதப்படும் தவறுகளை மட்டுமல்லாது இன்னொரு முக்கியமான[?] அளவுகோலை வைக்கிறார்கள். அதாவது சஹாபாக்களில் பலருக்கு பல சட்டங்கள் தெரியவில்லை. எனவே இவர்களை எப்படி பின்பற்றுவீர்கள் என்று சொல்லி ஒரு பட்டியல் போடுகிறார்கள்;
  • ருஹுஉ செய்யும்போது கைகளை முட்டுக்கால் மீது வைக்கவேண்டும் என்ற சட்டம் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களுக்கு தெரியவில்லை.
  • முத்ஆ திருமணம் தடை செய்யப்பட்டது இப்னு அப்பாஸ்[ரலி] அவர்களுக்கு தெரியவில்லை.
  • தமத்துவு ஹஜ் அனுமதி பற்றி உமர்[ரலி] மற்றும் உஸ்மான்[ரலி] ஆகியோருக்கு தெரியவில்லை.
  • விந்து வெளியானாலும் வெளியாகாவிட்டாலும் குளிப்பு கடமை என்ற சட்டம் உஸ்மான்[ரலி], அலீ[ரலி] போன்ற சகாபக்களுக்கு தெரியவில்லை.
  • இஹ்ராம் கட்டிய நிலையில் திருமணம் செய்யக்கூடாது என்ற சட்டமிருக்க, இஹ்ராம் கட்டிய நிலையில் நபி[ஸல்] அவர்கள் திருமணம் செய்ததாக இப்னு அப்பாஸ்[ரலி] கூறுகிறார்.
  • குளிப்புக்கடமையான நிலையில் ஸஹர் நேரத்தை அடைந்தால் அதே நிலையில் ஸஹர் செய்யலாம் என்ற சட்டம் அபூ ஹுரைரா[ரலி], இப்னு அப்பாஸ்[ரலி] ஆகியோருக்கு தெரியவில்லை.
  • லுஹாத்தொழுகையை நபி[ஸல்] அவர்கள் தொழுதது ஆயிஷா[ரலி] மற்றும் இப்னு உமர்[ரலி] ஆகியோருக்கு தெரியவில்லை.
  • பிறரது இல்லத்தில் நுழைவது குறித்த சட்டம் உமர்[ரலி] அவர்களுக்கு தெரியவில்லை.
  • தயம்மும் சலுகை இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களுக்கு தெரிந்தும் மறுக்கிறார்.
  • பிளேக் நாய் வந்தால் என்ன செய்வது என்ற சட்டம் ஒரு ஸஹாபியை தவிர[?]யாருக்கும் தெரியவில்லை.
  • இஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசலாம் என்ற சட்டம் இன்னு உமர்[ரலி] அவர்களுக்கு தெரியவில்லை.

இவ்வாறாக பட்டியல் நீள்கிறது. தவ்ஹீதை அடிப்படையாக கொண்ட யாரும் நாம் அறிந்தவரை சகாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, குர்ஆணிலும்-ஹதீஸிலும் தெளிவாக கூறப்பட்ட விஷயங்கள் நீங்கலாக, எதற்கு விளக்கம் தேவையுள்ளதோ அவைகளுக்கு இன்றைய அறிஞர்களின் கருத்தைவிட சஹாபாக்களின் கருத்துக்கு முன்னுரிமை தரவேண்டும். ஏனெனில் அவர்கள் அரபியை தாய்மொழியாக கொண்டவர்கள்- நபி[ஸல்] அவர்களிடம் நேரடி பாடம் பயின்ற, நபி[ஸல்] அவர்களால் சிலாகித்து சொல்லப்பட்டவர்கள். இறையச்சத்திலும்-பேனுதளிலும்சிறந்தவர்கள் என்பதால்தான். சஹாபாக்களை பின்பற்றவேண்டும் என்று சொல்லும் சுன்னத் வல் ஜமாத்தினரில் சில பிரிவினர் கூட ஒரு குறிப்பிட்ட ஸஹாபியை பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. ஒட்டுமொத்த சகாபிகளையும் பின்பற்றவேண்டும் என்றே சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸஹாபியை பின்பற்ற வேண்டும் என்று சொன்னால்தான் 'நீங்கள் பின்பற்ற சொல்லும் சகாபிக்கு இன்னின்ன சட்டங்கள் தெரியவில்லை. எனவே எப்படி பின்பற்ற முடியும் என்று கேள்வி எழுப்ப வழியுண்டு. ஆனால் ஒட்டுமொத்த சகாபிகளையும் பின்பற்ற வேண்டும் எனும்போது ஒரு சகாபியிடம் கிடைக்காத சட்டத்தை வேறு ஒரு சகாபியிடம் பெற்றுக்கொள்ள முடியும். எனவே சகாபாக்களுக்கு பல்வேறு சட்டங்கள் தெரியவில்லை. எனவே அவர்களை பின்பற்ற கூடாது என்ற வாதம் சரியல்ல. மாறாக குர்ஆணை-ஹதீஸை பின்பற்ற வலியுறுத்தும் கருத்துக்களை எடுத்துக்காட்டியதோடு நிறுத்தப்படிருக்கவேண்டும்.

அடுத்து சகாபாக்களுக்கு சில சட்டங்கள் தெரியாமல் போனது அவர்களின் குற்றமா என்றால் இல்லை. எல்லா சகாபாக்களும் எல்லா நேரமும் நபி[ஸல்] அவர்களோடு ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை. சில நேரம் நபியவர்களோடு இருக்கும் அவர்கள் சில நேரம் தொழில்-உழைப்பு என்றும் சென்றிருக்கிறார்கள் . நபியவர்களின் அவையில் இல்லாத நேரத்தில் நபி[ஸல்] அவர்களால் கூறப்படும் சட்டத்தை ஆர்வத்தோடு கேட்டுத்தெரிந்து கொண்ட சான்றுகளும் உண்டு. மேலும் ஒரு சட்டத்தில் ஆரம்பநிலை ஒன்றாக இருக்கும்- பின்னர் மாற்றப்பட்ட நிலை ஒன்றாக இருக்கும். இதில் ஆரம்ப நிலையை மட்டுமே அறிந்த ஸஹாபி , மாற்றப்பட்ட நிலை அறியாத நிலையில், முதல் சட்டத்தை அமுல்படுத்துவதோ -அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதோ குற்றமாகுமா என்பதை சம்மந்தப்பட்டவர்கள் விளக்க கடமைப்பட்டுள்ளார்கள். எனவே சகாபாக்களை பின்பற்றக்கூடாது என்பதை வரவேற்கிறோம். அதற்காக சகாபாக்களை 'அறியாதவர்கள்' 'அறிந்தும் முரணாக செயல்பட்டார்கள் ' என்ற ரீதியில் வார்த்தைப் பிரயோகங்களை கையாள்வது யாராக இருந்தாலும் அதை தவிர்ந்து கொள்ள உபதேசிக்கிறோம். ஏனெனில் அனைத்தையுமறிந்த ஒருவர் இவ்வுலகில் இதுவரை பிறக்கவுமில்லை. இனி பிறக்கப்போவதுமில்லை. அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே!

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

லுஹாத் தொழுகையை மறுத்தார்களா அன்னை ஆயிஷா[ரலி]யும்-இப்னு உமர்[ரலி]யும்..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

லுஹாத் தொழுகை நபி[ஸல்] அவர்களால் காட்டித்தரப்பட்ட ஒரு தொழுகையாகும்.
  • அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். "ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும். 'ளுஹா' நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும். உறங்குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுது விடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் தோழர்(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்!" நூல்;புஹாரி எண் 1981 ]

இந்த பொன்மொழி லுஹாத் தொழுகை உண்டு என்பதையும் அத்தொழுகை 2 ரக்அத்துகள் என்பதையும் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. விஷயம் என்ன என்றால் , சகாபாக்களை மட்டம் தட்டும் நூலில், இந்த தொழுகையை சில நபித்தோழர்கள் அறியாததன் காரணத்தினால் அடியோடு மறுத்துள்ளார்கள் என்று கூறி அவ்வாறு மறுத்தவர்கள் அன்னை[ஆயிஷா[ரலி], இப்னு உமர்[ரலி] என்று போட்டு சில ஹதீஸ்களையும் போட்டுள்ளார்கள்.

அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் லுஹாத்தொழுகை குறித்து கூறிய தாக அவர்கள் வெளியிட்டுள்ள இரு ஹதீஸ்கள்;

  • ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழ நான் பார்த்ததில்லை. ஆனால் தொழுவேன்.[புஹாரி எண் 1177 ]

  • ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சில அமல்களைச் செய்ய விரும்புவார்கள். (ஆனால்) சில சமயம் அவற்றைச் செய்ய மாட்டார்கள். மக்களும் அதைச் செய்து அவர்களின் மீது அது அச்சமே இதற்கு காரணம். நபி(ஸல்) அவர்கள் ஒருபோதும் லுஹாத் தொழுததில்லை. நான் லுஹாத் தொழுது வருகிறேன். [புஹாரி எண் 1128 ]

இந்த இரு ஹதீஸ்களை கவனமாக பாருங்கள். லுஹாத் தொழுகை இல்லை என்று அன்னைஆயிஷா[ரலி] அவர்கள் சொல்லவில்லை. நபி[ஸல்] அவர்கள் லுஹாத் தொழுகை தொழுததில்லை அதற்கு காரணம் மக்கள் மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம்தான். என்று கூறிவிட்டு நான் லுஹாத் தொழுகை தொழுகிறேன் என்று கூறுகிறார்கள். ஆக அன்னையின் கருத்து லுஹாத்தொழுகை இல்லை என்பதல்ல. நபி[ஸல்] அவர்கள் தொழவில்லை என்பதுதான். உண்மை இவ்வாறிருக்க 'அடியோடு' மறுத்தார்கள் என்று கூறுவது எப்படி என்பதை சம்மந்தப்பட்டவர்கள் விளக்கவேண்டும்.

இப்னு உமர்[ரலி] அவர்கள் சம்மந்தமாக உள்ள ஹதீஸ்;

முவர்ரிக் அறிவித்தார். நீங்கள் லுஹாத் தொழுவது உண்டா? என்று இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'இல்லை' என்றார்கள். உமர் தொழுவார்களா? என்று கேட்டேன். அதற்கவர்கள் 'இல்லை' என்றார்கள். அபூ பக்ர்(ரலி தொழுவார்களா? என்று கேட்டேன். அதற்கும் 'இல்லை' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுவார்களா? என்று கேட்டேன். 'அது தெரியவில்லை' என்றார்கள். [புஹாரி எண் 1175 ]

இந்த செய்தியில் லுஹாத் தொழுகை இல்லை என்று இப்னு உமர்[ரலி] அவர்கள் சொல்லவில்லை. நபி[ஸல்] அவர்கள் தொழுதார்களா என்ற கேள்விக்கு 'தெரியவில்லை' என்று தான் பதிலளிக்கிறார்கள் . இது எப்படி மறுத்ததாக ஆகும்..?

நபி[ஸல்] அவர்கள் லுஹாத் தொழுகை தொழுதார்களா.. இல்லையா?

நபி[ஸல்] அவர்கள் லுஹாத்தொழுகை தொழுததாக உம்மு ஹானி[ரலி] அவர்களைத்தவிர வேறு யாரும் எமக்கு அறிவிக்கவில்லை என்று இப்னு அபீ லைலா(ரஹ்) என்பார் கூறுகிறார் [புஹாரி எண் 4292 ] மேலும், உம்மு ஹானி [ரலி] அவர்கள் சம்மந்தப்பட்ட ஹதீஸில்,

மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி(ஸல்) அவர்களை, அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) மறைத்துக் கொண்டிருக்க, அவர்கள் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது, அவர்களுக்கு நான் சலாம் உரைத்தேன். அவர்கள், 'யார் அது?' என்று கேட்டார்கள். நான், 'அபூ தாலிபின் மகள் உம்மு ஹானீ" என்று பதிலளித்தேன். உடனே அவர்கள், 'உம்மு ஹானீயே! வருக! வருக! (உங்களுக்கு நல்வரவு கூறுகிறேன்)" என்றார்கள். அவர்கள் குளித்து முடித்ததும் ஒரே ஆடையை (மேனியில்) சுற்றியவர்களாக எழுந்து நின்று எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! என் தாயின் மகன் (என் சகோதரர்) அலீ, நான் புகலிடம் அளித்திருக்கும் ஒரு மனிதரை ஹுபைராவின் மகனான இன்னாரை தான் கொல்லப் போவதாகக் கூறுகிறார்" என்று சொன்னேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உம்மு ஹானியே! நீ அபயம் அளித்தவருக்கு நாமும் அபயம் அளித்து விட்டோம் (எனவே கவலை வேண்டாம்)" என்று கூறினார்கள். (நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்ற) அந்த நேரம் முற்பகல் நேரமாக இருந்தது. [புஹாரி எண் 3171 ]

இந்த பொன்மொழியில், நபி[ஸல்]அவர்கள் எட்டுரக்அத்துகள் தொழுததாக வருகிறது. ஆனால் லுஹா தொழுகை இரு ரக்அத்துகள் என்று அபூ ஹுரைரா[ரலி] அவர்கள் அறிவிக்கும் செய்தி கூறுகிறது. எனவே நபி[ஸல்] அவர்கள் தொழுதது லுஹாத்தொழுகை அல்ல என்றும், உம்முஹானி[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களிடம் சென்ற நேரத்தையே இங்கே குறிப்பிடுகிறார்கள் என்றும் இந்த ஹதீஸுக்கு நிகழ்கால அறிஞர் ஒருவர் விளக்கமளித்தார். ஆக நபி[ஸல்] அவர்கள் லுஹாத்தொழுகை தொழுமாறு ஏவியதை எந்த சகாபியும் குறிப்பாக அன்னை ஆயிஷா[ரலி]யும்-இப்னு உமர்[ரலி]யும் மறுக்கவில்லை. ஆனால் நபி[ஸல்] அவர்கள் லுஹாத் தொழுகை தொழுதார்களா என்பதில் தான் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மட்டும் மாற்றுக்கருத்து கொள்கிறார்கள். எனவே 'அடியோடு'மறுத்தார்கள் என்பது தவறாகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

சனி, 19 செப்டம்பர், 2009

நபித்தோழர்கள் ஃபித்அத்தை உண்டாக்குவார்கள் என்று நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்தார்களா..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
நபி[ஸல்] அவர்களின் மறைவுக்கு பின்னால் நபித்தோழர்கள் சிலர் தவறான பாதைக்கு சென்றுவிடுவார்கள். அதற்காக தண்டிக்கப்படுவார்கள் என்று நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்திருப்பதாக கூறி சில ஹதீஸ்களை சகாபாக்களை மட்டம் தட்டும் நூலில் வெளியிட்டுள்ளார்கள்.

  • இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் (மறுமை நாளில்) காலில் செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும் விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்" என்று கூறிவிட்டு, பிறகு, 'எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தை சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீட்டுவோம். இது நம்முடைய பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும. அதனை நாம் நிறைவேற்றியே தீருவோம்" என்னும் (திருக்குர்ஆன் 21:104) இறைவசனத்தை ஓதினார்கள். முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம்(அலை) அவர்கள் ஆவார்கள். பிறகு, என் தோழர்களில் சிலர் (சொர்க்கத்திற்காக) வலப்பக்கமும், (சிலர் நரகத்திற்காக) இடப்பக்கமும் கொண்டு செல்லப்படுவார்கள். நான், 'இவர்கள் என் தோழர்கள்" என்று கூறுவேன். 'இவர்களைவிட்டு நீங்கள் பிரிந்ததிலிருந்து இவர்கள், தம் கால் சுவடுகளின் வழியே (எங்கிருந்து) வந்தார்களோ அந்த மதத்திற்குத்) திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்" என்று சொல்லப்படும். அதற்கு நான் நல்லடியாரான மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்கள் சொன்னதைப் போன்றே, '(இறைவா!) நான் இவர்களிடையே (உயிருடன்) வாழ்ந்து வந்த வரை நான் இவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்தபோது நீயே இவர்களைக் கண்கானிப்பவனாகி விட்டாய். ஒவ்வொரு விஷயத்தையும் நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய். நீ அவர்களைத் தண்டித்தாலும் அவர்கள் உன் அடிமைகள் தாம். (அதற்கும் உனக்கும் முழு உரிமையுண்டு.) அவர்களை நீ மன்னித்துவிட்டால் (அது உன் கருணையாகும். ஏனெனில்,) நீ வல்லோனும் விவேகம் மிக்கோனும். ஆவாய்" (திருக்குர்ஆன் 05: 117, 118) என்று சொல்வேன். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். [புஹாரி எண் 3349 ]

  • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்' என்பேன். அதற்கு இறைவன் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்' என்று சொல்வான். என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.
இந்த ஹதீஸ் மட்டுமன்றி இதுபோன்ற கருத்தைத்தரும் பல ஹதீஸ்களின் நம்பரையும் போட்டுள்ளார்கள். இந்த இரு ஹதீஸ்களும்[ அவர்களின் கருத்துப்பிரகாரம்] நபி[ஸல்] அவர்களின் மறைவுக்கு பின்னால் சகாபாக்கள், புதியவைகளை உருவாக்கியதோடு மதம் மாறியதாகவும் அதாவது இஸ்லாத்தை விட்டு சென்றதாகவும் கூறுகிறது. இந்த ஹதீஸ்களில் சொல்லப்பட்டவர்கள் சகாபாக்கள் என்றால், மதம் மாறிய ஒரு சகாபியின் பெயரையாவது அவர்கள் வெளியிட வேண்டும். ஆனால் இந்த ஹதீஸில் நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்தது சஹாபாக்களை அல்ல. மாறாக அபூபக்கர்[ரலி] ஆட்சிக் காலத்தில் மதம் மாறிய நயவஞ்சகர்களைத்தான் குறிக்கும் என்பதை புஹாரி 3447 வது ஹதீஸின் தொடரில் ,
தம் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றவர்கள் யாரெனில், அபூ பக்ர்(ரலி) அவர்களின் காலத்தில் மதமாறியவர்கள் தாம்! அபூ பக்ர்(ரலி) (போராடி) அவர்களை வீழ்த்திவிட்டார்கள். என்று கபீஸா இப்னு உக்பா(ரஹ்) அவர்கள் கூறிய கருத்தை இமாம் புஹாரி[ரஹ்] அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். மேலும் 'கவ்ஸர்' அருகே தடுக்கப்படும் சிலரை பார்த்து அவர்கள் என் தோழர் களாயிற்றே! என்று நபி[ஸல்] அவர்கள் சொல்லியதால் இது கண்டிப்பாக சகாபாக்களையே குறிக்கும் என்று வாதிடுவார்களானால், கீழ்கண்ட ஹதீஸையும் பார்க்கட்டும்;
  • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' நான் ('அல்கவ்ஸர்') தடாகத்தின் அருகில் இருந்தவாறு உங்களில் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பேன். அப்போது என்னை நெருங்கவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்' என்பேன். அதற்கு 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்கள் தங்கள் குதிகால்களின் மீது (தம் பழைய மதத்திற்கே) திரும்பச் சென்று கொண்டேயிருந்தார்கள்' என்று கூறப்படும். இதை அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.[புஹாரி எண் 6593 ]

இந்த ஹதீஸில் கவ்ஸரில் தடுக்கப்படுபவர்களை பற்றி ,' என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்' என்று நபி[ஸல்] அவர்கள் கூறுகிறார்கள். கவ்ஸரில் தடுக்கப்படுபவர்கள் சகாபாக்கள்தான் என்றால், சகாபாக்கள் மட்டும்தான் நபி[ஸல்] அவர்களின் சமுதாயமா? நாமெல்லாம் ஏன் உலகம் அழியும் வரை தோன்றவிருக்கும் முஸ்லிம்கள் நபியவர்களின் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் இல்லையா? என்பதையும் விளக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

வியாழன், 17 செப்டம்பர், 2009

தயம்மும் சலுகையை மறுத்தார்களா இப்னு மஸ்வூத்[ரலி]..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) மற்றும் அபூ மூஸல் அஷ்அரி(ரலி) ஆகிய இருவருடன் அமர்ந்திருந்தேன். அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்(ரலி) அவர்களிடம், 'குளிப்புக் கடமையானவர் ஒரு மாத காலம் வரை தண்ணீரைப் பெறவில்லையானால் அவர் தயம்மும் செய்து தொழ வேண்டியதில்லையா? 'மாயிதா' என்ற அத்தியாயத்தில் வரும், 'நீங்கள் தண்ணீரைப் பெறவில்லையானால் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்யுங்கள்' என்ற வசனத்தை என்ன செய்வீர்கள்?' என்று கேட்டதற்கு, 'இந்த விஷயத்தில் பொது அனுமதி கொடுக்கப்பட்டால், தண்ணீர் கொஞ்சம் குளிராக இருக்கும் போதெல்லாம் (மக்கள்) தண்ணீரில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு மண்ணில் தயம்மும் செய்து விடுவார்கள்' என்று அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். அப்போது 'இதற்காகத்தான் தயம்மும் செய்வதை நீங்கள் வெறுத்தீர்களா?' என்று நான் கேட்டதற்கு 'ஆம்!' என்று பதிலளித்தபோது, 'என்னை ஒரு வேலைக்காக நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தபோது எனக்குக் கிடைக்கவில்லை. எனவே பிராணிகள் மண்ணில் புரளுவது போன்று புரண்டேன். இச்செய்தியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளால் பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் இரண்டு கைகளையும் தட்டிவிட்டு, தங்களின் வலக்கரத்தால் இடது புறங்கையைத் தடவினார்கள். அல்லது தங்களின் இடக்கரத்தால் வலப்புறங்கையைத் தடவினார்கள். பின்னர் இரண்டு கைகளால் தங்களின் முகத்தைத் தடவிவிட்டு 'இப்படிச் செய்வது உமக்குப் போதுமானதாக இருந்தது' என்று கூறினார்கள்' என்ற செய்தியை 'உமர்(ரலி) அவர்களிடம், அம்மார் சொன்னதை நீங்கள் கேள்விப்படவில்லையா?' என அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, 'அம்மார் சொன்னதில் உமர்(ரலி) திருப்திப்படவில்லை' என்பது உமக்குத் தெரியாதா? என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) திரும்பக் கேட்டார்" என ஷகீக் அறிவித்தார்.
நூல்; புஹாரி எண் 347

இந்த ஹதீஸை முன்வைத்து, அல்லாஹ்வும் அவனது தூதர்[ஸல்] அவர்களும் வழங்கிய சலுகையான தயம்மும் செய்வதை இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் மறுக்கிறார்கள். உரிய ஆதாரங்களை அபூமூஸா[ரலி] அவர்கள் முன்வைத்தபின்னும் தவறான காரணம் கூறி இப்னு மஸ்வூத் [ரலி] அவர்கள் தன் முடிவில் நீடிக்கிறார்கள். சொந்த யூகத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கும் மனப்பான்மை தலை சிறந்த நபித்தோழரிடம் காணப்பட்டால் அது எத்தகைய விளைவை ஏற்ப்படுத்தும்..? இன்னும் இதுபோல் எத்தனை தீர்ப்புகள் அவரால் அளிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாதா? என்றெல்லாம் சகாபாக்களை மட்டம் தட்டும் ஒரு நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். நன்றாக கவனிக்கவேண்டும். முதலாவதாக தயம்மும் சம்மந்தமான வசனத்தையோ, அதுதொடர்பான நபிமொழியையோ இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் மறுக்கவில்லை. இந்த சலுகை இருப்பதை ஏற்றுக்கொண்ட அவர்கள்,
'இந்த விஷயத்தில் பொது அனுமதி கொடுக்கப்பட்டால், தண்ணீர் கொஞ்சம் குளிராக இருக்கும் போதெல்லாம் (மக்கள்) தண்ணீரில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு மண்ணில் தயம்மும் செய்து விடுவார்கள்' என்று பேணுதல் அடிப்படையில் தன் கருத்தை சொல்கிறார்கள். இவ்வாறு நபி[ஸல்] அவர்களால் சொல்லப்பட்ட சட்டத்திற்கு பேணுதல் அடிப்படையில் சகாபாக்கள் கருத்து சொல்லி அதை நபி[ஸல்] அவர்கள் அங்கீகரித்த சான்று உண்டு. இதோ;

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அபூஹுரைரா!" (என்று என்னை அழைத்து,) தம் காலணிகள் இரண்டையும் என்னிடம் கொடுத்து, "இவ்விரு காலணிகளையும் கொண்டு செல்! வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று தமது உள்ளத்தால் உறுதியாக நம்பி சான்று கூறுகின்ற எவரையும் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்கு சுவர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்!" என்று கூறினார்கள்.நான் திரும்பி வந்தபோது உமர் (ரலி) அவர்களையே முதலில் சந்தித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், "இந்தக் காலணிகள் யாவை அபூஹுரைரா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலணிகள். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சாட்சியம் கூறுகின்ற எவரை நான் சந்தித்தாலும் அவருக்கு சுவர்க்கம் கிடைக்கும் என்ற நற்செய்தி கூறுமாறு சொல்லி இக்காலணிகளை (அடையாளமாக)க் கொடுத்து என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்" என்று சொன்னேன்.உடனே உமர் (ரலி) அவர்கள் தமது கரத்தால் எனது மார்பில் அடித்தார்கள். நான் மல்லாந்து விழுந்தேன். "திரும்பிச் செல்லுங்கள் அபூஹுரைரா!" என்று சொன்னார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன்.எனக்கு அழுகை அழுகையாக வந்தது. என்னைப் பின் தொடர்ந்து வந்த உமரும் அங்கே எனக்குப் பின்னால் வந்து நின்றார். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஹுரைரா! உமக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். நான் "உமரைச் சந்தித்து நீங்கள் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை அவரிடம் தெரிவித்தேன். அவர் என் மார்பில் ஓர் அடி அடித்தார். நான் மல்லாந்து விழுந்து விட்டேன். பிறகு ‘திரும்பி செல்லுங்கள்’ என்று கூறினார்" என்றேன். அப்போது உமர் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமரே! ஏன் இவ்வாறு செய்தீர்?" என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று உள்ளத்தால் உறுதிகொண்ட நிலையில் சாட்சியம் சொல்பவர் எவரைச் சந்தித்தாலும் அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுமாறு கூறி உங்கள் காலணிகளைக் கொடுத்து நீங்கள்தாம் அபூஹுரைராவை அனுப்பிவைத்தீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,"ஆம்" என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "அவ்வாறு செய்யாதீர்கள்! ஏனெனில், மக்கள் அந்த ஒன்றையே சார்ந்து (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன்; அவர்கள் (நற்)செயல் புரிய விட்டு விடுங்கள்" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறே அவர்களை விட்டு விடுங்கள் (அவர்கள் நற்செயல்கள் செய்யட்டும்)" என்று சொன்னார்கள்.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).
ஆதாரம்;முஸ்லிம்எண் 46

இந்த பொன்மொழியை கவனமாக படியுங்கள்! நபி[ஸல்] அவர்கள் ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அதை மக்கள் மத்தியில் வைக்கப்பட்டால், நாம்தான் ஏகத்துவத்தை உறுதியாக நம்பி அதற்குசாட்சி சொல்லக் கூடியவர்களாக இருக்கிறோமே! நமக்குத்தான் சொர்க்கம் உறுதி என்று நபி[ஸல்] அவர்களே சொல்லிவிட்டார்களே! என்ற மெத்தனத்தின் காரணமாக அமல் செய்வதில் மக்கள் பாராமுகமாக இருந்துவிடுவார்கள் என்று அஞ்சிய உமர்[ரலி] அவர்கள் தன் சொந்த கருத்தைத்தான் 'பேணுதல்' அடிப்படையில் நபி[ஸல்] அவர்களிடம் சொன்னபோது அதை நபி[ஸல்] அவர்கள் அங்கீகரிக்கிறார்கள் என்றால், நபித்தோழர்கள் சட்டத்தை மறுக்காமல் பேணுதல் அடிப்படையில் சொல்லும் கருத்துக்கு நபி[ஸல்] அவர்களின் அங்கீகாரம் உள்ளது என்பதை விளங்கிக்கொள்ளலாம். ஒரு வாதத்திற்கு இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் சொன்னது இந்த விசயத்தில் தவறு என்று வைத்துக்கொண்டாலும், 'இன்னும் இது போன்று எத்தனை விசயத்தில் தவறான தீர்ப்பு வழங்கினார்களோ..? என்ற சந்தேகத்தை ஒரு நபித்தோழர் மீது ஏற்படும் வகையில் வார்த்தை பிரயோகங்கள் கையாளப்பட்டிருப்பது உள்ளபடியே வேதனைக்குரியது.

சஹாபாக்கள் தொழுகையை பாழடித்தார்களா?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சஹாபாக்களை மட்டம் தட்டும் ஒரு நூலில், நபி[ஸல்] அவர்களின் காலத்திற்கு பின்னால் சஹாபாக்கள் தொழுகையை பாழடித்துவிட்டார்கள் என்று கூறி அதற்கு சான்றாக அனஸ்[ரலி] அவர்கள் சம்மந்தப்பட்ட இரு ஹதீஸ்களை வெளியிட்டுள்ளார்கள்.
  • கைலான் அறிவித்தார். 'நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தவற்றில் எதனையும் (இன்று) என்னால் காண முடியவில்லை' என்று அனஸ்(ரலி) குறிப்பிட்டார்கள். 'தொழுகை இருக்கிறதே' என்று அவர்களிடம் கேட்கப் பட்டது. 'அதில் கூட செய்வதையெல்லாம் நீங்கள் (கூடக் குறைய) செய்து விடவில்லையோ? எனத் திருப்பிக் கேட்டார்கள்.

ஆதாரம்; புஹாரி எண் 529

  • ஸுஹ்ரீ அறிவித்தார். அனஸ் இப்னு மாலிக்(ரலி) 'டமாஸ்கஸ்' நகரிலிருக்கும்போது நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் அழுது கொண்டிருந்தனர். 'ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நான் கண்டவைகளில் இந்தத் தொழுகையைத் தவிர வேறு எதனையும் என்னால் (இன்றைய சமூகத்தில்) காண முடியவில்லை. அந்தத் தொழுகையும் கூட பாழ்படுத்தப் பட்ட நிலையிலுள்ளது' என அனஸ்(ரலி) கூறினார்.

ஆதாரம்;புஹாரி எண் 530

நபித்தோழர்கள் தொழுகையை பாழடித்துவிட்டார்கள் என்பதற்கு சான்றாக வைத்த இரு ஹதீஸ்களில் இரண்டவாது ஹதீஸில், தொழுகையை பாழடித்தது எந்த சமூகம் என்று தெளிவாக விளங்குகிறது. அனஸ்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்கள் மரணத்திற்கு பின்னால் வாழ்ந்த மக்களிடையே 'நபி[ஸல்] அவர்கள் காலத்திய நடைமுறைகள் இல்லாமையை குறிப்பிடும்போது, தொழுகையும் பாழடிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். நபி[ஸல்] அவர்கள் காலத்திற்கு பின்னால் வாழ்ந்த சமூகம் அதிலும் குறிப்பாக டமாஸ்கஸில் வாழ்ந்த சமூகத்தினர் முழுக்க முழுக்க நபித்தோழர்கள் என்று நிரூபிக்கமுடியுமா? நபித்தோழர்கள் சிலர் இருந்திருக்கலாம். ஆக, அடுத்த தலைமுறையினர் செய்த தவறை சகாபாக்களோடு முடிச்சுப்போட்டு 'பார்த்தீர்களா நபித்தோழர்கள் செய்த வேலையை' என்று கூறுவது, அமல்களே வாழ்க்கையாக கொண்ட அந்த நல்லடியார்களை இழிவுபடுத்துவதல்லவா? மேலும் சில மஸாயில்களில் மாறு செய்துவிட்டார்கள் என்று சில நபித்தோழர்கள் பெயரை குறிப்பிட்டு சொல்லும் அந்த நூலாசிரியர், இதில் சஹாபாக்கள் தொழுகையை பாழடித்தார்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்வதன் மூலம் , நபி[ஸல்] அவர்கள் காலத்திற்கு பின்னால் வாழ்ந்த நபித்தோழர்கள் அனைவரையும் இழிவுபடுத்துவதல்லவா இது? மேலும், உமர்[ரலி] அவர்கள் ஆட்சிக்காலத்தில் மக்கள் 20 ரக்அத்துகள் தராவீ ஹ தொழுதார்கள் என்று மாற்று கருத்துடையவர்கள் எடுத்துவைத்தபோது, மக்கள் செய்தால் அதற்கு எப்படி உமர்[ரலி] பொறுப்பாக முடியும் என்று மறுப்புசொன்னவர்கள், இன்று நபி[ஸல்] அவர்களுக்கு பின்னால் வாழ்ந்த சமூகத்தில் யாரோ செய்த செயலுக்கு அன்றைய காலத்தில் வாழ்ந்த சஹாபாக்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்று சிந்திக்க மறந்ததேன்..? மேலும் இப்படி ஒரு நிலை உள்ளதே என்று வருந்தும் அனஸ்[ரலி] அவர்களும் ஒரு சகாபிதானே! ஆக, கண்பார்வையில்லா நிலையிலும் கடமையை செய்யும் அளவுக்கு சஹாபாக்கள் அமல்களில் கவனமுடையவர்கள். அப்படிப்பட்ட அந்த மேதைகளை அமல்களை பெயரளவுக்கு செய்துவரும் நாம் 'அமல்களை பாழாக்க்கியவர்கள்' என்று விமர்சிப்பது வேடிக்கையானது வியப்பிற்குரியது!

புதன், 16 செப்டம்பர், 2009

இஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசுவதை தடுத்தார்களா இப்னு உமர்[ரலி]..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
இஹ்ராம் அணிந்த பின் நறுமணம் பூசக்கூடாது என்பது அனைவரும் அறிந்த விஷயமே! ஆனால் இஹ்ராம் அணிவதற்கு முன்பாக நறுமணம் பூசுவதற்கு எந்த தடையும் இல்லாத நிலையில், இப்னு உமர்[ரலி] அவர்கள் 'இஹ்ராமுக்கு முன்னால் நறுமணம் பூசுவது கூடாது என்று தீர்ப்பளித்து வந்தார்கள் என்று எழுதிவிட்டு அதற்கான எந்த ஆதாரத்தையும் முன் வைக்காமல் , சகாபாக்களை மட்டம் தட்டும் ஒரு நூலில் குறிப்பிட்டுவிட்டு, அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் இப்னு உமர்[ரலி] அவர்களின் நிலைப்பாட்டை மறுக்கும் மூன்று ஹதீஸ்களை குறிப்பிட்டுள்ளார்கள். அதில் ஒன்று கீழே;

("நான் நறுமணப் பொருளைப் பயன்படுத்திக் காலையில் இஹ்ராம் அணிந்தவனாக இருக்க விரும்பவில்லை" என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறியபோது) 'அல்லாஹ் அப்துர் ரஹ்மானின் தந்தைக்கு ரஹ்மத் செய்வானாக! நான் நபி(ஸல்) அவர்களுக்கு மணப் பொருட்களைப் பூசுவேன். அவர்கள் தங்களின் மனைவியருடன் இரவு தங்கிவிட்டுப் பின்னர் காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து நறுமணம் கமழும்' என ஆயிஷா(ரலி) கூறினார்" என முஹம்மத் இப்னு முன்தஷிர் அறிவித்தார்.

ஆதாரம்;புஹாரி எண் 267

இந்த பொன்மொழியை கவனமாக படியுங்கள். இப்னு உமர்[ரலி] அவர்கள் இஹ்ராமுக்கு முன்னால் நறுமணம் பூசக்கூடாது என்று யாரையேனும் தடுத்ததாக அல்லது அப்படிப்பட்ட கேள்விக்கு தீர்ப்பளித்ததாக இருக்கிறதா? இல்லை. மாறாக, ("நான் நறுமணப் பொருளைப் பயன்படுத்திக் காலையில் இஹ்ராம் அணிந்தவனாக இருக்க விரும்பவில்லை"
என்று தன்னளவில் சொல்கிறார்கள். இது எப்படி மார்க்கத்திற்கு முரணாகும்..? மார்க்கம் அனுமதித்த ஒரு பொருளை தனக்கு விருப்பமில்லை என்பதால் தவிர்ந்து கொள்வது மார்க்க அடிப்படையில் ஹராமா? என்பதை சகாபாக்களை மட்டம் தட்டுபவர்கள் உரிய சான்றுகளுடன் முன்வைப்பார்களா?

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

படைக்களத்திலும் பாசத்தை பொழிந்தவர்!

பத்ர் போரின் போது நபி[ஸல்] அவர்கள் முஸ்லிம்களின் படையை அணிவகுத்து நிற்கச்செய்தார்கள். படையினரை சரிசெய்வதற்காக ஒரு குச்சியை எடுத்து, வரிசையில் சரியாக நிற்காத ஸவ்தா இப்னு கஸிய்யா[ரலி] அவர்களின் வயிற்றில் குச்சியால் லேசாக குத்தி சரியாக நிற்கும்படி பணித்தார்கள். அப்போது ஸவ்தா இப்னு கஸிய்யா[ரலி] அவர்கள், இறைத்தூதரே! எனக்கு நீங்கள் துன்பம் தந்துவிட்டீர்கள்! எனவே நான் அதற்கு பரிகாரம் காண நாடுகிறேன் என்றார்கள். உடனே நபி[ஸல்] அவர்கள் தனது வயிற்றைக்காட்டிபரிகாரம் தேடிக்கொள்ளுங்கள் என்றார்கள். உடனே ஸவ்தா இப்னு கஸிய்யா[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்களை கட்டியணைத்து அவர்களின் வயிற்றில் முத்தமிட்டார்கள். இதைக்கண்ட நபி[ஸல்] அவர்கள், இப்படி செய்ய உம்மை தூண்டியது எது? என்று வினவினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதரே! இன்றைய நிலையை நீங்கள் அறிவீர்கள். எனவே உங்களின் தோலுடன் இணைந்து பிரிவதையே நான் விரும்பினேன் என்று ஸவ்தா இப்னு கஸிய்யா[ரலி] அவர்கள் கூறினார்கள். நபி[ஸல்] அவர்கள் ஸவ்தா இப்னு கஸிய்யா[ரலி] அவர்களுக்காக துஆ செய்தார்கள்.

ஆதாரம்; தப்ரானி
பத்ர் களத்தில் முஸ்லீம் அணியினர் வெற்றி அல்லது வீரமரணம் என்ற இரண்டில் ஒன்றை எதிர்பார்த்தவர்களாக நின்ற நேரத்தில், ஒரு வேளை மரணம் நம்மை தழுவும் நிலை வரலாம் . எனவே நம்முடைய இறப்பிற்கு முன்பாக நம் உயிரினும் மேலான இறைத்தூதர் அவர்களின் திருமேனியை ஆரத்தழுவி நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்வோம் என்று ஸவ்தா இப்னு கஸியா[ரலி] அவர்கள் என்னி, நபி[ஸல்] அவர்களை ஆரத்தழுவி முத்தமிடுகிறார்கள் எனில், தங்களின் உயிர் இந்த பத்ர் களத்தில் போவதை பற்றி அவர்களுக்கு கவலையில்லை. தங்களின் உயிரினும் மேலான நபியை பிரிவது குறித்தே அங்கே சிந்தித்தார்கள் என்பதை பார்க்கும் போது அந்த தியாக சீலர்களின் வாழ்க்கை உள்ளபடியே நம்மை மெய் சிலிர்க்கச்செய்கிறது.